ரத்தம் பற்றி இவையெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?!



தகவல்

நாம் உயிர் வாழ ரத்தம் மிகவும் அத்தியாவசியமானது. அதுவே நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நமது உடலின் ஒவ்வொரு உறுப்பிற்கும், ஏன் ஒவ்வொரு செல்களுக்குமே ரத்தம் பாய்ந்து செல்கிறது.
ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். எனவே, ரத்தம் பற்றிய அவசியமான தகவல்களை அறிந்துகொள்வோம்...

ரத்தமானது நரம்புகள்(Veins), தமனிகள் (Arteries) மற்றும் ரத்தத் தந்துகிகள் அல்லது ரத்த நுண் குழாய்கள் வழியாக நம் உடலில் பாய்கிறது.
 நமது உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்றால் சிறுநீரகப் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம், நரம்பு வீக்கம் போன்ற பல உடல் நல பிரச்னைகள் ஏற்படும்.

ஊட்டச்சத்து நிறைந்த சரிவிகித உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது போன்ற சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்வதோடு இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 ரத்தத்தை உடலின் எல்லா உறுப்புகளுக்கும் இதயம் பம்ப் செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம்.
 இதயத்திலிருந்து நிமிடத்திற்கு 5 லிட்டர் ரத்தம் உடலின் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் தொலைவு 1 லட்சத்து 19 ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு சமமாக உள்ளது. ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது அதன் வேகம் மணிக்கு 65 கி.மீ. ஆக உள்ளது. இது மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தைவிட அதிகம்.

 நம் உடலுக்கு அத்தியாவசியமான பிராணவாயுவை நுரையீரலுக்கு கொண்டு செல்வது, நுண்ஊட்டச்சத்துகள் அனைத்தையும் உடல் உறுப்புகளுக்குக் கொண்டு சேர்ப்பது போன்ற பணிகள் ரத்தத்தின் மூலம் நடைபெறுகிறது. உடலின்  தட்பவெப்ப நிலையை சீராக  பேணுவதற்கு ரத்தம் மிகவும்
அவசியம்.  நம் உடலில் ரத்தத்திற்கு நிகரான ஒன்று வேறெதுவும் இல்லை. ரத்தத்தை உருவாக்கவும் தயாரிக்கவும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டு இருந்தாலும் இயற்கையான ரத்தத்திற்கு ஈடு இணை ஏதுமில்லை. தற்போது கொடையாளிகளிடமிருந்து தானமாக பெறப்படும் ரத்தமே நோயாளிகளுக்கு ரத்தம் கிடைக்க ஒரே வழி.

 ஒரு மனிதனின் உடல் எடையில் சராசரியாக 7 முதல் 8 சதவிகிதம் வரை ரத்தத்தின் எடை உள்ளது. சராசரி எடை உள்ள ஆணின் ரத்த அளவு 12 pints அதாவது 5,676 மி.லி. அளவும், பெண்ணின் ரத்த அளவு 9 pints அதாவது 4,257 மி.லி. அளவும் இருக்கும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
 நம் ரத்தத்தில் பிளாஸ்மா, ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், ரத்தத்தட்டுக்கள் ஆகிய 4 முக்கிய மூலப் பொருட்கள் உள்ளன. 100 மி.லி. ரத்தத்தில் 50 சதவீதம் பிளாஸ்மாவும் 40 சதவீதம் ரத்த சிவப்பு அணுக்களும் உள்ளன. மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும்.

1900 ஆவது ஆண்டில் டாக்டர்.லான்ஸ்டைனர் என்பவர் ரத்தத்திலுள்ள பிரிவுகளைக் கண்டுபிடித்தார். அதன்படி ரத்தம் பொதுவாக A, B, O, AB என்று 4 வகைகளாக பிரிக்கப்பட்டது. ரத்தப்பிரிவுகளைக் கண்டுபிடித்த பின்னர் ஒரே ரத்த வகையை தானம் செய்த போதிலும் பல எதிர்விளைவுகள் ஏற்பட்டன. அதன் காரணமாக மருத்துவ அறிஞர்கள் ரத்தம் சம்பந்தமான தொடர் ஆராய்ச்சிகளில் இறங்கினர்.

