World Cancer Day



ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி-4 உலக புற்று நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. ஜெனிவா நகரில் உலக புற்றுநோய் மையத்தின் மூலம் 1993ல் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்விது. சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு அமைப்பின் மூலம், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, நோய்க்கான தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி பிரச்சாரம் மற்றும் மக்களிடையே இதைக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் முனைப்புடன் செயல்படவும் இந்த தினம் விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது.

இதய நோய்க்கு அடுத்தபடியாக புற்றுநோய் இரண்டாவது பெரிய நோயாக இருக்கிறது. உலக அளவில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறில் ஒருவர் புற்றுநோய் காரணமாக இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட  50% புற்று நோய்கள், விழிப்புணர்வு இல்லாமை, கல்வியறிவின்மை, பயம் மற்றும் தடைகள் போன்ற காரணங்களால் தாமதமான நிலைகளில் கண்டறியப்படுவதாகவும். புற்றுநோயினை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் பெரும்பாலும் கட்டுப்படுத்தக் கூடியதுடன், குணமாகக்கூடியதுமாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.

இந்த ஆண்டு பிப்ரவரி 4 உலக புற்று நோய் தினத்தில், புற்றுநோய் குறித்த சில கேள்விகளுடன், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையின், புற்றுநோய் பிரிவு மருத்துவ நிபுணர் (Consultant Oncologist), டாக்டர் டி.என்.விஜயஸ்ரீ அவர்களை சந்தித்தபோது...

புற்றுநோய் என்றால் என்ன?

புற்றுநோய் என்பது உயிரணுக்களின் கட்டுப்பாடற்ற பெருக்கம். ஆங்கிலத்தில் இதை Uncontrolled proliferation of cells என்று சொல்லலாம். இயல்பாக நம்மில் இருக்கும் செல் கட்டுக்கடங்காமல் பல்கிப் பெருகி அது கட்டியாக உருமாறும். அந்த கட்டியினை கட்டுப்படுத்த நம் உடலில் செயல்படும் சிக்னல்ஸ் செயலிழக்க பல்வேறு காரணங்கள் உள்ளது. அப்படி
உருவாவதே புற்றுநோய். இது அருகில் உள்ள உடல் உறுப்புகளின் உயிரணுக்களையும் பாதித்து உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும் தன்மை கொண்டது.

புற்றுநோய் தாக்கம் குறித்து விரிவாக விளக்குங்கள்?

புற்றுநோய் என்றால் இன்றும் ஒரு பயத்தோடு மக்கள் இருக்கிறார்கள். பெரிதாக இதற்கு பயம் கொள்ளத் தேவையில்லை. எவ்வாறு இதயம் தொடர்பான அடைப்புகளை சரி செய்து வாழ்க்கையை வாழ முயற்சிக்கிறோமோ அதேபோல்தான் புற்றுநோயும்.

புற்றுநோயினை பொறுத்தவரை நிலை (Stage) ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு என இருக்கும். ஆரம்ப கட்டமான 1 அல்லது 2ம் நிலையில் நோயாளிகள் வரும்போது அவர்களின் உயிர் வாழும் தகுதி (Survival Rate) 70% முதல் 80% வரை இருக்கும். இதுவே 3 மட்டும் 4வது நிலை என்றால் 30% முதல் 40% ஆக குறையும். இந்த விழிப்புணர்வை மக்களுக்கு கொடுக்க நினைப்பதே கேன்சர் விழிப்புணர்வு நாளின் முக்கியத்துவம்.

புற்றுநோயினை ஆரம்பக்கட்டத்திலேயே எப்படி கண்டறிவது?

மூக்கில் ரத்தம் வருவது, மலக்குடல் ரத்தம், சிறுநீரில் ரத்தக்கசிவு, ஆராத  அல்சர், எங்காவது ஓரிடத்தில் ஒரு கட்டி இயல்பாக இல்லாமல் இருத்தல். நார்மலாக இருந்த மரு அல்லது மச்சம் திடீரென வளர்வது அல்லது மாறுவது. 

உணவை உண்ணவோ விழுங்கவோ முடியவில்லை என நினைப்பது, இருமல் அதிகரித்த நிலையில் விடாமல் தொடர்ந்து இருமிக் கொண்டே இருப்பது... இந்த மாதிரியான சிம்டென்ஸ்களை உணர்ந்தால் உடனே டாக்டரை சந்தித்து முன்கூட்டியே பரிசோதனை செய்து, இயர்லி ஸ்டேஜ் எனப்படும் ஆரம்பக்கட்ட நிலை
புற்றுநோயினை கண்டறியலாம்.

புற்றுநோய் எதனால் வருகிறது?

