ஃபிட்னஸ் மந்திரம்



இன்று பெண்களுக்கு வரக்கூடிய அனைத்துப் பிரச்னைகளுக்கும் பல காரணங்கள் உள்ளன. உணவு முறைகள், வாழ்வியல் மாற்றங்கள், மன அழுத்தம்,  தூக்கமின்மை, வேலை நெருக்கடி இப்படிப் பட்டியலிடலாம். இதில் முக்கியமாக வாழ்வியல் மாற்றங்கள் ஒரு பெண்ணுக்கு எந்தெந்த விதத்தில்  எல்லாம் நோய்கள் வரக் காரணமாக இருக்கிறது?  குறிப்பாக  இன்றைய இளம் தலைமுறைப் பெண்களுக்கு வரக்கூடிய அனைத்து நோய்களுக்கும்  வாழ்வியல் மாற்றங்களால் வரும் பிரச்னைகள் அதிகம் என அது குறித்து விளக்குகிறார் கோவையை சேர்ந்த டாக்டர் எம்.எஸ். உஷா நந்தினி.
 
* பாட்டி, அம்மா காலத்தில் உணவு தயாரிப்பில்  பயன்படுத்திய இயந்திரங்கள் அவர்கள் ஆரோக்கிய வாழ்க்கைக்குக் காரணமாக இருந்தது. ஆட்டுக்கல்,  அம்மி, உரல் எல்லாமே உடல் உழைப்பைக் கொடுத்து கஷ்டப்பட்டு இயக்க வேண்டியவை. இவற்றைப் பயன்படுத்தும் போது பெண்களுக்கு இது நல்ல  பலன்களைக் கொடுத்தது. அம்மியில் இழுத்து அரைத்த போது கைகளில் தேவையற்ற கொழுப்பு சேராமல் தடுத்தது. இடுப்பு மற்றும் வயிற்று  தசைகளுக்கும் மசாஜ் போன்ற அழுத்தத்தைக் கொடுத்தது. ஒரு நாளைக்கு 15 நிமிடம் ஆட்டுக்கல்லில் அரைத்தால் போதும் ஒரு மணி நேரம் வாக்கிங்  செய்வதால் ஏற்படும் பலன் உடலுக்குக் கிடைக்கும். அதிகமான அளவு கலோரியை எரிக்க முடியும்.

* பாத்திரம் துலக்குவது முதல் துணிகள் துவைப்பது  வரை எல்லாமே இயந்திர மயமாயிடுச்சு. வாரத்துக்கு ஒரு நாளாவது துணிகளை அலசுறது  மூலமா நிறைய கலோரி எரிக்கப்படுகிறது. அன்றாட வேலைகளை சரியான முறைகள்ல இரண்டு மூன்று நாளாவது செய்தால் போதும். இந்த உடல்  உழைப்பு உடலுக்கு  ஃபிட்னஸ் கொடுக்கிறதா இருக்கும். ஆனால் இன்றைய அவசர உலகில் இவையெல்லாம் சாத்தியமில்லை.

* தோட்ட வேலைகள் செய்யறதுக்கான வாய்ப்புகளும் இப்போ இல்லை.   இயற்கை உரத்தில் விளையுற காய்கறிகள், உணவுகள் சாப்பிடணும்னு  விருப்பப்படுறோம். ஆனா அதுக்கு நம்மோட உழைப்பு என்ன? உதாரணத்துக்கு சிறிய வீட்டுத்தோட்டம் போடலாம். நம்மோட உணவுப் பொருள நாமே  விளைவிக்கிறது. ஒரு நாளில் 15 நிமிஷத்தை செலவு செய்தால் போதும். மண்வெட்டியால  வெட்டி, தண்ணீர் பாய்ச்சி, களை எடுத்தல்ல நிறைய  கலோரி எரிக்கப்படுது. ஒரு பெண் 15 நிமிடம் சைக்கிள் ஓட்டுறதுக்கு இணையான கலோரி தோட்ட வேலைகள்ல எரிக்கப்படறதா ஆய்வுகள் மூலம்  நிரூபிக்கப்பட்டிருக்கு.

