உலகின் பிரபலமான சப்ளிமெண்ட்



Spirulina Special

அதிக செல்வாக்கு படைத்த சப்ளிமென்ட் என்ற பெருமை ஸ்பைருலினாவுக்கு உண்டு. அதிக ஆன்டி ஆக்சிடென்ட் நிறைந்தது என்றும் சிலாகிக்கிறார்கள் அதன் ரசிகர்கள். குறிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில் ஸ்பைருலினா பற்றிய விழிப்புணர்வு பலரிடமும் பரவலாக அதிகரித்திருக்கிறது. அப்படி என்ன ஸ்பைருலினாவுக்கு சிறப்பு?

  25 ஆயிரம் வகையான பாசிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. அதில், 75 வகையான பாசிகள் மட்டும் மனித இனத்தால், உணவாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில், கடல் பாசி என்ற பெயராலும் குறிப்பிடப்படுகிற இந்த ஸ்பைருலினா(Spirulina) முதல் இடம் பிடிக்கிறது. தமிழில் இதனை சுருள் பாசி என்கிறார்கள்.

 ஸ்பைருலினாவை நேரடியாகக் கண்களால் பார்க்க முடியாது. நீரில் உயிர் வாழும் ஒரு வகையான தாவரம்தான் இந்தக் கடற்பாசி. நீலமும், பச்சையும் ஒன்றாகக் கலந்த நிறத்தில் காணப்படும் இந்த உயிரினத்தில் இயற்கையாகவே, ஆரோக்கியத்துக்குத் தேவையான எண்ணற்ற ஊட்டசத்துக்கள் நிறைந்து
உள்ளன.

 1965-ம் ஆண்டு ஆப்ரிக்காவில் கடுமையான உணவு மற்றும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. அதன் காரணமாக, அந்நாட்டு மக்கள் சோமாலிய மக்களைப்போல் எலும்பும்தோலுமாக காட்சி அளித்தனர். அதே வேளையில், சார்டு(மடகாஸ்கர் தீவு) என்ற பகுதியில் வசித்து வந்த மக்கள் எவ்வித பாதிப்பு இல்லாமல், முழு ஆரோக்கியத்துடன் காணப்பட்டனர்.

இந்த மருத்துவ அதிசயத்தைக் கேள்விப்பட்ட பெல்ஜிய நாட்டு மருத்துவக் குழுவினர், அம்மக்களின் உடல்நலம் குறித்து பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டனர். அவற்றின் முடிவில், அவர்கள் குடித்த தண்ணீரில், கடல் பாசி பெருமளவில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

தாய்ப்பால் அதிகளவில், சுரக்க வைக்க உதவுகிற மக்னீசியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் இந்த உணவுப்பண்டத்தில் ஏராளமாக காணப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட உணவுப்பண்டமான ஸ்பைருலினாவில் ஆல்கலின் 80 சதவீதமும், அமிலம் 20 சதவீதமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒரு கிலோகிராம் எடையுள்ள சுருள் பாசியில், இடம் பெற்றுள்ள ஊட்டசத்துக்கள் ஆயிரம் கிலோ காய்கறிகளுக்குச் சமமாகும்.

இந்தியாவில் சுருள் பாசி பயன்பாட்டிற்கு வந்து ஏறக்குறைய 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதேசமயம், கடந்த ஐந்து வருடங்களாகத்தான் இந்த தாவரத்தை வளர்க்கும் முறை பரவத் தொடங்கி உள்ளது.

மனிதன் மட்டுமில்லாமல், ஆடு, மாடு, மீன் போன்ற மற்ற உயிரினங்களுக்கும் சிறந்த உணவாக இந்தப் பாசி திகழ்கிறது. கால்நடைகளான மாடு, ஆடு முதலானவற்றின் பால் சுரத்தல் தன்மையை அதிகரிக்க செய்யவும், மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்களின் வளர்ச்சியை அதிகப்படுத்தவும் இந்த உணவு துணை செய்கிறது.

நமது உடல் இயக்கங்களைச் சீராக வைக்கவும், நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க செய்யவும் சுருள் பாசி பயன்படுகிறது. மேலும், இந்த தாவரத்தில் பச்சையம் ஏராளமாக இருக்கிறது. அதனால், உடலில் காணப்படுகிற நச்சுப்பொருட்கள் வெளியேற்றப்பட்டு, உடல் முழுவதும் தூய்மைப்படுத்தப்படுகிறது.

