சிப்டா



இப்போது இந்தோனேஷியாவைக் கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு பெயர் ‘சிப்டா’. 17 வயது மாணவியான ரிஸ்கா ரைசா படைத்த கதாபாத்திரம் இது. சமீபத்தில் ‘யுனிசெப்’ நிறுவனம் குழந்தைகளின் நலனை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட காமிக் புத்தகங்களுக்கான ஒரு போட்டியை நடத்தியது. 130 நாடுகளைச் சேர்ந்த 3,600 பேர் இதில் கலந்துகொண்டாலும் ரிஸ்காவின் காமிக்ஸே பரிசைத் தட்டியது.

அந்தக் காமிக்ஸின் நாயகன் தான் சிப்டா.‘‘உலகிலுள்ள குழந்தைகள் பல்வேறு கொடுமைகளுக்கும் வன்முறைகளுக்கும் ஆளாகின்றனர். அந்த வன்முறையை  முடிவுக்குக் கொண்டுவரும் ஒரு சூப்பர் ஹீரோவை படைக்க வேண்டும் என்று எண்ணினேன்.

அப்படி உருவானதுதான் சிப்டா...’’ என்று சொல்லும்போதே ரிஸ்காவின் கண்கள் மலர்கிறது. இந்தோனேஷியாவில் உள்ள மகசாரில் பிறந்த ரிஸ்காவிற்கு ஓவியம் வரைவதில் அதீத ஆர்வம். தான் வரைந்த ஓவியங்களை தினந்தோறும் இன்ஸ்டாவில் பதிவிட்டு லைக்குகளை அள்ளுகிறார். சிப்டாவை மையமாக வைத்து ஒரு முழுநீள காமிக் புத்தகமும் வெளிவரவிருக்கிறது.