* ஷாப்பிங் போகும் போது கார்ல போய் கடையின் வாசல்ல இறங்கறோம். பொருட்களை வாங்கிட்டு மறுபடியும் கார்ல ஏறி வீட்டுக்கு வர்றோம். உடல்  உழைப்பே இல்லை. ஷாப்பிங் போறப்போ நடந்து போற தூரத்துல போய் பொருள் வாங்கிட்டு, மறுபடியும் திரும்ப நடந்து வர்றது நமக்கு ஒரு  உடற்பயிற்சியா அமையுது. அன்றாட வீட்டு வேலைகளை உடல் உழைப்போட  இணைந்து பண்ணினா  உடற் பயிற்சிக்கு தனியா நேரம் ஒதுக்க  வேண்டியதில்லை. வீட்டைக் கூட்டுறதுல இருந்து, துடைக்கிறது வரை செய்யலாம். வீட்டைக் குனிந்து துடைக்கும் போது அடிவயிற்று சதைப்பகுதி  இறுகுறதுக்கான வாய்ப்பு இருந்தது. இப்போ மாப் வெச்சுத் துடைக்கிறதால அந்த வாய்ப்பும் போயிடுச்சு. வீடு சுத்தமாகுறதோட உடல் உழைப்பு  ஆரோக்கியம் தரும்.

* உடல் உழைப்பே இல்லாததால் என்னென்ன நோய்களை சம்பாதிச்சிருக்கோம்னா... உடற்பருமன் முதலிடத்தில் உள்ளது. உயரம்: எடையை வைத்து  உடல் பருமனைக் கணக்கிடுவோம். ஆனால் இப்போது ஒருவரின் இடுப்பு சுற்றளவை வைத்து அவரது உடல் பருமனை கணக்கிடறோம். கர்ப்பப்பை  சார்ந்த நோய்கள்  வராம தடுக்கிறதுக்கு இது ரொம்பவும் முக்கியம். பெண்களுக்கு  இடுப்பு சுற்றளவு  34 இன்ச்சுக்கு  மேல தாண்டி விட்டால்  அவர்களை உடல் பருமன் நோயாளி என்று சொல்கிறோம்.

* உடல் எடை 50 கிலோ இருந்தாலும்,  வயிறு, இடுப்புப் பகுதியில் தேவையற்ற கொழுப்பு,  சதைப்பிடிப்பு இருந்தால் கருப்பை தொடர்பான   ஹார்மோன் சுரப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும்.  கருப்பை ஹார்மோன்கள் நல்ல முறையில வேலை செய்யவில்லை என்றால் பீரியட்ஸ் சரியான  நேரத்தில் வராது. முறையற்ற மாதவிலக்குப் பிரச்னை ஏற்படும். ஹார்மோன் பிரச்னையால மாதவிலக்கு தொடர்பான பிரச்னைகள் மட்டுமில்லாம  வேற பல பிரச்னைகளையும் உடல்ல ஏற்படுத்தும். உதாரணமா அதிகமான முடி கொட்டும், பிம்பிள்ஸ், சீல் கொப்புளங்கள்,  கழுத்து மற்றும் மார்புப்  பகுதிகளில் வேர்க்குரு மாதிரிப் பருக்கள் உருவாகும்.

* இன்றைய பெண்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கு.  பெண்களுக்கு ஒரு காலத்துல  இதய நோய்கள் வராது என்றோம். ஆனால் இன்றைக்கு  அப்படியில்லை. ஹார்மோன் மாற்றங்களால்  கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில்  இல்லை. இதய நோய்,  கொலஸ்ட்ரால், சர்க்கரை நோய் நிறைய  பெண்களுக்கு  வருது. இதற்கு ஹார்மோன் கட்டுப்பாட்டில் இல்லாதது தான் காரணம்.  மார்பகக் கட்டிகள் வர்றதுக்கும் ஹார்மோனல் இம்பேலன்ஸ்  தான் காரணம்.

