மேஷ லக்னத்துக்கு செவ்வாயும் குருவும் தரும் யோகங்கள்!



மேஷ லக்னத்தின் அதிபதியான செவ்வாயோடு ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு ராசியில் சேர்க்கை பெறும்போது என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்று பார்த்துக் கொண்டே வருகின்றோம். அதுபோன்று செவ்வாயோடு குருவின் சேர்க்கையையும் பார்ப்போம்.

மேஷ லக்னத்திற்கு அதிபதியான செவ்வாயும், இந்த லக்னத்தின் பாக்யாதிபதியான குருவும் சேரும்போது அற்புதமான பலன்களைத் தருகிறார்கள். இந்த சேர்க்கை உள்ளவர்கள், பாரம்பரிய கௌரவத்தைக் காப்பாற்றுவார்கள். ‘‘பையன் வெளிநாட்ல இருந்தான். இப்போ அப்பா பிசினஸையே எடுத்து நடத்தறான்.

இப்படியெல்லாம் பண்ணுவான்னு நினைச்சுக் கூடப் பார்க்கலை’’ என்று பெருமையாகக் கூறும் அளவிற்கு அந்த ஜாதகர் நன்கு உயர்வார். இந்த லக்னத்திற்கு குருதான் தந்தையைக் குறிக்கும் கிரகமாகும். இவர்களின் வாழ்க்கை தந்தையைப் பொறுத்தே மாறுவதும், ஏற்றமடைவதும் உண்டு.

மேஷத்திலேயே - அதாவது லக்னத்திலேயே செவ்வாயும் குருவும் ஒன்றாக அமைந்தால் தோற்றமே கம்பீரமாக இருக்கும். நல்ல உயரமும் அதற்கேற்ற அழகும் பொலியும்படியாக இருப்பார்கள். காண்போரைக் கவரும் வண்ணம் ஆகர்ஷணம் நிறைந்திருக்கும். இவர்கள் ஓரிடத்தில் நின்றிருந்தால் எல்லோரும் இவர்களையே கவனித்தபடி இருப்பார்கள். அதேசமயம் பல நற்குணங்களுக்கும் ஊற்றாக இருப்பார்கள்.

தந்தையார் பார்த்து வைக்கும் பெண்ணையோ அல்லது அவர் வழிச் சொந்தத்திலுள்ள பெண்ணையோதான் மணம் புரிவார்கள். பெரிய நிறுவனங்களின் முதலாளிகளின் வலதுகரமாக செயல்பட்டு நிர்வகிக்கும் நிலையில் இருப்பார்கள். அல்லது இவர்களிடமுள்ள நம்பிக்கையால் பெரும் பதவிகளைக் கொடுத்து அமர வைப்பார்கள். மாபெரும் நிலச்சுவான்தார்களாகவும் எஸ்டேட் முதலாளியாகவும் விளங்குவார்கள்.

தீவிர தாய்நாட்டுப் பற்றாளராக இருப்பார்கள். இவர்களைவிட நல்ல நிலையில் சகோதரர் இருப்பார். அல்லது தந்தை, சகோதரரோடு சேர்ந்து ஒரே தொழிலைச் சேர்ந்து முன்னேறுவர். தமிழ் மொழியின்மீது தீராக் காதலோடு இருப்பார்கள். எப்போதும் கவிதை, கட்டுரை, கதை என்று படித்துக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருப்பார்கள். இந்த இரு கிரகங்களும் சேர்ந்தாலே விருதுகள் தானாகத் தேடி ஓடிவரும். தான் வசிக்கும் பகுதியிலுள்ள கோயில் திருப்பணி மற்றும் விழாக்களில் முக்கிய பங்காற்றுவார்கள்.

அடுத்ததாக ரிஷப ராசியில் - அதாவது லக்னத்திற்கு இரண்டாவது இடத்தில் செவ்வாயும் குருவும் சேர்ந்தால், தந்தையிடமிருந்து வித்தியாசப்படுவார்கள். பல நேரங்களில் தந்தையாரோடு கருத்து மோதல்கள் இருக்கும். அவ்வப்போது வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்து விடுவார்கள். அதேசமயம் இவர்களின் மூளை பலம் அபாரமானது. எப்போதுமே பிரமிக்கத்தக்க விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருப்பார்கள்.

