உயிரைப் பறிக்கும் செப்டிசீமியா



கவனம்

கீழே விழுந்து அடிபட்டாலோ, வெட்டுக்காயம் உண்டானாலோ ‘செப்டிக் ஆகிடாம இருக்க உடனே ஊசி போடுங்க’ என்கிற அட்வைஸை பல முறைக் கேட்டிருப்போம். செப்டிக் என்பதன் அர்த்தமே தெரியாமல் சகஜமாகப் புழங்குகிற இந்த அட்வைஸ் அலட்சியப்படுத்தக்கூடியது அல்ல.

‘சிறு காயமானாலும் உடனடியாக கவனித்து தகுந்த சிகிச்சை அளிக்காவிட்டால், நாளடைவில் சீழ் பிடித்து உயிரைப் பறிக்கும் எமனாக மாறிவிடக்கூடும்’ என்கிறார் பொது மருத்துவர் எஸ்.சி.சாண்டில்யா.செப்டிசீமியா (Septicemia) எனப்படுகிற இந்தப் பிரச்னை ஏற்படுவதற்கான காரணம், அறிகுறிகள், சிகிச்சை முறைகள் போன்றவற்றை விளக்குகிறார் அவர்.

‘‘நமது உடலில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் என இரண்டு உள்ளன. வெள்ளை அணுக்கள் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) உருவாக்குகின்றன. இடித்துக் கொள்ளல், தவறி கீழே விழுதல் போன்ற காரணங்களால் உடம்பில் அடிபடுதல், கை மற்றும் கால்களில் ஏற்படும் சிராய்ப்புகள் நாளடைவில் பெரிய காயங்களாக மாறுகின்றன.

 இந்தக் காயங்களை கிருமிகள் தாக்கும்போது, அவற்றின் நச்சுத்தன்மையை எதிர்த்து, நமது உடம்புக்குக் கவசம்போல வெள்ளை அணுக்கள் செயல்படுகின்றன. காயங்களில் உண்டாகும் கிருமிகளின் நச்சுத்தன்மை அதிகமாக உள்ளபோது, வெள்ளை அணுக்கள் Phagocytes என மாற்றம் பெறுகின்றன. இந்த நேரத்தில், இவை தன்னைத்தானே தியாகம் செய்து, தன் வடிவத்தை இழந்து, வெள்ளை அணுக்களாக நம் உடலில் இருந்து வெளியேறுகின்றன. அவ்வாறு வெளியேற்றப்படும் வெள்ளை அணுக்கள்தான் சீழ் என்று அழைக்கப்படுகின்றன.

செப்டிசீமியா என்பதற்கு சீழ்பிடித்தல் எனப்பொருள். உடலின் எந்தப் பகுதியில் அடிபட்டாலோ, கிருமிகளின் தாக்கத்தினாலோ, தோலில் உண்டாகும் விளைவுகளினாலோ சீழ்பிடித்து சிவப்பாக மாறுவதோடு,

வீக்கம், வலி, காய்ச்சல் எல்லாம் ஒன்றாக சேர்வதும், உடலில் உள்ள   வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையைத் தடுத்து, கிருமிகளின் நச்சுத்தன்மை பல மடங்கு வீரியத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் மீறி ரத்தத்தில் கலப்பதும் செப்டிசீமியா என்று அழைக்கப்படுகிறது. கைகள் மற்றும் கால்கள் செயல் இழப்பு, காயம் ஏற்பட்ட இடங்களில் வலி, வீக்கம் போன்றவை எல்லாம் இதன் அறிகுறிகளாக அமையும். 

குழந்தைகளுக்கு மலம், சிறுநீர் வெளியேறும் இடங்களை அடிக்கடி சுத்தப்படுத்தாமல் வைத்தல், மலம் மற்றும் சிறுநீர் கழித்த பிறகும் நாப்கின்களை பல மணிநேரம் மாற்றாமல் இருத்தல், நாப்கின்களில் அழுக்கு சேரவிடுதல் போன்றவற்றால்  குழந்தைகளுக்கு செப்டிக் ஏற்படும்.