எதனால் புற்றுநோய் வருகிறது என்பதே எல்லோர் மனதிலும் இருக்கும் முக்கியமான கேள்வி. இதுதான் காரணம் என குறிப்பாக இதற்கு சொல்லவே முடியாது.  மரபணு, சிகரெட், புகையிலை, ஆல்கஹால் போன்ற போதைப் பொருட்கள், உணவுப் பழக்க வழக்கம் போன்றவை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.செரிமானப் பகுதியான மலக்குடல் பகுதிகளில் வரும் புற்றுநோய்க்கு பீட்சா, பர்கர் போன்ற வெஸ்டனைஸ்ட் ஃபுட், ஆயிலி ஃபுட், பாஸ்ட் ஃபுட் போன்றவை காரணம்.

இந்த வகை மேற்கத்திய உணவுகளை நமது குடல் நல்ல முறையில் செரிமானம் செய்யாது. கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளையும் எடுக்கக் கூடாது. நமது இந்திய நாட்டு சீதோஷ்ண நிலைக்கு அரிசியால் செய்த உணவுதான் சிறந்தது. நல்ல செரிமானம் ஆகக்கூடிய உணவுகள், நார்ச்சத்து உள்ள பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் போன்றவற்றை உணவில் நிறைய சேர்க்க வேண்டும்.

சில வகை மார்பக புற்றுநோய்க்கு உடல் பருமன் எனப்படும் ஒபிசிட்டி பிரச்சனை, ஹார்மோனல் இன்பேலன்ஸ் போன்றவை காரணமாக இருக்கிறது. ஹார்மோனல் இன்பேலன்ஸ் காரணமாக பெண்கள் மாதவிடாய் பிரச்சனைகளை அதிகம் சந்திக்கின்றனர். இதற்கு நமது வாழ்க்கைமுறை மாறி வருவதே மிக முக்கியக்  காரணமாக பார்க்கப்படுகிறது
இருபாலருக்கும் வரும் புற்றுநோய் குறித்தும் சொல்லுங்கள்…

வாயிலிருந்து மலக்குடல் வரை வரும் புற்றுநோய் இருவருக்கும் பொதுவானது. பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், வாய் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் போன்றவை நமது நாட்டில் பரவலாக இருக்கிறது. ஆண்களைப் பொறுத்தவரையில் நுரையீரல் புற்றுநோய் முக்கியமானதாக இருக்கும்.

ஆய்வறிக்கையில் பெண்களுக்கு புற்றுநோய் அதிகரிப்பு...

படிப்பறிவு நிறைந்த கேரளா, டெல்லி மற்றும் தமிழ்நாட்டில்தான் அதிகமான பெண்கள் மார்பகப் புற்றுநோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள். 2018 ஆம் ஆண்டு ஆய்வறிக்கையொன்றின்படி, உலகளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் மார்பகப்புற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23%.

இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு பத்து நிமிடங்களில் இரண்டு பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் (Breast cancer) இருப்பதும், அவர்களில் ஒருவருக்கு முற்றிய நிலையில் இருப்பதும் இருவரில் ஒருவர் இறப்பதும் கண்டறியப் படுகிறது. இந்திய அளவில் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும்தான் 23.3% பெண்கள் கருப்பைவாய் புற்றுநோயினால் (Cervical Cancer) இறந்து போகிறார்கள்.

‘புகை நமக்குப் பகை’

‘புகை நமக்குப் பகை’ என்ற வாசகத்தைப் படித்துவிட்டு புகைப்பவர்களாகவே பலர் இருக்கின்றனர். புகையிலை பயன்பாட்டினால் 68 இந்திய ஆண்களில்
ஒருவருக்கு நுரையீரல் புற்றுநோய் இருக்கிறது.  

புற்றுநோயாளிகளின் வாழ்நாள் அதிகரிப்பு...

2015 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை பல்வேறு புற்றுநோயாளிகளின் வாழ்நாள் எண்ணிக்கை ஐந்து முதல் பத்தாண்டுகளாக உயர்ந்துள்ளது.

அரியவகை புற்றுநோய்

இந்தியாவில் அதிகமான எண்ணிக்கையில் தோன்றும் அரியவகை புற்றுநோய்களில் ‘மேசொதெளியோமா’வும் ஒன்று. கட்டுமானங்களில், வீட்டுக்கூரைகளில், தொழிலகங்களில் பயன்படுத்தப்படும் ஆஸ்பெடாஸ் (Asbestos) நுகர்வால் நுரையீரலிலும், அடிவயிறு மற்றும் இதயத்தில் உருவாகும் புற்றுநோய் இது. ‘மேசொதெளியோமா’ இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட ஒருவர் ஓராண்டுக்கும் மேலாக உயிர் வாழ்வதில்லை என்கிறது மருத்துவப் புள்ளிவிவரம்.

மகேஸ்வரி நாகராஜன்