Rh ரத்த வகைகள் 1940-ல் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த புதிய ரத்த வகையானது Rhesus என்ற குரங்கிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் Rh-group என்று பெயரிடப்பட்டது. இது Rh Positive group என்றும் Rh Negative group என்றும் பிரிக்கப்பட்டது. இதன் பின்னர் A வகை ரத்தம் உள்ள ஒருவருக்கு A வகை ரத்தம் செலுத்தும்போது Rh வகையும் ஒற்றுமையாக அமைய வேண்டும் என்ற புதிய அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டது. அதாவது A வகையினர் Rh பாசிட்டிவாக இருந்தால் அவர்களுக்கு A வகை Rh பாசிட்டிவ் ரத்தம்தான் கொடுக்க வேண்டும். Rh நெகடிவ் உள்ளவருக்கு Rh நெகடிவ் ரத்தம்தான் கொடுக்க வேண்டும்.

 திரவ நிலையில் உள்ள ரத்தத்தை பிளாஸ்மா(Plasma) அல்லது நிணநீர் என்று சொல்கிறோம். இது தண்ணீர், சர்க்கரை, கொழுப்பு, புரதம் மற்றும் தாதுஉப்புகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு கலவையாக உள்ளது.

 ரத்த சிவப்பு அணுக்கள்(Red blood cells) ரத்தத் தட்டுக்களையும், பிராண வாயுவையும் முதுகெலும்பு மற்றும் உடலின் அனைத்து திசுக்களுக்கும் கொண்டுபோய் சேர்க்கிறது. உடல் செல்களுக்கு ஆக்சிஜனை கொண்டு சேர்ப்பதும், கார்பன் டை ஆக்சைடு வாயுவை சுமந்து சென்று வெளியேற்றுவதும் இதன் பணி.

ரத்த சிவப்பு அணுக்களின் உள்ளே ஹீமோகுளோபின் என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுதான் ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது.
 ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்தசோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்கள் உடலில் செலுத்தப்படுகிறது.

நம்முடைய எலும்பு மஜ்ஜையானது ரத்த வெள்ளை அணுக்களை எப்போதும் உற்பத்தி செய்து கொண்டே இருக்கும். இந்த அணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாகி ரத்தம் மற்றும் நிணநீர் திசுக்களில் சேமிக்கப்படுகின்றன. ஒரு சில வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம் 1 முதல் 3 நாட்களாக உள்ளது.  நம் உடலில் ரத்த வெள்ளை அணுக்கள்(White blood cells) ஒரு சதவீதம்தான் இருக்கும். இந்த அணுக்களை Leukocytes என்றும் அழைக்கிறோம். இவை நோயிலிருந்தும், உடல் நல குறைவிலிருந்தும் நம்மை பாதுகாக்கிறது. இவை நோய் எதிர்ப்புத் திறனை பெற்றிருப்பதோடு ஒரு போர் வீரனைப் போல செயல்படுகிறது.

 ரத்தத்தட்டுக்கள்(Platelets) என்பது மிக நுண்ணிய ரத்தத் திசுக்கள். இவை நமது உடலிலிருந்து அதிகப்படியான ரத்தம் வெளியேறாமல் தடுத்து ரத்தம் உறைதலுக்கு உதவுகிறது.  எலும்பு மஜ்ஜையானது எலும்புகளின் நடுவில் பஞ்சைப் போன்று இருக்கும் ஒரு அமைப்பு. ரத்தத்தட்டுக்கள் உற்பத்தியான பிறகு நமது ரத்த ஓட்டத்தில் கலந்து சராசரியாக 8 முதல் 10 நாட்கள் வரை இருக்கும்.

