புத்திசாலித்தனத்துக்கும் சோம்பேறித்தனத்துக்கும் தொடர்பு உண்டு!



ஆராய்ச்சி

அதிக சோம்பேறித்தனமானவர்கள் நிறைய புத்திசாலித்தனம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறியிருக்கிறது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த கல்ஃப் கோஸ்ட் யூனிவர்சிட்டி மாணவர்கள் இந்த சுவாரஸ்யமான ஆய்வைச் செய்திருக்கிறார்கள்.

அறிவுக்கூர்மை மிக்கவர்கள் யார் என்று அறிந்துகொள்ளும் ஆர்வத்தின் காரணமாக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நடைப்பயிற்சி, ஓடுதல், யோகாசனம் செய்தல் போன்ற உடற்பயிற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பவர்கள் உட்கார்ந்த இடத்தைவிட்டு எழுந்துகொள்ளாமல் நொறுக்குத்தீனிகளைச் சாப்பிட்டு கொண்டிருப்பவர் அறிவுக்கூர்மை மிக்கவரா அல்லது உடல் உறுப்புகளுக்கு வேலை கொடுத்த வண்ணம் எந்த நேரமும் இயங்கி கொண்டிருப்பவர்கள் புத்திசாலி நபரா என்ற வித்தியாசமான தலைப்பில் ஆய்வை மேற்கொண்டனர்.

இந்த ஆராய்ச்சியை மேற்கொள்வதற்காக 60 கல்லூரி மாணவ, மாணவியரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டனர். இவர்களில் சிந்தனையாளர்கள் என்ற வகையில் ஒருபிரிவினரும், சிந்தனையாளர்கள் அல்லாதவர்(Thinkers Non-Thinkers) என்ற வகையில் ஒரு பிரிவினரையும் தேர்ந்தெடுத்தனர். இரண்டு தரப்பினருக்கும் தனித்தனியே பிரித்து தருதல் போன்ற கேள்விகள் உட்பட, பலவிதமான ஸ்டேட்மென்டுகள் அந்த வினாப்பட்டியலில் தரப்பட்டு இருந்தன.

உதாரணத்துக்கு, ‘புதிய தீர்வுகளை உள்ளடக்கிய சவாலான வேலையை நான் உண்மையிலேயே ரசித்தேன்!’  ‘நானும்கூட சிரமமாக உணர்ந்ததாகத் தான் மட்டுமே கருதுதல்’ போன்ற பலவிதமான ஸ்டேட்மென்டுகள் தரப்பட்டு  இருந்தன. அது மட்டுமில்லாமல், இத்தகைய ஸ்டேட்மென்டுகளில் எதனுடன் நீங்கள் ஒத்துப்போகிறீர்கள்? எதனை மறுக்கிறீர்கள்? என்பதற்கான காரணங்களை ஆணித்தரமாக சொல்ல வேண்டுமெனவும் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்ட மாணவ, மாணவியர் ஆராய்ச்சி குழுவினரால் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.   

அடுத்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 60 மாணவ, மாணவியரும் திங்கட்கிழமை தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை வரையிலும், ஒவ்வொருவரும் எந்த அளவிற்கு, உடலளவில் சுறுசுறுப்பாக செயல்படுகின்றனர் என்பதைக் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதற்காக, அவர்களுடைய உடலில், அக்சலரோமீட்டர்(Accelerometer) என்ற கருவி பொருத்தப்பட்டது. அந்த உபகரணத்தில் இருந்து பெறப்பட்ட புள்ளிவிபரங்கள் அடிப்படையில், எந்த நேரமும் சிந்திப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் தரப்பினர், எதிரணியினருடன் ஒப்பிட்டுப்பார்க்கும்போது, குறைந்த அளவே, உடல் உழைப்பு கொண்டு இருப்பது தெரிய வந்தது.

அதேவேளையில், இரண்டு தரப்பினருக்கும் இடையே, வார முடிவில் குறிப்பிட்டு சொல்லும் அளவிற்குப் பெரிதாக வித்தியாசம் எதுவும் இல்லையென ஆய்வுக்குழுவினர் தெரிவிக்கின்றனர். மேலும், இதுதொடர்பாக, கருத்து தெரிவித்த ஆய்வாளர்கள், சிந்தனையாளர்களுடன் மாற்று கருத்து உடையவர்கள், பலமணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்தவாறு, வாழ்க்கையைப் பற்றியும், கண்களுக்குப் புலப்படாத எண்ணங்களைப் பற்றியும் சதாகாலமும் சிந்தித்து கொண்டிருப்பதில் நாட்டம் இல்லாதவர்களாகவும் காணப்படுகின்றனர்.

இந்த உணர்வு அலைகளே, சிந்தனையில் நாட்டம் இல்லாதவர்களை, விளையாட்டு மற்றும் பிற உடல் சார்ந்த இயக்கங்களை நோக்கி ஈர்க்கிறது என்றும் கூறுகின்றனர். முன்னதாக, இதே தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி, பரந்த மனப்பான்மை தனிமையாக இருப்பதற்கே முன்னுரிமை தருகிறது என்றும், அதன்மூலம் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள் சிந்திப்பதற்கு நிறைய நேரம் கிட்டுகிறது என்றும், அறிவுத்திறன் மிக்கவர்கள் நேரத்தை எதிர்பார்த்து, அதனைப் பயனுள்ளதாக்கி கொள்கின்றனர் எனத் தெரிவிக்கிறது. அதான் ஆராய்ச்சியிலேயே சொல்லிட்டாங்களே என அக்கடாவென்று இருக்காதீர்கள். எல்லா சோம்பேறிகளும் புத்திசாலிகள் அல்ல என்றும் அதே ஆராய்ச்சியில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

- வி.ஓவியா