போதை மருந்தாகும் தூக்க மாத்திரை



அலர்ட்

அறிவியல் கண்டுபிடிப்புகள் என்னவோ நல்ல நோக்கங்களுக்காகத்தான் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆனால், அதை சிலர் தவறான முறையில் பயன்படுத்துகிறபோதுதான் அந்த உன்னத கண்டுபிடிப்பே விபரீதமாகிவிடுகிறது. தூக்கக் குறைபாட்டால் கஷ்டப்படும் நோயாளிகளுக்கு குறிப்பிட்ட தூக்க மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைப்பது வழக்கம். தற்போது இந்த மருந்தை தென்னிந்திய கல்லூரி மாணவர்கள் போதை மருந்தாக உபயோகிக்க ஆரம்பித்திருக்கும் அதிர்ச்சி உண்மை வெளிவந்திருக்கிறது.

மது, கஞ்சா கொடுக்கும் போதை போதாமல் கூடுதல் போதைக்காக இப்போது தூக்க மாத்திரையையும் சேர்த்துக் கொண்டுள்ளார்கள். சாதாரணமாக ஒரு அட்டை 60 ரூபாயாக விற்கப்படும் இந்த மாத்திரை கல்லூரி மாணவர்கள் 500 ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள் என்றால் இந்த மாத்திரைக்கு ஏற்பட்டுள்ள டிமாண்டை தெரிந்து கொள்ளலாம். அப்படியே விழுங்குவது, மாத்திரையை பொடி செய்து கஞ்சாவைப்போல முகர்வது அல்லது கஞ்சாவோடு சேர்த்து உபயோகிப்பது, குளிர்பானங்கள், மது போன்றவற்றோடு சேர்த்து உபயோகிப்பது என பல வழிகளிலும் உச்சபட்ச போதைக்காக பயன்படுத்துகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

‘பட்டன்’, ‘படையப்பா’, ‘நைட்ரஸ்’ இதெல்லாம் அந்த குறிப்பிட்ட மாத்திரைக்கு மாணவர்கள் வைத்துள்ள சங்கேத வார்த்தைகள். எளிதில் இந்த மாத்திரை கிடைக்காது என்பதற்காக போலியான ப்ரிஸ்க்ரிப்ஷனை மருந்து கடைகளில் கொடுத்து வாங்குவதும் நடக்கிறது. இதற்கு ஏற்பட்டுள்ள டிமாண்டை பயன்படுத்திக் கொண்டு மருந்து விற்பனையாளர்கள் அண்டை மாநிலங்களிலிருந்து தருவிக்க கடத்தலில் ஈடுபட்டுள்ளதும் தெரிய
வந்துள்ளது. அப்படி கர்நாடாகாவில் இருந்து ரயிலில் கடத்தி வந்தபோதுதான் கலால் அதிகாரிகள் மடக்கிப் பிடித்தபோது இந்த உண்மை வெளிவந்துள்ளது.

‘இந்த மாத்திரை தூக்க உணர்வைக் கொடுக்குமே தவிர போதை இருக்காது. மற்ற போதை மருந்துகளோடு எடுத்துக் கொள்வதால் மனக்குழப்பம் வேண்டுமானால் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள். இத்துடன் சுவாசக் கோளாறுகள், நாள்பட்ட ஆஸ்துமா போன்ற பிரச்னை உள்ளவர்கள் இந்த மாத்திரையை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் மூச்சுவிடுவதில் மிகவும் சிரமப்படுவார்கள்.

தலைசுற்றல், மயக்கம் இருப்பதால் மாணவர்களுக்கு, மனச்சோர்வு மற்றும் மனப்போக்கு மாற்றங்கள், ஆக்ரோஷம், குழப்பம், கவலை, அமைதியற்ற தன்மை மற்றும் நினைவக இழப்பு உள்ளிட்ட  பக்க விளைவுகள் ஏற்படலாம்’ என்றும் மனநல மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.பெற்றோர்களும், ஆசிரியர்களும், அதிகாரிகளும் கவனமுடன் கையாள வேண்டிய பிரச்னை இது என்பது மட்டும் தெளிவாகிறது.

- என்.ஹரிஹரன்