மைண்ட்ஃபுல் ஈட்டிங் அவசியமா?



‘உணவே மருந்து’ இது எல்லோருக்கும் தெரியும்.  நம்முடைய சமையல் அறையில் இருக்கும் மசாலாக்கள் முதல் நாம் உண்ணும் உணவு வரை அனைத்துமே நம் ஆரோக்கியம் சார்ந்தது. எப்படி வாகனங்களுக்கு பெட்ரோல் அவசியமோ அதே போல் நம்முடைய உடலுக்கான பெட்ரோல் உணவு.
ஆனால் அதை நாம் ஆரோக்கியமாக சிந்தித்து சாப்பிடுகிறோமா என்பது தான் இன்றைய கேள்வி. உணவினை கவனத்துடன் சாப்பிடுவது குறித்து உணர்த்தும் வகையில் கலிஃபோர்னியா பாதாம் வாரியத்தின் சார்பில் நடைபெற்ற சிறந்த உணவிற்கான முன்னுரிமை நிகழ்ச்சியில் ‘மைண்ட்ஃபுல் ஈட்டிங்’ குறித்து விளக்கம் அளித்தார் உட்டச்சத்து நிபுணர் ஷீலா கிருஷ்ணசாமி.

‘‘கோவிட் முன்பு வரை நாம் என்ன சாப்பிட்டு வந்தோம் என்பதைப் பற்றி யோசித்தது இல்லை. கோவிட் இரண்டு வருடம் ஆரோக்கியம் அவசியம் என்பதை நமக்கு உணர்த்தியது. அதனால் ஆரோக்கிய உணவினை தேடித் தேடி சாப்பிட ஆரம்பித்தோம். அதன் பிறகு எல்லாம் பழைய நிலைக்கு வந்தாலும், மக்களுக்கு உணவின் மேல் இருக்கும் ஈர்ப்பு குறையவில்லை. அவர்களின் தேவைகளை அறிந்து சென்னையில் மட்டுமில்லை பல ஊர்களிலும் அதிகமான உணவகங்கள் பெருகிவிட்டன.

அதற்கு கைகொடுக்கும் வகையில் உணவு ஆப்களும் செயல்பட்டு வருகிறது. போதாக் குறைக்கு உணவகங்கள் குறித்து வீடியோக்களும் சமூகவலைத்தளங்களில் அதிகரித்து விட்டது. முழுமையான உணவுகளை விட ஸ்னாக்ஸ் வகை உணவுகளைதான் மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். காரணம், வேலையில் இருக்கும் நேரத்தில் மதிய உணவு சாப்பிட்டாலும், மாலை நான்கு மணிக்கு லேசான பசி எடுக்கும். அந்த நேரத்தில் நாம் சாப்பிடும் உணவினை சரியான முறையில் சாப்பிடுகிறோமா என்று யாருமே யோசிப்பதில்லை. டீக்கடையில் கிடைக்கும் பஜ்ஜி, போண்டா, சமோசா போன்ற உணவுகளை தான் நாம் அதிகம் விரும்புகிறோம்.

இதில் சின்ன மாற்றங்களை செய்தால் போதும். அதன் மூலம் என்ன உணவினை தேர்வு செய்து சாப்பிட வேண்டும் என்பதை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்’’ என்றவர் உணவினை தேர்வு செய்யும் முறையினை பற்றி விவரித்தார்.

‘‘எல்லாமே நம்முடைய கையில் தான் உள்ளது. சரியான உணவினை நாம் தேர்வு செய்து சாப்பிடும் போது கண்டிப்பாக ஆரோக்கியம் கியாரன்டி. இன்றைய காலக்கட்டத்தில் மைண்ட்ஃபுல் ஈட்டிங் என்பது பலரின் தாரக மந்திரமாக மாறிவருகிறது. நமக்கான ஆரோக்கியம் நம் கண் முன்னே தான் உள்ளது. ஆனால் பல கார்ப்பரேட் நிறுவனத்தில் ஃபுட் கோர்ட் என்பது இருக்கும். அதில் அனைத்து ரகமான உணவுகள் இருக்கும். குறிப்பாக எண்ணையில் பொரிக்கப்பட்ட உணவுகள், மைதா மற்றும் அதிக கொழுப்பு கொண்ட உணவுகள்.

மக்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். அந்த நேரத்தில் நாம் நம்முடைய கையில் ஸ்னாக்ஸ் உணவுகளை கொண்டு சென்றால், இது போன்ற கொழுப்பு நிறைந்த உணவினை தவிர்க்கலாம். மேலும் அந்த நேரத்திற்கான பசியினை ஆற்றக்கூடிய சக்தி இதற்குள்ளது. இதற்கு அதிகமாக சமைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. மேலும் இது போன்ற ஸ்னாக்ஸ் மட்டுமில்லாமல் அன்றாடம் மூன்று வேளையும் சாப்பிடக்கூடிய உணவு மேல் கவனம் கொள்ள வேண்டும்’’ என்றவர் உடல் எடையினை எவ்வாறு கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் விவரித்தார்.

