ஆலமரத்தில் ஆடும் மலபார் அழகி!



அவந்திகா மோகன்! ‘மிஸ் மலபார் 2011’ அழகி பட்டம் வென்றவர். மலையாளத்தில் துல்கர் உட்பட முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடிக்கொண்டிருந்தவரை ‘ஆலமரம்’ படத்துக்காக கோடம்பாக்கத்தில் களமிறக்கியிருக்கிறார் இயக்குனர் துரை.

 “என் தமிழ் கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணிக் கொள்ளுங்கள்” என்று உடைந்த மொழியில் பேச ஆரம்பித்தார். “மிஸ் மலபார் பட்டம் வாங்கிய கையோடு மலையாளத்தில் கட கடன்னு ஐந்து படங்கள் முடித்தேன்.

அந்த சமயத்தில்தான் இயக்குனர் துரை யிடமிருந்து அழைப்பு வந்தது. தமிழ் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று காத்திருந்த எனக்கு, கரும்பு தின்னக் கூலியா? என உடனே கமிட் பண்ணின படம்தான் இது. ஹாரர், சஸ்பென்ஸ் கலந்த இதில் லவ்வுக்கும் முக்கியத்துவம் இருக்கும். டைரக்டர் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவத்தை மையமாகக் கொண்ட கதை என்பதால் ஃப்ரேம் பை ஃப்ரேம் செதுக்கியிருக்கிறார்.

இதுல என்னுடைய கேரக்டர் பேர் மலர். சம்பிரதாயத்துக்கு என்றில்லாமல் ஹீரோயினுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்க வேண்டுமோ அவ்வளவு முக்கியத்துவம் என்னுடைய ரோலுக்கு இருக்கும். எனக்கு ஜோடியாக ஹேமந்த் நடிக்கிறார்.

இது குடும்பமாக பார்க்க வேண்டிய படம் என்பதால் படத்துல கிளாமர் என்ற பேச்சுக்கே இடமில்லை. க்ளைமாக்ஸில் ஆக்ஷன் காட்சியில் நடித்திருக்கிறேன். நான் துபாய் ரிட்டர்ன் என்பதால் மலையாளமே எனக்கு தகராறு. தமிழ் சொல்லவே வேண்டாம். இயக்குனர் துரைதான் தமிழ் சொல்லிக் கொடுத்தார். எனக்கும் தமிழ் பேச வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால் நீண்ட டயலாக்கையும் எளிதாகப் பேசி நடிக்க முடிந்தது. அந்த வகையில் என்னுடைய முதல் தமிழ் படத்துக்காக காத்திருக்கிறேன்” என்கிறார் அவந்திகா மோகன்.

-எஸ்