சவிதாவை நினைவிருககிறதா?



வாசகர் பகுதி

சவிதா ஹால பன்னாவர் தன் கணவருடன் அயர்லாந்து நாட்டில் வசித்து வந்த பல் டாக்டர். 2012ல் முதல் குழந்தைக்காக கர்ப்பமானார். 17-வது  வாரத்தில் வயிறும், வளரும் குழந்தையின் வளர்ச்சியில் சிக்கல் ஏற்பட்டது. குழந்தையை அபார்ஷன் செய்தால்தான் சவிதா உயிரை காப்பாற்ற  முடியும்.

அயர்லாந்து நாட்டில் கர்ப்பவதியும், அவங்க வயிற்றில் வளரும் குழந்தையும், அந்த நாட்டின் குடிமக்களாக ஏற்றுக் கொள்ளப்படுவர் என்கிறது சட்டம்.  ஆனால் அயர்லாந்து நாட்டில் வயிற்றில் வளரும் குழந்தையை கொல்ல தடையுள்ளது. மீறி அபார்ஷன் செய்து கொண்டால் கர்ப்பவதிக்கு 14 வருடம்  சிறை தண்டனை உண்டு. இந்த நூதன ஏற்பாட்டை 8வது அமென்ட்மென்ட் என அழைப்பர். இதனிடையே மீண்டும் சவிதாவுக்கு வருவோம். கர்ப்பமான  17வது வாரத்தில் வயிற்றில் வளரும் குழந்தைக்கு சிக்கல் முற்றவே அதனை அபார்ஷன் செய்ய வேண்டி, ஐரீஸ்  ஆஸ்பத்திரியை அணுகினார்.

அங்கு பணியில் இருந்த 9 பேரும், அபார்ஷன் செய்ய மறுத்ததுடன், வெளியே அனுப்பினர். இதனிடையே சவிதாவின் உடலில் சிக்கல் மேலும்  ஏற்பட்டு இறுதியில் அவர் இறந்தே போனார். சவிதா இறந்தது உலகம் முழுவதும் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. இதனிடையே கடந்த ஆண்டு  அயர்லாந்தில் நடந்த தேர்தலில் லியோவராத்கர் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த லியோவின் தந்தை இந்தியர். தாயார் ஐரீஷ் பெண்மணி. இந்த  ஆண்டு மகளிர் தினத்தன்று அபார்ஷன் சார்ந்த 8-வது அமென்மென்டை மாற்ற, மே 25-ம் தேதி ஒரு பொது ஓட்டு எடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசு  முடிவெடுத்தது.

சவிதாவின் கணவர் பிரவின் ஹால பன்னாவர் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். இப்போது கூட உங்கள் மனைவியால் எங்கள் நாட்டில்  அபார்ஷன் சட்டமாக்கப்படுவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என மிரட்டல்கள் வருகின்றன. இருந்தும் கணவரும், சவிதா பெற்றோரும்  நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். கர்நாடகாவின் பெலகாவியில் சவிதாவின் பெற்றோர் அன்டனப்பா மற்றும் அக்காமகாதேவியாலகி ஆகியோர்  வசிக்கின்றனர். இவர்களின் மூன்றாவது குழந்தை சவிதா.  ஒரே பெண், முதல் இருவரும் ஆண்கள். ‘‘என் மகளின் மூலம் அந்த நாட்டில் அபார்ஷன்  சட்டம் திருத்தப்பட்டாலே போதும்!

சவிதாவின் ஆன்மா சாந்தியடையும்’’ என கண்ணீர் மல்க கூறுகின்றனர் அந்த பெற்றோர். இதனிடையே அயர்லாந்து இளம் உள்ளங்கள், பெண்களிடம்  அபார்ஷன் குறித்து, அது பெண்களின் உரிமை என்ற அளவில் உணர்ச்சியை தூண்டி விட்டுள்ளது. இதனால் மே 25-ம் தேதி வாக்கெடுப்பில் வெற்றி  கிடைத்தால் அது அந்நாட்டுப் பெண்களுக்கே நன்மை. குழந்தையால் பிரசவத்திற்கே சிக்கல் வரும் என்றால் அபார்ஷனை எப்போது வேண்டுமானாலும்  சம்பந்தப்பட்ட பெண் செய்து கொள்ளலாம் என்ற புதிய விதி ஏற்படும். ஆபத்தான பிரசவங்களில் தாய்மார்கள் பிழைக்கும் சூழலும் அதிகரிக்கும்.

பின் குறிப்பு: தற்போது அயர்லாந்தில் கர்ப்பவதிக்கு சிக்கல் வரும் என்றால் அபார்ஷன் செய்யலாம் என சட்டம் கொண்டு வராமலே அமல்  செய்துள்ளனர். மே 25ம் தேதிக்குப் பின்னால் அபார்ஷனே சட்டமாகலாம். தற்போது உலகில் 19 நாடுகளில் அபார்ஷன் செய்வது குற்றமாகும்.

- ராஜேஸ்வரி, பெங்களூரு.