அசத்தலான கலைநிகழ்ச்சிகள், லேசர் ஷோ, வாணவேடிக்கை என்று வங்கத் தலைநகர் டாக்காவில் உலகக்கோப்பை தொடக்க விழா அமர்க்களம். கேப்டன்களின் ரிக்ஷா பவனி செம ரகளை. சோனு நிகம், பிரையன் ஆடம்ஸ், சங்கர் மகாதேவன் இசைமழை அட்டகாசம். இனி கவனம் எல்லாம் ஆட்டத்தில் மட்டுமே!
இந்த முறை கோப்பை யாருக்கு? இந்தக் கேள்விக்கு, எல்லா கருத்துக்கணிப்புசாமிகளும் இந்தியாவை கைகாட்டி இருப்பது ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், உள்ளூர கொஞ்சம் உதறலும் இருக்கத்தான் செய்கிறது. ஓவர் கான்ஃபிடன்ஸ் கவிழ்த்துவிடக்கூடாதே என்ற கவலைதான்!

பயிற்சி ஆட்டங்களில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தை பதம் பார்த்ததுமே இந்திய அணியின் ரேட்டிங் டபுளாகிவிட்டது. பெங்களூரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பவுலர்கள் அசத்த, சேப்பாக்கத்தில் நியூசிலாந்துடன் நடந்த ஆட்டத்தில் பேட்ஸ்மேன்கள் அடித்து நொறுக்கினர். சச்சின், சேவக், பதான் கணிசமாக ரன் அடிக்காமலேயே ஸ்கோர் 350ஐ தாண்டியதில் எல்லா அணிகளுமே அரண்டுவிட்டன. பந்துவீச்சு, பேட்டிங் இரண்டுமே க்ளிக் ஆனதில் பரம திருப்தி!
ரொம்ப நாளைக்குப் பிறகு கேப்டன் டோனி அதிரடி ஆட்டத்தை ரீவைண்ட் செய்து நடுவரிசைக்கு வலு சேர்த்திருக்கிறார். ‘பிளேயிங் லெவனில் யாரைச் சேர்ப்பது, யாரைக் கழற்றி விடுவது’ என்பதுதான் டோனிக்கு ஒற்றைத் தலைவலி. இதில் ரெய்னாவை ஓவர்டேக் செய்திருக்கிறார் கோஹ்லி. தலா 2 வேகம், 2 சுழல் ஸ்பெஷலிஸ்ட்களுடன் யுவா, பதான், சேவக், சச்சினை வைத்து எஞ்சிய 10 ஓவர்களை சமாளித்து விடலாம் என்பதால் டோனி உற்சாகமாக இருக்கிறார். நம்ம அஷ்வின் ஆல்ரவுண்டராக அசத்துவதால் டோனிக்கு அவர் மீது அலாதி ப்ரியம். போட்டுத்தாக்கத் தொடங்கியிருக்கும் டோனி&கோவுக்கு இப்போதே திருஷ்டி சுற்றிப் போடுவது நல்லது!
லீக் சுற்றில் சறுக்கினாலும் சுதாரித்துக் கொள்ள ஏராளமான வாய்ப்பு இருப்பதால் பெரிய அணிகள் ரிலாக்ஸாக இருக்கின்றன. கற்றுக்குட்டிகளிடம் உதை வாங்காமல் சமாளித்துவிட்டாலே கால் இறுதி உறுதி.
வழக்கம்போல எக்கச்சக்கமான சாதனைகள் சச்சினைத் துரத்துகின்றன. இதைப் படித்துக் கொண்டிருக்கும்போதே, உலகக்கோப்பையில் அதிக சதம், 2000 ப்ளஸ் ரன் குவிப்பு என்று செய்தி ஃபிளாஷ் ஆகும் வாய்ப்பு அதிகம்! இந்திய அணியைப் பொறுத்தவரை பேஸ்மென்ட் செம ஸ்ட்ராங்! பில்டிங்கையும் அப்படியே எழுப்பிவிட்டால் கோப்பையில் பால் காய்ச்சி விடலாம்!
பா.சங்கர்