தொழிலாளர் தினத்தில் தோழர்களுக்கு தங்கம்!



‘தமிழ்த்தேசிய சலனப்படம் 100 ஆண்டு’ விழாவை நடத்த உள்ளது இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் நிறுவனராக இருக்கும் ‘உலகாயுதா’ அமைப்பு. 1916ஆம் ஆண்டில், ‘கீசக வதம்’ என்கிற முழு நீள சலனப்படத்தை இயக்கி, தயாரித்து தென்னிந்தியாவுக்கே சினிமாவை அறிமுகப்படுத்தியவர் ஆர். நடராஜ முதலியார். இப்போது நூற்றாண்டு நடக்கிறது.

‘உலகாயுதா’, தமிழின் முதல் பேசும் படம் வெளியான 75ஆம் ஆண்டுவிழாவின்போது 75 சினிமா தொழிலாளர்களுக்கு தலா ஒரு சவரன் தங்கப்பதக்கம் வழங்கி பெருமைப்படுத்தியது. இப்போது 100 பேருக்கு வழங்க இருக்கிறது. தமிழ் சினிமாவில் அங்கம் வகிக்கும் 33 அமைப்புகளைச்சேர்ந்த மூத்த தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நூறு சவரன் தங்கப்பதக்கத்துக்கான செலவை விஜய் சேதுபதி ஏற்றுக்கொண்டிருக்கிறார்.

“எனக்கு சினிமாதான் பணம் கொடுத்தது. என்னால் முடிந்ததை மூத்த தொழிலாளர்களுக்கு தருவதில்  மகிழ்ச்சி யடைகிறேன்’’ என்கிறார் விஜய் சேதுபதி.மே முதல்நாள் தொழிலாளர் தினத்தன்று சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் விழா நடக்க உள்ளது.

“இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னையில் மே தினத்தைக் கொண்டாடிய சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் பெயரில் விழா மேடை அமைக்கிறோம். தமிழ் சினிமாவுக்கான முதல் தொழிலாளர் சங்கத்தை  உருவாக்கிய நிமாய் கோஷ், எம்.பி.சீனிவாஸ் ஆகியோரது  உருவப்படங்கள்  திறந்து வைக்கப்படும்’’ என்றார் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன். 

- நெல்பா