சுருள் பாசியில் இரும்புச்சத்து 13 சதவீதம் உள்ளது. எனவே, ரத்தசோகை ஏற்படுவதைத் தடுத்து, நம்மைப் புத்துணர்வுடன் செயல்பட வைக்கின்றது.

 காலைவேளையில், உணவு எதுவும் சாப்பிடாமல், கடற்பாசியைச் சாப்பிட்டு வந்தால் 6 வாரங்களில் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு கணிசமாக குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

 ஸ்பைருலினாவைத் தினமும் சாப்பிட்டு வர, அடிக்கடி தோன்றும் பசி உணர்வு கட்டுப்படுத்தப்படும். இதன் காரணமாக, கலோரி அளவு கணிசமாக குறைந்து, உடல் எடை கட்டுப்படுத்தப்படும்.    

 ஸ்பைருலினாவில் உள்ள பி வைட்டமின், சர்க்கரை நோயாளிகளின் கணையத்தை நன்றாக இயங்க வைக்கிறது. அதன் காரணமாக, தேவைப்படும் அளவு இன்சுலின் சுரந்து, ரத்தத்தில் காணப்படுகிற குளுக்கோஸ் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

 நமது உடலில், செயல் திறன் இழந்த செல்களை, உயிர்ப்பிக்கும் ஆற்றல் சுருள் பாசிக்கு இருக்கிறது. இதனால்,, குடல் புண், புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன.

 தோலில் ஏற்படுகிற சுருக்கங்களை முழுவதுமாக அகற்றும் ஸ்பைருலினா இளமைத் தோற்றத்தைத் தருகிறது. வெண்தேமலை மெல்லமெல்ல குணப்படுத்தவும் இந்தப் பாசி உதவுகிறது.

 கேரட்டில் காணப்படுவதைவிட, பீட்டா கரோட்டின் சத்து இதில் 10 மடங்கு அதிகம் உள்ளது. இதனால், கண்ணில் தோன்றும் கருவளையம், முகப்பருக்கள் நீக்கப்பட்டு முகம் பொலிவு பெறுகிறது.

 அன்றாட உணவில், சுருள் பாசியைக் கணிசமான அளவில் சேர்த்து வர நினைவாற்றல் அதிகரிக்கப்பட்டு, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும்.

 உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒப்பற்ற அருமருந்தாக இந்த உணவுப்பொருள் திகழ்கிறது. ரத்தத்தில் எச்.ஐ.வி. வைரஸ் எண்ணிக்கைப் பெருகுவதைக் கட்டுப்படுத்தி, அந்த நோயாளிகளின் வாழ்நாட்களை அதிகரிக்க துணைபுரிகிறது.

 பெரும்பாலும் துணை உணவாகப் பயன்படுத்தப்படும் சுருள் பாசியில் காணப்படுகிற புரதம் எளிதில் செரிக்கும் தன்மை கொண்டது. கோடைக்காலத்தில் அதிகரிக்கும் உடல் சூட்டைத் தணிக்கும் வல்லமை இதற்கு உண்டு.

 எத்தகையச் சூழ்நிலையிலும், உடல் ஆரோக்கியத்தை எந்தவிதமான பாதிப்புகளும் இல்லாமல், காப்பாற்றும் திறன் ஸ்பைருலினாவுக்கு உண்டு. அதனால், விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் வீரர், வீராங்கனைகளும் தங்களுடன் உணவாக இந்த தாவரத்தை எடுத்துச் செல்லும்
வழக்கம் கொண்டுள்ளனர்.

 எளிதில் செரிமானம் ஆகும் தன்மையைச் சுருள் பாசி கொண்டு இருப்பதால், சிறுவர், சிறுமியர் தொடங்கி, வயோதிகர் என அனைத்து தரப்பினரும் உண்ணலாம்.

 மற்ற சப்ளிமெண்டுகளைப் போலவே ஸ்பைருலினாவுக்கும் பக்கவிளைவுகள் உண்டு. எனவே, மருத்துவ ஆலோசனை இல்லாமல் உட்கொள்ளக் கூடாது.

- விஜயகுமார்