உங்கள் பிள்ளைக்கு தேவையான கல்வி எது?



கல்வி வணிகமயமாகிவிட்ட இன்றைய நிலையில் பல்வேறு போட்டித் தேர்வுகளை உருவாக்கியதோடு அல்லாமல் தோல்விகளைத் தாங்கிக்கொள்ள  முடியாமல் தற்கொலை செய்துகொள்ளும் மனநிலையும் உருவாகி வருகிறது. எனவே, ‘‘கல்வி என்பது ஏட்டுக்கல்வியாக இல்லாமல் நல்ல  மனிதர்களை உருவாக்கும் கல்வியாக இருக்க வேண்டும்’’ என்கிறார் கல்வியாளர் இ.பி.க.சுந்தரம்.

‘‘தேர்வில் தோல்வியுற்றால் தற்கொலை, நினைத்த பாடப்பிரிவு கிடைக்கவில்லையென்றால் தற்கொலை, படிப்பதற்கு ஆசிரியர் கடிந்து கொண்டால்  தற்கொலை, மருத்துவம் மற்றும் உயர்கல்வியில் நடத்தும் பாடப் பகுதிகள் புரிந்து கொள்ள முடியவில்லையென்றால் தற்கொலை. எண்ணிக்கை மிக  மிகக் குறைவாக இருந்தாலும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைக்கிறது. பாடச் சுமையை அதிகரித்துள்ளது அரசு. அனைத்து வகையான  தேர்வுகளுக்கு அடிப்படை நமது பாடப் புத்தகங்களே. எனவே +2 வரையிலான பாடப்பிரிவுகளை நன்றாகப் படித்துவிடுங்கள் என்று கூறுவதற்குப் பதில்  54 ஆயிரம் கேள்விப்பதிலும் கூடுதலாகப் படிக்கக் கூறுவது; ஒரு மூட்டையைச் சிரமப்பட்டு தூக்குகிறவனிடம் மேலும் ஒரு மூட்டையை தூக்கி  வைப்பதாகும்.

பெரும்பாலான மாணவர்கள் விரும்புவது ‘கைபேசி’ மட்டும். பள்ளிக்கூடத்திற்கு 100 சதவீத தேர்ச்சி என்று அரசு நிர்ணயம் செய்துள்ளதால்,  மாணாக்கர்களைப்  படி படி என்று காலை முதல் மாலைவரை அழுத்தம் கொடுத்தல், அழுத்தம் கொடுப்பவர்கள். ஆசிரியர்களும், பெற்றோர்களும்.   மாலை வகுப்பு முடிந்தவுடன் என்ன செய்வாய் என்று வகுப்பறையில் சென்று கேட்டுப் பார்த்தால் மழலையர் பள்ளி முதல் 12 ஆம் வகுப்புவரை  கிடைக்கும் ஒரே பதில்: டியூஷனிற்கு செல்கிறோம் என்பதுதான். மிக ஏழ்மை நிலையில் உள்ள பிள்ளைகள் டியூஷன் செல்ல முடியவில்லையே என்ற  ஏக்கத்தில் சுற்றித் திரிகிறார்கள்.  “உருப்போடுதலுக்கு மிஞ்சின குரு இல்லை” என்ற  தத்துவத்தில் மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார்கள்.

அறிவியல் கண்காட்சிக்குப் பதில் மதங்களில் உள்ள அவதாரங்களையும், அது தொடர்பான கதைகளையும் காட்சிப்படுத்தத் தொடங்கியுள்ளார்கள்.  குழந்தைகள் மகிழ்ச்சியாகக் கற்பதற்கு சாரணர் இயக்கம் ஏற்படுத்தப்பட்டது. அதை மதச் சார்பான செயல்களாக பல சமஸ்கிருத வார்த்தைகளைச்  சேர்த்து, அதையும் கடினமாக்கியுள்ளார்கள். யோகாசனம் என்பது உடற்பயிற்சியில் ஒரு செயல். அதையே  உடற்பயிற்சியும் மற்றும் கல்வியுமாகக்  கருதி பள்ளிக்கூடங்களில் கட்டாயம் ஆக்கி  மன அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். வாசித்தல், கதை கூறல், விளையாட்டு போன்றவைகள்  பள்ளிக்கூட எல்லையைத் தாண்டிவிட்டது. இந்தியா முழுவதும் ஆங்கில மோகம் உள்ளது.

அதில் தன் சாதியை சார்ந்தவர்கள் நடத்தும் பள்ளிகளை சேர்த்துவந்தவர்கள், தற்போது தன் சாதியைச் சார்ந்தவர்களில் தன் மதத்தை சார்ந்தவர்கள்  நடத்தும் பள்ளிகளில் சேர்ந்து வருகிறார்கள். மாணாக்கர்கள் ஆசிரியர்களுக்குப் பாதபூஜை செய்யவைக்கும் பழக்கம் தொடங்கியுள்ளது. மேற்குறிப்பிட்ட  நிலையை மாற்ற, கணிதம், அறிவியல், சமூக அறிவியல், தமிழ், ஆங்கிலம், கணினி ஆகிய பாடங்களிலும் மொழிப்பாடங்களிலும்  திறமையுள்ளவர்களாக மாணவர்களை மாற்றுவதுதான், உலக சுகாதார நிறுவனம்(WHO) கீழ்க்குறிப்பிட்ட வாழ்க்கைத் திறன்களும் வளர்த்துக்  கொள்ளும் வகையில் கல்விக் கொள்கையும், பாடத்திட்டங்களும், பாடநூல்களும் அமையவேண்டும் என்று வலியுறுத்துகிறது.