* ஒல்லியா இருப்பவர்களுக்கு ஹார்மோன் பிரச்னைகள் வராதுன்னு சொல்லமுடியாது. ஒல்லியான பெண்களுக்கு திருமணத்துக்கு முன்னால  மார்பகத்தில் பால் சுரக்கும் பிரச்னை வரலாம். இதனால இளம் பெண்கள் முகம், தாடைப்பகுதிகள்ல முடி வளருது. இது அவங்களோட  தன்னம்பிக்கைய குறைக்கிறதோட அவங்க படிப்பையும் பாதிக்குது. எங்கிருந்து இந்தப் பிரச்னைகள் எல்லாம் வருகிறது என்று பார்த்தால், உடல்  உழைப்பு இல்லாமல் போனது தான் அடிப்படைக் காரணம்.

* நமது  வேலைகளை சரியான நேரத்தைக் கணக்கிட்டுப் பண்ணாதது நோய்களுக்கு இன்னொரு காரணம், பரம்பரை தமிழ் சமுதாயம்  சூரியன் உதயம்  ஆகும் போது காலை உணவு, உச்சிக்கு வரும் போது மதிய உணவு, அஸ்தமனம் ஆகும் போது இரவு உணவும் எடுத்துக்கிட்டாங்க. பெண்கள் காலைல  சீக்கிரம் எழுந்திருக்கணும்.  அதன் மூலமா ஓசோன் வாயு கிடைத்தது. அந்த முறைகள இன்றைய சூழலுக்கு ஏற்ப பழக்கத்துக்கு கொண்டு வரணும்.

* பெண்களுக்கு தூக்கம் ரொம்ப முக்கியம்.  ஹார்மோனல் ரியாக்சன் தூங்கும் போது தான் பெண்ணுடல்ல  நடக்குது. குறிப்பாக டீன் ஏஜ் பெண்கள்  குறிப்பிட்ட நேரம் தூங்க வேண்டியது அவசியம்.கர்ப்பப்பைக்கும் , மூளைக்கும் நேரடியான தொடர்பு இருக்கு. மெலட்டோனின் கெமிக்கல் தூக்கத்தை  உருவாக்கிக் கொடுக்குது. கண்ணை விழிக்கும் போது மெலட்டோனின் விழிப்பு நிலையில இருக்கு. பெண்ணின் கருப்பைக்கு ஆரோக்கியம் கொடுக்கிறது  தூக்கம்.

* செல்போன்  பார்க்கிறோம், கம்ப்யூட்டர் பயன்பாடு இவற்றால  கண்ணில் ஒளி படும் போது மெலட்டோனின் சுரப்பு குறையும். ஒரு குழப்பமான  நிலையில் மனம் இருக்கும். இதனால் பெண்களுக்கு தூக்கம் முக்கியம். டீன் ஏஜ் குழந்தைகளுக்கு இப்போ படிக்கிற  பிரஷ்ஷர் அதிகம்.  மெலட்டோனின் சுரப்புக்கு செரட்டோனின் உதவுது. செரட்டோனின்  பாலில் அதிகம் உள்ளது. பால் குடிச்சிட்டுப் படுக்கும் பழக்கம் அப்படித்தான்  வந்துள்ளது. தாய்வழிச் சமூகத்தில் பெண்கள் விவசாயம் பார்த்தார்கள்.  ஆண்களை வழி நடத்தி விவசாயத்துக்கு கொண்டு வந்தது பெண்கள் தான்.  உடல் வலிமை பெண்களுக்கு உண்டு. இந்தப் பரம்பரையில் இருந்து வந்த பெண்கள் உழைக்கத் தயங்கத் தேவையில்லை”.

யாழ் ஸ்ரீதேவி