அதிகரிக்கும் ஆஸ்துமா அபாயம்



தேவை அதிக கவனம்

சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வரும் சூழலில் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த ஆஸ்துமாவானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவரையும் விட்டு வைப்பதில்லை. ஆஸ்துமாவைத் தவிர்க்க என்ன செய்யலாம்? பாதிக்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்குகிறார் நுரையீரல் சிறப்பு மருத்துவர் ஹேமலதா.

ஆஸ்துமாவுக்கான பொதுகாரணங்கள்

அலர்ஜி, தூசி, குளிர்ந்த காற்று மற்றும் செல்லப் பிராணிகளிலிருந்து உதிரும் முடி, அதன் இறகு போன்றவை ஆஸ்துமாவிற்கான பொதுவான காரணங்கள். ஆனால், இதுதவிர ஆஸ்துமாவிற்கான முக்கியமான காரணங்கள் இரண்டு வகையாக பார்க்கப்படுகிறது.

அலர்ஜிகல் மற்றும் நான் அலர்ஜிகல் என்று கூறப்படுகிறது. அலர்ஜி, காற்று தூசு, வெளியில் உள்ள காற்று மாசு, அதிக குளிர்ச்சி இதுதவிர அடிக்கடி சளி ஏற்படுதல், மூக்கொழுகுதல், அடுக்குத் தும்மல், சைனஸ் மற்றும் மரபியல் காரணம் போன்றவையும் இதற்கான முக்கிய காரணம் என்று அறியப்படுகிறது.

பொதுவாக 30 வயதிற்கு மேல் ஆஸ்துமா வருவதற்கான காரணங்கள் வீட்டில் உள்ள தூசுக்கள், சரியான காற்றோட்டம் இல்லாத வீட்டின் அமைப்பு, சாலையில் உள்ள அதிக காற்று மாசு மற்றும் நாம் செய்யும் வேலையைப் பொறுத்ததே ஆகும். உதாரணமாக கட்டிடம், மர வேலைகள், மாவுமில் போன்றவற்றில் வேலை செய்பவர்களுக்கு ஆஸ்துமா சீக்கிரமே உருவாகிறது. உடல் பருமன் அதிகமாக உள்ளவர்களுக்கும் ஆஸ்துமாவானது ஏற்படும் சாத்தியம் அதிகம். பெண்களைப் பொறுத்தவரையில் 30 வயதிற்கு மேலேயே இந்த ஆஸ்துமாவானது ஏற்படுகிறது.

குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருவதற்கான காரணங்கள்

பெற்றோர்களுக்கு ஆஸ்துமா இருக்கும் பட்சத்தில் பிள்ளைகளுக்கும் வரும் வாய்ப்புகள் அதிகம். சைனஸ் மற்றும் அதிக சளித் தொல்லையால் அவதியுறும் குழந்தைகளுக்கும் டான்சில் எனப்படும் தொண்டையில் வளரும் சதையின் அளவைப் பொறுத்தும் ஆஸ்துமா வருகிறது. இவை அனைத்துமே ஒன்றோடொன்று தொடர்புடையவை.

பொதுவாக மிகச்சிறிய வயதிலேயே ஆஸ்துமா ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு மரபியல் மற்றும் அலர்ஜியே முக்கியமான காரணமாக இருக்கிறது. ஆனால், இது குழந்தையின் 6 வயதுக்குள் குணமடையவும் வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு 6 வயதிற்கு மேல் தொடருமானால் அது அவர்களின் மரபியலின் தீவிரமான காரணமாகவும் இருக்கலாம். இது தவிர குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆஸ்துமாவிற்கான முக்கியமான காரணம் சுற்றுச்சூழல் மாசே ஆகும்.

மூச்சுத்திணறல் எப்போதெல்லாம் அதிகமாக ஏற்படும்?