‘‘நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை கவனத்தில் கொண்டாலே நம்முடைய உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும். இன்றைய காலக்கட்டத்தில் பலர் டி.வி அல்லது செல்போன் பார்த்துக் கொண்டு சாப்பிடுகிறார்கள். இவ்வாறு சாப்பிடும் போது குறைவாகவோ அல்லது அதிகமாகவோ சாப்பிடுவோம். சாப்பாட்டின் ருசியினை அறியமாட்டோம். உடல் எடைக் கட்டுப்பாடு என்றதும், கார்போஹைட்ரேட்டினை மட்டுமே கவனத்தில் கொள்கிறோம். அது அவசியம்தான்.

ஆனால் அதைத் தவிர நல்ல கொழுப்பு, புரதம், நார்ச்சத்து, மினரல்ஸ் போன்ற அனைத்தும் அவசியம். இவை எல்லாம் சமச்சீராக இருந்தால், கண்டிப்பாக உடல் எடையில் மாற்றத்தினை பார்க்க முடியும். இந்த சத்துக்கள் ஆரோக்கியமான உணவில் கிடைக்கிறது. பாதாம், நட்ஸ் வகைகள், வேர்க்கடலை, எள்ளு உருண்டை, சுண்டல், பழங்கள், முளைக்கட்டிய பயிர் வகைகள். கொள்ளு, வெள்ளரிக்காய், சோளம் இவற்றை மாலை நேர ஸ்னாக்சாக எடுத்துக் கொள்ளலாம்.

இவைத் தவிர கீரை வகைகள், பச்சைக்காய்கறிகள், பருப்பு, அசைவத்தில் மீன், முட்டை, சிக்கன்  போன்றவை நம்முடைய அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாள் சாதம் எடுத்துக் கொண்டால், மறுநாள் சப்பாத்தியினை தேர்வு செய்யலாம். மைதாவினை தவிர்ப்பது நல்லது. அதேபோல் இனிப்பு, எண்ணையில் பொரித்த உணவினையும் அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது. இதனை நாம் முறைப்படி கடைபிடித்தாலே உடல் எடையினை சீராக வைத்துக் கொள்ள முடியும். அதிக எடை இதயம் பாதிப்பு, நீரிழிவு, ரத்தக் கொதிப்பு போன்ற பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்’’ என்றவர் அன்றாட உணவினை பிளான் செய்வது குறித்து ஆலோசனை வழங்கினார்.

‘‘நாம் சாப்பிடும் உணவுகளில் செய்யக்கூடிய மாற்றங்களுக்கு நல்ல நாள் எல்லாம் பார்க்க தேவையில்லை. என்னுடைய உணவில் கவனம் அவசியம் என்று நினைப்பவர்கள் அதை இன்றே ஆரம்பிக்கலாம். அதற்காக டயட்டில் இருக்க வேண்டும் என்றில்லை. நம் ஆரோக்கியத்திற்கு என்ன அவசியம் என்பதை தெரிந்து கொண்டாலே போதும். பொதுவாக நம்முடைய வீட்டில் நாம் பாரம்பரிய முறையில் உணவு முறைகளைப் பின்பற்றி வருவதை வழக்கமாக கொண்டிருப்போம்.

அதை பின்பற்றலாம். மேலும் ஒரு குடும்பத்தில் பல்வேறு விருப்பங்கள் இருக்கும். அதை மூன்று வேளையும் எவ்வாறு செய்து தர வேண்டும் என்பதை பிளான் செய்யலாம். ஒரு நாள் தென்னிந்திய உணவினை செய்யலாம். அடுத்த நாள் சப்பாத்தி, சப்ஜி, காய்கறி புலாவ் என்று வட இந்திய உணவினைக் கடைபிடிக்கலாம். ஒரு நாள் சைனீஸ், சிறுதானிய உணவுகள். வாரத்தில் ஒரு நாள் உங்க குழந்தைகளுக்கான உணவினை தேர்வு செய்யுங்கள்.

அன்று அவர்களுக்கு பிடித்த உணவினை செய்யலாம். இவ்வாறு ஒவ்வொரு நாளும் ஒரு வெரைட்டி உணவினை கொடுக்கும் போது, வித்தியாசமான உணவுகளை சமச்சீராக சாப்பிட்ட திருப்தி இருக்கும். அதே சமயம் வீட்டில் சமைத்து சாப்பிடுவதால் உடலுக்கும் கெடுதல் ஏற்படாது. சிலர் டயட் என்று செல்லி பட்டினி இருக்கிறார்கள். அது தவறு. டயட் இருக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட உணவு ஆலோசகர் அல்லது ஊட்டச்சத்து நிபுணர்களிடம் ஆலோசனைப் பெறலாம்.