தன்னைத்தானே அறிதல்: ஒருவர் தன்னைப் பற்றிய சுய ஆய்வு செய்து, தனது பலம், பலவீனம், பிடித்தது, பிடிக்காதது, தனது தனித்திறமைகளை,  தனது குறிக்கோள்கள், அவற்றை அடைய வாய்ப்புகள் மற்றும் தடைகள் பற்றி தெளிவாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.  தகவல் தொடர்பாற்றல்:  பேசுதல், கேட்டல், படித்தல், எழுதுதல், பிறர் புரிந்துகொள்ளும் விதமாக, தெளிவாக, உறுதியாக, பிறருடன் தகவல் தொடர்பு கொள்ளும் திறன்  வேண்டும். பிறருடன் உறவு பேணும் திறன்: ஆரோக்கியமான மனித உறவுகள் வாழ்வின் வெற்றிக்கான அடித்தளம், பிறருடன்  மரியாதை, மனித  நேயத்துடன் பழகி, நல்லுறவைப் பேணுதல் வேண்டும்.

உணர்ச்சிகளைக் கையாளும் திறன்

தமது உணர்ச்சிகளை சரியாகப் புரிந்து கொண்டு, அவற்றை முறையாக வெளிப்படுத்தும், கையாளும் திறன். ஆங்கிலத்தில் ‘எமோஷனல்  இன்டெலிஜென்ஸ்’ என்று கூறப்படுகிற உணர்ச்சிகளைக் கையாளும் அறிவு சார்ந்த திறனை இளைஞர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.  
பிறரைப் புரிந்துகொள்ளும் திறன்பிறர் நிலையில் தன்னை இருத்திப் பார்த்து, பிறரது உண்மையான நிலையையும், தேவைகளையும் புரிந்துகொண்டு,  பிறர் நலனில் கவனம் செலுத்தி செயலாற்றும் திறனைப் பெற வேண்டும்.

ஆழ்ந்து சிந்திக்கும் திறன்

பார்த்து, கேட்டு, உரையாடி, அனுபவித்து, அலசி, சேகரித்த தகவல்களை, முறையாக கொள்கைப்படுத்த, நடைமுறைப்படுத்த,  மதிப்பிட வகை செய்யும்  சிந்தனைத்திறனாம், ஆழ்ந்து சிந்திக்கும் திறன் வேண்டும்.

ஆக்க சிந்தனைத் திறன்

ஒரேமாதிரியாகச் சிந்திக்காமல்,(ஆங்கிலத்தில் ‘கிரியேட்டிவ் திங்கிங்’) மாறுபட்ட அல்லது படைப்புச் சிந்தனையுடன், ஒரு கேள்விக்கு ஒன்றுக்கு மேல்  தீர்வுகளை தேடும் சிந்தனை வேண்டும். இது படைப்புத்திறன் சார்ந்த சிந்தனை.

முடிவெடுக்கும் திறன்

முடிவெடுக்கும் நோக்கத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, சாத்தியமான வழிகளைக் கண்டறிந்து, அவற்றில் சிறந்த வழியைத் தேர்ந்தெடுத்து,  முடிவெடுக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பிரச்னையை தீர்க்கும் திறன்

பிரச்னையைத் தெளிவாக வரையறுத்து, தீர்க்கும் வழிகளைக் கண்டறிந்து, சிறந்த வழியை ஆய்ந்து தேர்ந்து,  அதன்மூலம் பிரச்னையைத் தீர்க்கும்  திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மன அழுத்தத்தைத் தவிர்க்கும் திறன்

 மன அழுத்தம் மற்றும் பதற்றத்திற்கு ஒருவர் ஆளாகும்போது அதற்கான அடிப்படைக்கு காரணங்களையும், அதைக் களைவதற்கான வழிகளையும்  தெளிவாகப் புரிந்துகொண்டு, அவற்றைக் கடைப்பிடித்து, மன அமைதியையும், மன ஆரோக்கியத்தையும் விரைந்து அடையும் திறன் வேண்டும்.