ஒவ்வொரு தட்பவெப்ப நிலையில் இதன் தன்மை மாறுபடும். அனைத்து நாட்களிலும் ஆஸ்துமா இருக்கும் என்று கூற முடியாது. அதிகப்படியாக குளிர் காலங்களில் இந்த ஆஸ்துமாவானது தொடர்ந்து இருக்கும். வெயில் காலங்களில் இருக்கவே இருக்காது. மறுபடியும் குளிர்காலங்களில் வர ஆரம்பிக்கும். சைனஸ் மற்றும் அதிக சளி இருந்து கொண்டே இருக்கும்போதும் ஆஸ்துமா ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆனால், எல்லா சளி பிரச்னையுமே ஆஸ்துமாவாக மாறாது. அதிகப்படியான அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கே ஆஸ்துமாவாக மாறும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

ஆஸ்துமா உள்ளவர்கள் குளிர்காலங்களில் சிட்ரிக் அமிலம் உள்ள எலுமிச்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்றவற்றை தவிர்க்க வேண்டும். சிலருக்கு சாக்லேட், இனிப்புகள், கேக் மற்றும் குளிர்பானங்களாலும் ஏற்படும். ஒரு சிறிய அளவு கேக்கை உட்கொண்டாலும் உடனே மூச்சுத்திணறல் ஆரம்பித்துவிடும். குளிர்காலங்களில் மட்டும் இவற்றை தவிர்ப்பது நல்லது.

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த முடியுமா?

ஆஸ்துமாவில் மூன்று நிலைகள் உள்ளது. குறைந்த அளவு, அதிகளவு, மிக அதிகளவு ஆஸ்துமா என மூன்று நிலையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆஸ்துமா சிகிச்சையில் ஸ்டீராய்டு மருந்துகள் உபயோகிப்பதால் அவற்றின் நிலைகளுக்கு ஏற்ப மருந்தின் அளவு குறைக்கப்படும்.மிக அரிதாக மூச்சுத் திணறல் ஏற்படும் ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு மிகக் குறைந்த அளவு ஸ்டீராய்டு உள்ள மருந்துகளே உபயோகப்படுத்தப்படும்.

இந்த நிலையில் ஸ்டீராய்டின் பாதிப்பு இருக்காது. அதிகம் மற்றும் மிக அதிகம் நிலையில் உள்ளவர்களுக்கு ஸ்டீராய்டுகள் அதிகரித்துக் கொண்டே செல்லும். அதிகளவு ஸ்டீராய்டுகள் உடலுக்கு மிகக் கெடுதி என்பதால் தொடர் சிகிச்சையில் ஆஸ்துமா கட்டுப்படுத்தப்பட்டு மிக அதிக அளவிலிருந்து படிப்படியாக குறைக்கப்பட்டு மிகக் குறைந்த அளவு ஸ்டீராய்டு உள்ள மருந்துகளே பரிந்துரைக்கப்படும்.

ஆஸ்துமாவை கட்டுப்படுத்த முக்கியமாக அவர்களுக்கு ஒப்புக் கொள்ளாத உணவு, இனிப்பு வகைகளைத் தவிர்ப்பது, குளிர் காலங்களில் அதிக குளிர்ச்சியானவற்றை உண்ணாமல் தவிர்ப்பது, முறையான டயட், வீட்டில் தூசி படியாமல் பார்த்துக் கொள்வது, வெளியே செல்லும்போது முகத்திற்கு மாஸ்க் அணிந்து செல்வது போன்றவற்றால் இதை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதற்கு நிரந்தர தீர்வு என்பது கிடையாது.

இன்ஹேலரை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால் ஏதேனும் பிரச்னைகள் ஏற்படுமா?

ஆரம்ப நிலையில் உள்ளவர்களுக்கு இன்ஹேலரை பயன்படுத்துவதால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. ஆனால், மிக அதிகளவு கடைசி நிலையில் உள்ளவர்களுக்கு மருந்தில் அதிகளவு ஸ்டீராய்டு பயன்படுத்தப்படுவதால் பக்கவிளைவுகள் இருக்கும். ஆனால், ஆஸ்துமாவின் தீவிரத்தின் காரணமாக இவற்றின் மூலமே சிகிச்சை அளிக்கப்பட்டு பின் ஸ்டீராய்டின் அளவு படிப்படியாக குறைக்கப்படும்.

- மித்ரா