பெரியவர்களுக்கு முதுகில் உண்டாகும் வியர்க்குரு, ரத்தக்கட்டி போன்றவற்றை  கவனிக்காமல் விட்டுவிட்டால், நாளடைவில் செப்டிக்காக மாறிவிடும். பல நாட்களாக இருக்கும் வியர்க்குரு, ரத்தக்கட்டி போன்றவை சீழ் பிடிக்க தொடங்குவதற்கு முன்பே, அதற்கான நச்சுத்தன்மை நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு முன்பே ரத்தத்தில் கலக்க ஆரம்பிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள், சர்க்கரை நோயாளிகள், காசநோய், டைபாய்டு நோயால் அவதிப்படுபவர்கள், பல நாட்கள் படுத்த படுக்கையாக இருக்கும் நோயாளிகள், தொழுநோயாளிகள் ஆகியோரின் உடலில் ஏற்படும் சிறு காயம் மற்றும் சிராய்ப்புகள் செப்டிக்காக மாறும் வாய்ப்புகள் உள்ளன.சர்க்கரை நோயாளிகளுக்கு அளவுக்கு அதிகமான சூடு, அதிகமான குளிர்ச்சி தெரியாது.  இவர்களுக்குப் பாதத்தின் அடிப்பகுதியில்  உணர்ச்சி குறைவாக இருக்கும்.

நீண்ட நேரம் வெயிலில் நடந்து வரும்போதோ, முள் குத்தினாலோ, அடிபட்டாலோ இவர்களுக்கு எதுவும் தெரியாது. வீட்டுக்கு வந்த பிறகுதான், காலின் அடிப்பாகம் பாளம்பாளமாக வெடித்து இருப்பதும், அடிபட்டு இருப்பதும், முள் குத்தி இருப்பதும் தெரிய வரும்.

இதை உடனடியாக கவனித்து சிகிச்சை அளிக்காவிட்டால், சீழ்பிடிக்கும் ஆபத்து உள்ளது. இதைப் போன்று, தலையில் முடி அதிகமாக இருத்தல், வியர்வை அதிகமாக சுரக்கும் உடற்பகுதிகள், நமது உடலில் வெளிச்சம் அதிகம்படுவதற்கு வாய்ப்பில்லாத இடங்கள் போன்ற உடலின் பகுதிகளில் சொறி, சிரங்கு அதிகமாகி, செப்டிக் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறையக் குறைய, சில நாட்களிலேயே கிருமிகளின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில் பெருகும். இதன் காரணமாக, உடலின் முக்கிய உறுப்புகளான கிட்னி, நுரையீரல், கல்லீரல், மூளை ஆகிய உறுப்புகள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகி, உயிரிழப்பு கூட ஏற்படலாம்.  எலும்பிலும் சீழ் பிடித்தல் (Osteomyelitis) ஏற்படும்.

ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் 4 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை இருப்பது இயல்பானது. சீழ் பிடித்தல் காரணமாக, நமது உடலில், வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை 40 ஆயிரம் வரை பெருகும். வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை பெருக்கத்தை அடிப்படையாக வைத்து, மருத்துவர்கள் செப்டிசீமியா தாக்கத்தை தெரிந்து கொள்வார்கள்.

கல்ச்சர் டெஸ்ட் வழியாக கிருமியைப் பரிசோதித்து, அதன் இனம், தன்மையைத்  தெரிந்து கொள்வார்கள்.  பின்னர், கல்ச்சர் மற்றும் சென்சிடிவிட்டி என்ன என்பதை கண்டுபிடித்து, அதற்குரிய ஆன்டிபயாடிக்கை மாத்திரை மூலமாகவோ, ஊசி மூலமாகவோ ரத்தத்தில் செலுத்தி, சீழ் பிடித்தலை உண்டாக்கும் கிருமிகளை அறவே ஒழித்து, செப்டிசீமியாவைக் குணப்படுத்தலாம்”.வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை குறையக் குறைய, சில நாட்களிலேயே கிருமிகளின் எண்ணிக்கை பல்லாயிரக்கணக்கில் பெருகும்!

- விஜயகுமார்
 படம்: ஏ.டி.தமிழ்வாணன்