வாழ்க்கைத் திறன்

பாடங்களில் அதிக மதிப்பெண் பெற மனப்பாடம் என்ற தத்துவத்தைக் கடைபிடிக்கிறோம். அதை வாழ்க்கைத் திறன்களைப்பெற  பயன்படுத்த முடியாது.  ஆசிரியர்கள், மாணவர்கள் உரையாடல் மூலமும், செய்முறை மூலமும்தான் இணைச் செயல்களை புரிந்துகொள்ளவைக்க முடியும். இணைவுக்  கல்விகளான சுகாதாரம், சாரணர் இயக்கம், இளஞ்செஞ்சிலுவைச் சங்கம், தேசிய பசுமைப்படை பயிற்சி, உன்னை நீ அறிவாய் (உடல் உறுப்புகள் பற்றி  பேசுவது), பாலியல் கல்வி (வயதிற்கு ஏற்றவாறு), சட்டக் கல்வி, வானுலா கல்வி, சாலைவிதிகள் கல்வி, லஞ்ச ஒழிப்பு, சாதிமறுப்பு,  போதைப்பொருட்களின் தீமைகள், தீண்டாமை ஒழிப்பு, மூடநம்பிக்கைகளை விட்டொழித்தல்,  அறிவியல் ரீதியில் செயல்படுதல், விவசாயம்சார்ந்த  தகவல்கள் போன்றவற்றிற்கு பொதுக்கல்விபோல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அனுபவம் வாய்ந்த கல்வியாளர் குழு பாடங்களை வரையறை செய்வது போல், இணைச்செயல்களையும் வரையறுத்து வழிகாட்ட மாவட்டங்கள்தோறும்  குழுக்கள் அமைத்து செயல்படவேண்டும் (தற்போது என்.சி.சி செயல்படுவதுபோல்). இணைச்செயல்கள் செய்முறை பயிற்சியாக இருக்கவேண்டும்.  இதற்குச் செயல்பாடுகள் பதிவு செய்து தனியாக சான்று வழங்க வேண்டும். வகுப்புக்கு ஏற்ற இணைவுச் செயல்களை தேர்வு செய்வதும், அவற்றிற்குத்   தகுதியான ஆசிரியர்களை  கற்பிக்கச் செய்வதும் கல்வி நிறுவனத்தின் முதல்வர் பொறுப்பு. இந்த வகையில் சான்று வழங்கல் ‘திருவிதாங்கூர் -  கொச்சி’ அரசால் ஒருகாலத்தில்  நடைமுறைப்படுத்தியதாக ஒரு பதிவு உள்ளது. மாணவர்களை அடிமையாகக் கருதக்கூடாது.

மாணவர்களுக்கு வழிகாட்டுதல் மட்டும்தான் ஆசிரியர் வேலை. தம் கருத்துக்களை அவர்களிடம்புகுத்தாமல் மாணவர்களின் திறமைகளைப் பல  இணைவுச் செயல்கள் மூலம் வெளியே கொண்டுவர வேண்டும். இன்றைய தற்கொலைகளுக்கு,  ‘தைரியம் கற்றுக் கொடுக்காமையே’ முக்கிய காரணம்.  அதற்குப் பொறுப்பு ஆசிரியர்கள், கல்வித்துறை, பெற்றோர் மற்றும் அரசு. பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களிடம் ‘நீ  தோற்றுவிட்டால் என்ன செய்வாய்?’ என்று பத்து ஆண்டுகளுக்கு முன் கேட்டதற்கு, 15 மாணவ மாணவிகள் இருந்த குழுவில் ஒருவர்கூட  தோல்வியுற்றால் திரும்ப எழுதி வெற்றிபெறுவேன் என்று கூறவில்லை.

ஒவ்வொருவரும் அம்மாவின் முகத்தில் எப்படி விழிப்பேன்? வீட்டிற்கே போக முடியாதே! தந்தை உதைப்பாரே!... போன்ற பதில்களை கூறினர். மதக்  கல்வி ஏன் கூடாது என்றால், எந்த மதமாக இருந்தாலும் ‘நம்பிக்கை’ என்ற ஒரே தத்துவம்தான், அறிவியல் போல் கேள்விக்கு இடமில்லை. மனப்பாடம்  செய்து அதையே நம்பி இறுதிவரையில் வாழ்கிறான். ராஜஸ்தான் நீதிபதி ஓய்வு பெரும் நாளன்று, மயில் ஒரு சுத்த பிரம்மச்சாரி என்றும்,  ஆண்மயிலின் கண்ணீரைக் குடித்துத்தான் பெண் மயில் கருவுறும் என்று கூறினார்.

இது அவர் மாணவர் பருவத்தில் ஏதோ ஒரு மத நூலிலிருந்து மனப்பாடம் செய்தது. இதுபோன்ற பல மூட நம்பிக்கைகள் நிறைய உள்ளன. கல்வி  நிறுவனத்தில் ஒரு நாள் 8 மணிநேரம் மட்டும்தான் செலவிடுகிறார்கள் மாணவர்கள். அதனால் அறிவுசார்ந்த மனிதனாக்கும் கல்வி மட்டும்  போதுமானது. நல்ல மனிதர்களை உருவாக்கும் கல்வி தாய்மொழி வழி கல்வி ஒன்றினால் மட்டும்தான் முடியும்.  மேலும் சமுதாயமும் மனிதப்  பண்புகள் உடையதாகவும் இருக்க வேண்டும்’’
என்கிறார்.

தோ. திருத்துவராஜ்