ப்ரியங்களுடன்...




*கைத்தறி ஆடைகளை மக்கள் மறந்துவிட்ட இந்த நிலையில் கைத்தறியை பற்றி நினைவுகூர்ந்தது பெருமையாக இருந்தது. கைத்தறி துணியால் அழகாக சித்தரிக்க முடியுமா என்பதை இப்போது தெரிந்து கொண்டேன். ஒவ்வொரு நூலிலும் நெசவாளர்களின் உழைப்பு இருப்பது, நூற்றுக்கு நூறு உண்மை!
- வண்ணை கணேசன், சென்னை.

*எழுத்துப் பணி, ஆரோக்கியம் பேணும் மசாலாப் பொருட்கள் தயாரித்து விற்பது போன்ற தனித்துவ அடையாளமாக திகழும் சம்சுல் ஹீதா பானுவின் செயல்பாடு இளம் தலைமுறையினருக்கு ஊக்கமூட்டும் உற்சாக டானிக்.
- அனிதா நரசிம்மராஜ், மதுரை.

*காதலுக்கு கண்ணில்லை என்பதற்கு சிறந்த உதாரணம்... பார்வை சவால் மாற்றுத்திறனாளிகளான கண்ணன்-கண்மணி தம்பதியினர்.
- கோகிலாராஜு, திருவாரூர்.

*தனது குழந்தைக்காக ஆய்வில் ஈடுபட்டவர் தற்போது இயற்கை விவசாயம் மூலம் மூலப் பொருட்களை உற்பத்தி செய்து ஷாம்பு மற்றும் கிரீம் தயாரித்து சிறு தொழில் நிறுவனராக மாறிய மோனிஷாவை சாதனைப் பெண்மணி என்றே கூறலாம்.
- ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.

*ஆரோக்கியமாக பிறக்கும் குழந்தைகள் வளர்ந்த பின் ஆன்லைன் மோகத்தில் சிக்காமல் பார்த்துக் கொள்வது பெற்றோர்களின் கடமை என்பதை மனநல ஆலோசகர் காயத்ரி மஹதி நன்றாக புரிய வைத்தார்கள்.
- டி.முருகேசன், கங்களாஞ்சேரி.

*மகாகவி பாரதியார் பாடல்களை நினைவுகூரும் கோலங்களை கலை வடிவமாகக் காட்சிப்படுத்தும் மீனாட்சியின் தொடர் பணி பாராட்டுக்குரியது.
- அ.செல்வராஜ், கரூர்.

*சங்கீதா உணவக உரிமையாளர் சுரேஷ் பத்மநாபனின் மென்மை மேன்மையானதே. கோவிலுக்கு செல்வதில்லை எனவும், கடவுள்களாக உணவகத்திற்கு வருகை தரும்
வாடிக்கையாளர்களே என அவரது பேட்டி தமது தொழில் மீதுள்ள பற்றையும் வாடிக்கையாளர்களின் மீது வைத்துள்ள உயரிய மாண்பும் அவரை மென்மேலும் வளர துணை
நிற்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
- துரை. இராமகிருஷ்ணன், எரகுடி.

*யக்‌ஷகானம் கலையைப் பற்றி அதிக தகவல்கள் தெரிந்து கொண்டோம். 2000 பேருக்கு மேல் இந்தக் கலையை சொல்லிக் கொடுத்த பிரியங்கா மோகனாவுக்கு வாழ்த்துகள்.
- பானுமதி வாசுதேவன், மேட்டூர்.

அட்டைப்படம்: யுஹானிஸ்ரீ, புகைப்படம்: கேமரா செந்தில்