 நம் ரத்தத்தில் ஆன்டிஜென்களும்(Antigens) ஆன்டிபாடிகளும்(Antibodies) இருக்கும் நிலையைப் பொறுத்தே ரத்தம் வகைப்படுத்தப்படுகிறது. 1900-ம் ஆண்டில் டாக்டர். லான்ஸ்டைனர் என்பவர் ரத்தத்திலுள்ள பிரிவுகளைக் கண்டுபிடித்தார். அதன்படி ரத்தம் பொதுவாக A, B, O, AB என்று 4 வகைகளாக பிரிக்கப்பட்டது.

 ரத்த சிவப்பணுக்களில் ஏ, பி யை தவிர மேலும் ஒரு ஆன்டிஜென் சில நேரங்களில் காணப்பட்டால் இவ்வகை புரதம் RHD
ஆன்டிஜென் என்று சொல்லப்படுகிறது.  ஒருவரின் ரத்த சிவப்பணுக்களில் RhD Protein ஆன்டிஜென் காணப்பட்டால் அவற்றின் ரத்த வகை Positive blood என்றும் அவ்வாறு இல்லை எனில் Negative blood என்றும் பிரிக்கப்படுகிறது. இதன்படி A Positive (A+), A Negative (A-), B Positive (B+), B Negative (B-), O Positive (O+), O Negative (O-), AB Positive (AB+), AB Negative (AB-) என்று ரத்தம் 8 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதோடு பம்பாய் ரத்தம் என்ற மற்றொரு வகை ரத்தமும் உள்ளது.

 1952-ம் ஆண்டு முதன் முதலில் டாக்டர் Y.M.Bhende என்பவர் பம்பாய் ரத்ததைக் கண்டுபிடித்துள்ளார். பம்பாயில் அறிமுகமானதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறது. 10 லட்சம் பேர்களில் நால்வருக்குத்தான் இந்த ரத்தவகை இருக்கிறது.

 O ரத்த வகை உள்ளவர்கள் 37.12 %, B ரத்த வகை உடையவர்கள் 32.26 %, A ரத்தம் வகை உள்ளவர்கள் 22.88% AB ரத்தம் உடையவர்கள் மிகவும் குறைவாக, அதாவது வெறும் 7.74% பேர் மட்டுமே உள்ளனர் என்று இந்தியாவில் ஆய்வு மேற்கொண்டு 2016 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

 O வகை ரத்தப்பிரிவினரை Universal Donor என்று அழைக்கிறோம். இந்த வகை ரத்தமுள்ளவர்கள் A, B, AB போன்ற ரத்த வகையினருக்கும் ரத்தம் கொடுக்கலாம். அதுபோன்று AB ரத்த வகையினரை Universal Recipient என்று அழைக்கிறோம். இந்த வகை ரத்தமுள்ளவர்களுக்கு O, A, B வகை ரத்தங்களில் எதனையும் செலுத்தலாம்.

 பம்பாய் ரத்த வகை மிகவும் அரிய வகை ரத்தம் என்பதாலும், இந்த ரத்தம் உள்ளவர்கள் மிகவும் குறைவு என்பதாலும் ரத்தம் தேவைப்படும்போது நோயாளி அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இவ்வகை ரத்தம் உள்ளவர்கள் ரத்ததான முகாமில் ரத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் இந்த வகை ரத்தத்தின் வாழ்நாள் வெறும் 45 நாட்கள் மட்டும்தான்.

எனவே தேவைப்படும்போது மட்டும் கொடுப்பது நல்லது.  பம்பாய் ரத்த வகை உள்ள ஒருவருக்கு ரத்தம் தேவைப்பட்டால் மற்ற எந்தப் பிரிவு ரத்தத்தையும் செலுத்த முடியாது. அதே வகை ரத்தம்தான் செலுத்த வேண்டும். பொதுவாகவே அந்தந்த வகை ரத்தத்திற்கு, அந்தந்த வகை ரத்தம் செலுத்தும் முறைதான் சிறந்தது.

- அ.வின்சென்ட், கௌதம்