ஆச்சரியமூட்டும் தகவல்களையே சுற்றியுள்ளோரிடம் கூறி வியப்பூட்டுவார்கள். சுற்றியிருப்போர்கள், ‘‘எது கேட்டாலும் டக்கு டக்குன்னு சொல்றாரு’’ என்பார்கள். பைனான்ஸ், டிரான்ஸ்போர்ட் போன்ற துறைகளில் இறங்கி நன்கு சம்பாதிப்பார்கள். இந்த அமைப்பில் மிகச்சிறந்த வழக்கறி ஞர்கள் உண்டு. மத்திய அரசுக்கே ஆலோசனை கூறும் அளவிற்கு உயர்ந்த பதவிகளில் அமர்வார்கள்.

 இவர்களின் பள்ளி வாழ்க்கையில் ஆசிரியர்கள் எப்படியிருந்தாலும், இவர்கள் சிறப்பாகப் படித்து விடுவார்கள். கண்களில் ஒரு தீட்சண்யம் இருந்து கொண்டே இருக்கும். எல்லாவற்றிலும் ஒரு நுண்ணறிவோடு செயல்படுவார்கள். பள்ளி வாழ்க்கையில் ஆரம்பத்தில் கல்வியை அலட்சியப்படுத்தினாலும் பிறகு அதற்கு முக்கியத்துவம் கொடுத்துப் படிப்பார்கள். செவ்வாய் எட்டுக்குரியவராகவும் பன்னிரெண்டிற்கு உரியவராகவும் வருவதால், உள்நாட்டைவிட வெளிநாட்டில்தான் நன்கு வாய்ப்புக் கிடைத்து முன்னேறி வருவார்கள்.

மிதுன ராசியில் - அதாவது லக்னத்திற்கு மூன்றாவது இடத்தில் செவ்வாயும் குருவும் சேர்ந்திருப்பது அவ்வளவு நல்லதல்ல. ஏனெனில், இரண்டிற்குமே இது பகை வீடுதான். திறமையிருந்தும் வெளிப்படுத்தாத தன்மையும், எங்கு எதைச் சொல்ல வேண்டுமென்ற இங்கிதமும் தெரியாது இருப்பார்கள். சகோதர நிலையில் ஒரு ஒதுக்கம் இருக்கும். அடிக்கடி கலந்து பேசிக்கொள்ள மாட்டார்கள். இளைய சகோதரர் வெளிநாட்டிலும், இவர் உள்நாட்டிலும் இருக்கலாம். காம இச்சை மிகுந்தவர்களாக இருப்பார்கள். குரு இங்கு அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்ப்பதால் தந்தையார் சேர்த்து வைத்த சொத்துக்கள் இவருக்கு லாபத்தைத் தரும்படியாக இருக்கும். உள்நாக்கு வளருதல், தொண்டைப்புண், காதில் சீழ் வடிதல் போன்ற தொந்தரவால் அவஸ்தைப்படுவார்கள்.

கடக ராசியில் - அதாவது லக்னத்திற்கு நான்காவது இடத்தில் இந்த இரண்டு கிரகங்களும் சேர்ந்திருக்கும்போது உண்டாகும் பலன்கள் அனைத்தும் அற்புதமானவையாகும். பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் போல குரு கடகத்தில் அமர்வார். இந்த அமைப்பில் பிறந்தால் பேராசிரியர்களாக புகழ் பெறுவார்கள். எல்லாவற்றிலும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருப்பார்கள். கடகத்தில் இருக்கும் குருவால் பொதுவாகவே தந்தையின் கை ஓங்கியிருக்கும். அதேநேரம் தந்தை செய்கிற தவறுகளை சுட்டிக் காட்டும் ஞானமிருக்கும். வங்கியில் பண இருப்பு எப்போதுமே நன்றாக இருக்கும்.

பணவரத்து குறித்த கவலையே இருக்காது. ஒரு பகுதியையே ஆளும் யோகம் உண்டு. ஒன்பதிற்குரிய குரு நான்கில் இருப்பதால் தாய்தான் அனைத்துமாக இருப்பார். தாயாரிடமே ஆன்மிகமும் அறிவியலும் கற்றுக் கொள்வார்கள். பொதுவாகக் கூற வேண்டுமெனில் தாயாரையும் தந்தையையும் வைத்து முன்னேறுவார்கள். பங்குச் சந்தையில் கொடிகட்டிப் பறப்பார்கள்.

