ஏனோ வானிலை மாறுதே…



ஏர்கண்டிஷனரை பயன்படுத்தும் வழிமுறை

கோடை காலம் இது. வெயிலின் தாக்கம் அதிகமாகிவிட்டது. சூட்டை சமாளிக்க முடியாமல் அனைவரும் இப்போது ஏ.சி, ஏர்கூலர்களை பயன்படுத்தத்  துவங்கிவிட்டோம். கோடைகாலத்தில் பெரிதும் பயன்பாட்டில் இருக்கும் குளிர்சாதனப் பொருட்களை முறையாக எப்படி பயன்படுத்த வேண்டும்  என்பதை தெரிந்துகொள்வோம்.

வெளியில் அடிக்கும் வெயிலுக்கும் உள்ளே இருக்கும் கூலிங்கிற்கும் சம்பந்தம் இல்லாமல் நமது ஏ.சியை செட் செய்தல்  கூடாது. வெயில் காலத்தில் வெளியே வெப்பம் பயங்கரமாக இருக்கும்போது, நாம் இருக்கும் அறை விரைவில் சில்லென மாற வேண்டும் என  நினைத்து உடனடியாக  ஏ.சியை  16, 18, 19, 20 என செட் செய்வோம்.

இது மிகமிகத் தவறு. வெளியே 38-க்கு மேல் வெப்ப நிலை இருக்கும்போது எப்படி ஒரு கம்ப்ரஸர் 18, 19  என ரூம் டெம்பரேச்சரைக் கொண்டு வர  முடியும்? வெளியே இருக்கும் வெப்பத்தை விட வித்தியாசம் கம்மியானதாக இருந்தால்தான் நமது ஏசி மிகச் சரியாக வேலை செய்யும்.  இல்லையெனில் நமது கம்ப்ரஸர் விரைவில் அவுட் ஆகிவிடும். அதனால் வெளியே இருக்கும் டெம்பரேச்சருக்கும் ரூம் டெம்பரேச்சருக்கும் உள்ள  வித்தியாசத்தை குறைத்தால்தான் நமது ஏசி நன்றாக வேலை செய்யும். அறையும் வெப்பம் இல்லாமல் இருக்கும்.

பகல் நேரமாக இருந்தால் ரூம் டெம்பரேச்சர் ஏ.சியில் 25 மற்றும் 27ல் இருக்குமாறு செட் செய்யவும். இரவு நேரமாக இருந்தால் 23 மற்றும் 25ல் செட்  செய்யவும். கோடைகாலமான ஏப்ரல், மே மாதத்திற்கு இது பொருந்தும். பகல் முழுக்க கொளுத்தும் வெயில். இரவில் அது கிளப்பிவிட்ட அனல்.  ஏர்கண்டிஷனர் அல்லது ஏர்கூலர் இல்லாமல் பெரியவர்களாலேயே தூங்க முடிவதில்லை. குழந்தைகள் என்ன செய்வார்கள் பாவம்? குழந்தைகளை ஏ.சி.  அல்லது ஏர்கூலர் உள்ள அறையில் தூங்க வைக்கும்போது, பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இதோ,

ஏ.சி, ஏர்கூலர் உள்ள அறைகளில் குழந்தைகளை படுக்க வைப்பதற்கு முன் செய்ய வேண்டியது...

*    ஏ.சி. காற்று குழந்தைகளின் முகத்தில் நேரடியாகப் படுவதுபோல படுக்க வைக்காதீர்கள். ஏ.சி. காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால்,  குழந்தைகள் மூச்சுவிடக் கஷ்டப்படுவார்கள். பக்கத்தில் படுத்திருக்கும் நாமும் தூங்கிவிடுவதால், பிள்ளைகள் மூச்சுவிடச் சிரமப்படுவது நமக்கு  தெரியாமலே போய்விடலாம்.
*    ஏ.சி.யில் இருக்கும் ஃபில்டரில் சேரும் தூசியை வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். இல்லையெனில், அதில் இருக்கும்  கண்ணுக்குத் தெரியாத தூசிகள், குழந்தைகளின் மூச்சுக்குழாய்க்குள் சென்றுவிடும். இந்தத் தூசியை வெளியேற்றுவதற்காக, நுரையீரல் சளியை  அதிகமாக உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும். குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