உணவு எவ்வளவு முக்கியமோ அதே போல் உடற்பயிற்சியும் அவசியம். இதனை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப செய்யலாம். வாக்கிங் செல்பவர்கள், காலை அல்லது மாலை நேரத்தினை தேர்வு செய்யலாம். யோகாசனம், மூச்சு பயிற்சி, ஜிம்மில் உடற்பயிற்சி, சைக்கிளிங், ஜாக்கிங், நீச்சல் பயிற்சி, ஏதேனும் ஒரு விளையாட்டு. போன்றவற்றினையும் பின்பற்றலாம். இவற்றை கஷ்டப்பட்டு செய்யாமல், இஷ்டப்பட்டு செய்ய வேண்டும். கடைசியாக நல்ல தூக்கம் அவசியம்.

நம்முடைய உடலை நாம் தான் ஆக்டிவ்வாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சின்ன சின்ன வேலைகளை செய்யலாம். வீட்டின் அருகே கடை இருந்தால் வண்டியில் செல்லாமல் நடக்கலாம். அலுவலகத்தில் லிஃப்ட் இருந்தாலும், படிக்கட்டுகளை பயன்படுத்தலாம். மாடிப்படிகளை ஏற முடியவில்லை என்றால், கீழே இறங்கும் போது படிக்கட்டுகளில் இறங்கலாம். பலதரப்பட்ட உணவு முறைகளால், நம்முடைய பாரம்பரிய வழிமுறைகளை மறந்துவிட்டோம். அவற்றை நாம் தான் மீண்டும் மீட்டுக் கொண்டு வர வேண்டும்’’ என்றார் உட்டச்சத்து நிபுணர் ஷீலா கிருஷ்ணசாமி.

நிஷா, சின்னத்திரை நடிகை

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது... இந்த பழமொழி உணவு முறைகளுக்கும் பொருந்தும். ஒரு குழந்தைக்கு சிறு வயசில் இருந்தே நம்முடைய உணவு முறைகளை சரியான முறையில் கொடுத்து பழகவேண்டும். அப்போதுதான் சீரான உணவுப் பழக்கத்தினை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல முடியும். இந்த தலைமுறையினருக்கு ஸ்னாக்ஸ் என்றால் கடையில் கிடைக்கும் உணவு என்பதை சொல்லிக் கொடுக்காமல், அதனை நாம் வீட்டிலேயே செய்து சாப்பிடலாம் என்பதை பழக வேண்டும்.

இதைத்தவிர ஒரு கைப்பிடி பாதாம் பருப்பினை அலுவலகம் மற்றும் பள்ளிக்கு செல்பவர்கள் எடுத்து செல்ல வேண்டும். பசிக்கும் போது கண்ணில் பார்ப்பதை சாப்பிடுவதைத் தவிர்த்து இதை சாப்பிட்டாலே போதும். பாதாம் மட்டுமில்லாமல், பழங்கள், சுண்டல், பொறி, வேர்க்கடலை போன்றவற்றையும் நாம் ஸ்னாக்சாக சாப்பிடலாம். வயிறும் நிரம்பும், மற்ற உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தினை தூண்டாது. போதும் என்ற உணர்வு வயிற்றுக்கு மட்டுமே உண்டு.

சிலர் குண்டாக இருந்தாலும், ஆரோக்கியமாக இருப்பாங்க. அவர்களால் ஒரு நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்க முடிந்தால் அவர்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். காரணம், உடல் பருமன் துரித உணவுகளால் இல்லாமல் மரபணு காரணமாகக்கூட ஏற்படும். குழந்தைகளுக்கு சின்ன வயதில் இருந்தே ஆரோக்கிய உணவினை கொடுத்து  பழகனும். அப்பதான் அவர்கள் எல்லா உணவுகளையும் சாப்பிடுவார்கள். சிலர் பழங்களை அப்படியே சாப்பிடமாட்டார்கள். அவர்களுக்கு அதை மில்க் ஷேக் அல்லது ஸ்மூத்தி, ஃப்ரூட் தயிர் போல செய்து தரலாம். இவற்றை கடைபிடித்தால் கண்டிப்பாக ஜங்க் உணவு மேல் அவர்களின் கவனம் திரும்பாது. இந்த மாற்றங்களை சின்ன வயதிலேயே பின்பற்றினால் எதிர்காலத்தில் உங்களின் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.