கடகத்தில் செவ்வாய் நீசமாவதால் அவ்வப்போது மனச்சோர்வு சூழ்ந்து கொள்ளும். இதனால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையை குரு சரி செய்வார். மிகத் தீவிரமும் ஆழமும் அடர்த்தியுமிக்க அரசியல் கட்டுரைகளை எழுதி மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். அதேபோல, குரு வலுவடைந்திருப்பதால் புராணங்களை நவீனமாக மாற்றி எழுதுவார்கள்.

சிம்மத்தில் - அதாவது லக்னத்திற்கு ஐந்தாவது இடத்தில் குருவும் செவ்வாயும் அமர்ந்திருந்தால் ஓட்டப்பந்தய வீரராக வளைய வரும் வாய்ப்பு உண்டு. மிகச்சிறந்த மனநல மருத்துவராகவும் விளங்குவார்கள். இவர்களின் வாரிசுகள் பார் போற்றும் பிள்ளைகளாக இருப்பார்கள். பாக்யாதிபதியான குரு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்தால் ஆச்சரியமான விதத்தில் உள்ளுணர்வு செயல் புரியும்.

இந்த அமைப்பை ராஜகுரு என்று சொல்லலாம். பிரபலமாவார்கள் அல்லது பிரபலமானவர்களிடம் உதவியாளராக இருப்பார்கள். கல்வி நிறுவனங்களை வைத்து நடத்தும் அமைப்பெல்லாம் உண்டு. இவர்களுக்கு இரண்டுமே ஆண் வாரிசுகளாக இருக்கும் வாய்ப்பு உண்டு. பூர்வீகச் சொத்தை விற்று நவீனமாக கட்டுவார்கள். ‘‘ஊர்ல அந்த மனுஷருக்கு எப்பவுமே நல்ல பேரு உண்டுங்க.

ஒரு குற்றமும் சொல்ல முடியாது’’ என்று நற்பெயர் எடுப்பார்கள். சேமிப்புப் பழக்கம் சிறிய வயதிலேயே இருக்கும். அரசியல்வாதியாக ஆவார்கள். அல்லது நிறைய அரசியல்வாதிகளைத் தெரிந்து வைத்திருப்பார்கள். மேஷ லக்னத்திற்கு ஆறாம் இடத்தில் செவ்வாயும் குருவும் சேர்க்கை பெற்றால் வீண்பழி, சண்டை சச்சரவு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளோடு அனுசரித்துப் போக முடியாத சூழல்தான் நிலவும்.

 ஏனெனில், கடைசிவரைக்கும் பிள்ளைகள் தங்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டுமென விரும்புவார்கள். எதிராளி எவ்வளவு தெரிந்து வைத்திருந்தாலும், ‘அவருக்கென்ன தெரியும்’ என்பது போலவே பேசுவார்கள். கையில் காசு தங்காது. செலவு செய்து கொண்டே இருப்பார்கள். குடும்ப ரகசியத்தைக் காக்க முடியாத நிலைமை இருக்கும். மஞ்சள் காமாலை வந்து நீங்கும். ஆணாக இருப்பின் உயிரணுக்களில் எண்ணிக்கை குறையும்.

சிலர் குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பார்கள். ஒன்பதிற்குரிய - அதாவது திரிகோணத்திற்குரிய குரு கேந்திரமாக ஏழாமிடத்தில் துலாம் ராசியில் அமர்கிறார். மேலும் குரு லக்னத்தை வேறு பார்க்கிறார். நல்ல வாழ்க்கைத்துணை அமையும். அழகும், புத்திசாதுர்யமும் மிக்கவராக இருப்பார். இவர்களில் சிலர் வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பார்கள். எந்தச் சூழலிலும் பிரச்னைகளைப் பிரித்தறியும் திறனோடு இருப்பார்கள்.

அடுத்ததாக விருச்சிகத்தில் குருவும் செவ்வாயும் சேர்ந்திருப்பது அவ்வளவு நல்ல அமைப்பல்ல. செவ்வாய் ஆட்சி பெற்றிருந்தாலும் பாக்கியாதிபதி எட்டில் மறைவதால் ஏதேனும் செலவு இருந்து கொண்டேயிருக்கும். சிலருக்கு தந்தையார் இருந்தும் இல்லாததுபோல் இருப்பார். இதனாலேயே பல மோசமான அனுபவங்கள் கிடைத்து சிறிய வயதிலேயே தெளிவோடும் அமைதியாகவும் இருப்பார்கள்.

