பார்டரில் த்ரிஷா ஐஸ்வர்யா ராய்... உடல் முழுவதும் போர்வாள்!



வந்தாச்சு பொன்னியின் செல்வன் சேலைகள்

இந்த ஆண்டு தீபாவளிக்கு புது வரவாக  பொன்னியின் செல்வன் சேலைகள் விற்பனையில் களை கட்டியுள்ளன. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி, இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில், இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பிரமாண்டப் படம் “பொன்னியன் செல்வன்.” இதில் நடிகர் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா,
ஐஸ்வர்யா ராய், பிரபு, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஜெயராம் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர்.

முதல் பாகம் செப்டம்பர் 30 திரையரங்குகளில் வெளியான நிலையில், படத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய கதாபாத்திரங்கள் அச்சு அசலாக பிரிண்ட் செய்யப்பட்டு பெண்களை கவரும் விதத்தில் உயர்தர நூல் கொண்டு புடவைகளில் நெய்யப்பட்டுள்ளது. சேலையின் முந்தானை மற்றும் பார்டரில் குந்தவையாக நடித்துள்ள த்ரிஷா மற்றும் நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் படங்களுடன் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ள விக்ரம், வந்தியத் தேவனாக நடித்துள்ள கார்த்தி, அருண்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம்ரவி, சின்ன பழுவேட்டையார் பார்த்திபன், சுந்தர சோழர் பிரகாஷ் ராஜ், ஆழ்வார்கடியான் நம்பி நடிகர் ஜெயராம் ஆகியோரின் உருவங்களும் இடம்பெற்றுள்ளன. உடல் முழுவதும் போர்வாள்
ஆக்கிரமித்துள்ளது.

முந்தானை மற்றும் உடல் முழுவதுமே 3D கிராண்ட் ரிச் லுக்கில் ஊதா, பச்சை, சிவப்பு, மெரூன், வைலட் என ஐந்து வண்ணங்களில் சேலைகள் தயாராகி தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. ஆன்லைன் வழியாகவும் புடவைகளை ஆர்டர் செய்து பெறலாம். ‘பொன்னியின் செல்வன்’ திருமண சேலைகளும்பிரமாண்ட லுக்கில், பிங்க் காப்பர் ஜரி நூல் கொண்டு தயாரிக்கப்பட்டு பட்டுப் புடவைகளாகவும் விற்பனைக்கு உள்ளன.

பிரபலமானவர்களின் படங்கள் வெளியானால் அதில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அணிந்துள்ள ஆடைகள் மற்றும் அணிகலன்களை அதேபோல் வடிவமைத்து விற்பனை செய்வது டிரெண்டாக உள்ள நிலையில், அண்மையில் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில், விஜய் அணிந்திருக்கும் ரத்தக்கறையுடன் கூடிய சட்டையைப் போன்றே சட்டையினை டிசைன் செய்து விற்பனை செய்தனர். அதேபோல் பொன்னியின் செல்வன் படத்திற்கு சற்று வித்தியாசமாக புடவைகளில் அப்படத்தின் கதாபாத்திரங்கள் இடம்பெறும்படி வடிவமைத்துள்ளனர். இது பெண்களை ரொம்பவே கவர்ந்துள்ளது.

மகேஸ்வரி நாகராஜன்