மகிழ்ச்சிக்கான 6 வழிகள்!



பலரது வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது அவ்வப்போது  வந்து  போகும்  விளம்பர இடைவேளை மாதிரி ஆகிவிட்டது. அதற்கு காரணம்  அவரவர்  மனம் தான். ஒருவர் எதை அதிகமாக நினைக்கிறாரோ அதையே மனம் திரும்பத் திரும்ப கேட்கிறது. 
அதுவே அவரைச் சுற்றியும் நடக்கிறது. எனவே சோகங்களை எல்லாம் தள்ளிவைத்து, மகிழ்ச்சியாக இருப்பது அவரவர் கையில்தான் இருக்கிறது. அந்த வகையில், மனதை உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ள எளிய 6 வழிகள் என்னவென்று  பார்ப்போம்:

உங்களைப் பற்றி சிந்தியுங்கள்

பெரும்பாலானவர்கள் அவர்களைப் பற்றி ஒருபோதும் யோசிப்பதே கிடையாது. வாழ்க்கையில் நாம் எவ்வளவு நல்லது செய்து இருக்கிறோம். நம்மால் என்ன செய்ய முடிந்தது. என்ன செய்ய முடியவில்லை. நம்மால் என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. எத்தனை பேரை மகிழ்ச்சியாக வைத்துள்ளோம். என்பதைப் பற்றி  ஒருமுறையேனும் சிந்தித்துப் பாருங்கள். முதலில் உங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

அன்பு செலுத்துங்கள்

உங்களை நேசிப்பவர்களையும் நீங்கள் நேசிப்பவர்களை எந்த சூழலிலும் கைவிடாதீர்கள். வெறுப்புகள், வீண் கோபங்களை தவிர்த்துவிட்டு, சுற்றி இருப்பவர்கள் மீது அன்பு செலுத்துங்கள். உங்களுக்கு யாரேனும் ஓர் உதவி செய்தால், அவர்களுக்கு நன்றி சொல்ல தயங்காதீர்கள். 

வாய்ப்புகளை வீணாக்காதீர்கள்

கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்கள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். எனவே  உங்களை தேடி வரும் வாய்ப்புகளை தவறவிடாதீர்கள். அதுபோல் வாய்ப்புக்காக காத்திருக்காமல், வாய்ப்பை உருவாக்குங்கள்.

தடைகளை தகருங்கள்

வாழ்க்கைப் பயணம் தடைகள் நிறைந்ததாகத்தான் இருக்கும். அவற்றை கண்டு கலங்காமல், தடைகளை தகர்த்து முன்னேறி செல்லுங்கள். சோகங்களால் மனது சோர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். துணிந்து செயல்படுங்கள். உங்கள்  கவலைகள் நாளடைவில்  காணாமல் போய்விடும்.

மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள்

உங்களைச்சுற்றி எவ்வளவு பெரிய தவறு நிகழ்ந்தாலும், முடிந்தவரை அனைவரையும் மன்னிக்க கற்றுக்கொள்ளுங்கள். மன்னிப்பு உங்கள் மரியாதையை அதிகரிக்கும். 

நிம்மதியாக உறங்குங்கள் 

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான ஒன்று தூக்கம். தூங்கும் போது தான் மனமும் உடலும் அமைதியாக இருக்கும். அப்போதுதான் நன்றாக யோசித்து செயல்பட முடியும். மனது சுறுசுறுப்பாக இருந்தால், மகிழ்ச்சி தானாகவே வரும்.

- தவநிதி