*    குழந்தைகளுக்கு உடல் டெம்பரேச்சர் மாறுவது பற்றிச் சொல்லத் தெரியாது. எனவே, சூடான டெம்பரேச்சரிலிருந்து சட்டென ஏசி  அறைக்குள் அழைத்துச் செல்லாதீர்கள். அல்லது அறைக்குள் நுழைந்ததுமே 16, 17 எனக் குறைந்த டெம்பரேச்சரில் ஏ.சி.யை வைக்காதீர்கள்.
*    இரவில் காற்று அனலாக இருப்பதால், ஏ.சி. அறைக்குள் நுழைந்ததுமே சட்டை இல்லாமல் வெறும் உடம்புடன் தூங்க குழந்தைகள்  ஆசைப்படுவார்கள். அதை அனுமதிக்காதீர்கள். கொஞ்சம் வளர்ந்த பிள்ளையாக இருந்தால், நெஞ்சுப் பகுதியையும், மூன்று வயதுக்குள் உள்ள குழந்தை  என்றால், நெஞ்சுப் பகுதியோடு பாதத்தையும் துணியால் மறைத்துத் தூங்க வையுங்கள்.
*    ஏ.சி. காற்று சருமத்தை வறண்டு போகச்செய்யும். குழந்தைகளுக்கு கண்களையும் உலர்ந்துப் போகச் செய்யும். 16 அல்லது 17  டெம்பரேச்சரில் தொடர்ந்து தூங்கும் குழந்தைகளுக்கு, சுவாசத் தொற்றுப் பிரச்சனைகள் வரலாம். பிறந்த குழந்தையாக இருந்தால், கதகதப்பான  அறையில்தான் தூங்க வேண்டும். ஏனென்றால், அம்மாவின் வயிற்று டெம்பரேச்சர் 30. அந்த டெம்பரேச்சரில்தான் சில மாதங்களுக்கு முன்புவரை  அந்தக் குழந்தை இருந்தது. எனவே, 23 - 26 டெம்பரேச்சரில் ஏ.சி.யை வைப்பதுதான் குழந்தைகளுக்கேற்ற சரியான லெவல்.
*    போர்வையால் தலையை முழுக்க மூடிக்கொண்டு தூங்கினால் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது. அதே கான்செப்ட்தான் ஏ.சி.க்கும்.  ஜன்னல்களை மூடி சிறு வழியும் இல்லாமல், எல்லாவற்றையும் மூடிவிட்டுத் தூங்கினால் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காது. ஏ.சி.யின் இயங்கும்  தன்மையின்படி வெளிக்காற்று உள்ளே வந்தாலும், ஜன்னல் வழியாக வெளிக்காற்று உள்ளே வருகிறபடி, ஒரு சின்ன ஓப்பனிங் வைத்துக்கொள்ளுங்கள்.  அப்போதுதான் குழந்தைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும். இல்லையென்றால், நீங்கள் வெளிவிட்ட காற்றையே குழந்தையும் சுவாசிக்க  நேரிடும்.
*    ஏர்கூலர் கடலோரப் பகுதிகளுக்கு செட்டே ஆகாது. ஏர்கூலரின் மெக்கானிசம் உலர்ந்த காற்றை ஈரமான காற்றாக மாற்றுவது. சென்னை  கடலையொட்டிய நகரம் என்பதால், ஏற்கெனவே காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். அதனால், ஏர்கூலரை பயன்படுத்தும்போது, அறைக்குள்  இருக்கும் காற்றில் ஈரப்பதம் அதிகமாகிவிடும். இந்தக் காற்றை தொடர்ந்து சுவாசிக்கும் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல்அல்லது ஆஸ்துமா  வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்தப் பிரச்னை வராமல் தவிர்க்க, ஒரு ஜன்னலையாவது திறந்துவைத்துத் தூங்குங்கள்.

மணிமகள்