எட்டில் குரு மறைவதால் இடம் வாங்குவார்கள். ஆனால், வீட்டைக் கட்டி முடிக்க தாமதமாகும். தனுசுக்கு அதிபதியாக குருவே தனுசுக்குள் அமர்கிறார். மேலும் செவ்வாய் நட்பாகவும் இருப்பதால் குறையே இல்லாத வாழ்க்கை மிகச்சிறிய வயதிலேயே அமைந்துவிடும். இன்னொன்று, இவர் வளர வளர தந்தை தன் ஒட்டுமொத்த வியாபாரத்தையும் இவரிடம் கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்வார். அல்லது தந்தையை இவர்தான் வழிநடத்துவார். நிரந்தரமாக தனமும் தானிய விருத்தியும் உண்டு. தர்ம காரியங்களில் ஈடுபாடும், நிறைந்த சமயோசித புத்தியும் கொண்டிருப்பார். எல்லாவற்றிற்கும் கௌரவம் பார்க்கும் குணம் இருக்கும். ஓரிடத்தில் கௌரவக் குறைவு ஏற்படுமானால், கடைசி வரை அந்த இடத்திற்குப் போக மாட்டார்.

அடுத்ததாக மகரத்தில் குரு நீசமாகிறது. ஆனால், செவ்வாய் உச்சமாகிறது. குருவுக்கு நீசபங்க ராஜயோகமாக இந்த இடம் மாறிவிடுகிறது. இதனால் எதிர்பாராத விதத்தில் சட்டென்று வாழ்க்கை முன்னேறத் தொடங்கும். அடிப்படை வசதிகளே இல்லாமலிருந்தால் கூட ஒரு பெருங்கூட்டத்திற்கு உணவு அளிக்கும் விதத்தில் முன்னேறுவார்கள். அதேசமயம் இந்த அமைப்பு கொஞ்சம் தகப்பனாரைப் பாதிக்கும். தந்தைக்கு கூடாப் பழக்க வழக்கங்கள் இருக்கும். அதனால் மகனுக்கும் தந்தைக்குமிடையே பிரச்னை அதிகமாகும்.

அடுத்ததாக கும்பத்தில் - அதாவது பாதக ஸ்தானத்தில் செவ்வாயும் குருவும் இருப்பது அவ்வளவு உசிதமல்ல. பாக்யாதிபதியோடு லக்னாதிபதி சேர்ந்து பாதக ஸ்தானத்தில் உட்காருகிறார். பாக்ய ஸ்தானத்திற்கு மூன்றாம் இடத்தில் குரு மறைகிறார். இங்கேயும் தந்தைக்கும் மகனுக்கும் இடையே பிரச்னைகள் மூளும். தந்தை சம்பாதித்து வைத்ததை மகன் அழித்து செலவு செய்வார். அப்பாவின் சில அரசியல் பிரவேசங்களால் மகனுடைய வியாபாரம் பாதிக்கப்படுதல் எல்லாம் நிகழும். ஏதாவது தொந்தரவு கொடுத்தபடியே இருக்கும் அமைப்பு இது. சாண் ஏறினால் முழம் சறுக்கிச் செல்லும் அமைப்பு இது.

அடுத்ததாக பன்னிரெண்டாம் இடமாக மீனம் வருகிறது. இது பிரயாணம், தூக்கம், மோட்ச ஸ்தானத்தைக் குறிக்கிறது. சொந்த வீட்டில் குரு ஆட்சி செலுத்துகிறார். ஏற்றுமதி, இறக்குமதி மிகச் சிறப்பாக இருக்கும். மாவட்டம் தாண்டி, மாநிலம் தாண்டி, நாடு தாண்டி வியாபாரத்தை விஸ்தரிப்பார்கள். மத்திம வயதில் அறக்கட்டளை தொடங்கி ஏழைகளுக்கு உதவுவார்கள். பிள்ளைகளின் நலனை கருத்தில் கொண்டு மிகச் சிறந்த கல்வியைக் கொடுப்பார்கள். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்வார்கள்.     

செவ்வாயும் குருவும் சேர்க்கை பெற்றுள்ள இந்த பலமான அமைப்பைப் பெற்றவர்கள் தரிசிக்க வேண்டிய தலம் சுவாமி மலை.  இத்தலம் செவ்வாய் குருவின் எதிர்மறை வீர்யத்தைக் குறைத்து சமநிலையில் வைக்கும். கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள சுவாமிமலை சுவாமிநாத சுவாமியை தரிசித்து வாருங்கள். வாழ்க்கை படிப்படியாக உயரும்.

(கிரகங்கள் சுழலும்...)

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ஓவியம்: மணியம் செல்வன்