தாய்லாந்து நாட்டின் முதல் உலக அழகி!



இந்த 2025ம் ஆண்டு உலக அழகிப் பட்டத்தை வென்று தன் தாய்நாடான தாய்லாந்துக்கு பெருமை சேர்த்திருக்கிறார் ஓபல் சுசாதா சுவாங்ஸ்ரீ.ஐதராபாத்தில் நடந்த 2025ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டியில்தான் மகுடம் சூடியிருக்கிறார் ஓபல் சுசாதா சுவாங்ஸ்ரீ. 
எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஹசேட் டெரேஜே இரண்டாம் இடத்தையும், போலந்தைச் சேர்ந்த மாஜா கிளாஜ்டா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்த 2025ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டியில் 108 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில், ‘மிஸ் இந்தியா’ பட்டம் வென்ற நந்தினி குப்தாவும் பங்கேற்றார். 
40 பேர் காலிறுதிக்கு முன்னேறினர்.இதில் முதல் 8 இடங்களுக்குள் நுழையும் வாய்ப்பை நந்தினி குப்தா தவறவிட்டார். அழகிப் போட்டியின் இறுதிப் போட்டி கடந்த மே 31ம் தேதி ஹைடைக்ஸ் அரங்கில் நடந்தது.

சிறப்பு விருந்தினர்களாக பாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட பல உலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். இறுதிச் சுற்றில், தாய்லாந்தின் ஓபல் சுசாதா சுவாங்ஸ்ரீ 2025ம் ஆண்டிற்கான உலக அழகியாக வெற்றி பெற்றார். இது தாய்லாந்து நாட்டின் முதல் வெற்றி.2024ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற செக் குடியரசு அழகி கிறிஸ்டினா பிஸ்கோவா, 2025ம் ஆண்டுக்கான உலக அழகி ஓபல் சுசாதாவிற்கு மகுடத்தை சூட்டினார். 

சமீபத்தில் தாய்லாந்தில் நடந்த அழகிப் போட்டியிலும் சுசாதா வெற்றி பெற்று மகுடம் சூடினார் என்பது குறிப்பிடத்தக்கது. புகேட் நகரில் 2003ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி பிறந்த ஓபல், தாய்லாந்தின் பிரபலமான தம்மாசட் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் மற்றும் சர்வதேச உறவுகள் துறையில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இவர் தாய்லாந்து, ஆங்கிலம் மற்றும் சீனம் ஆகிய மூன்று மொழிகள் தெரிந்தவர். ஓபலின் பெற்றோரான தானெட் டொன்கம்னேர்ட் மற்றும் சுபத்ரா சுவாங்ஸ்ரீ பிசினஸ் செய்து வருகின்றனர்.

உலகளாவிய அழகிப் போட்டிகள், ஃபேஷன் நிகழ்ச்சிகள் என ஆர்வம் காட்டும் ஓபல் 2022ம் ஆண்டு நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்றார்.2024ம் ஆண்டு, மிஸ் யுனிவர்ஸ் தாய்லாந்து பட்டத்தை வென்று, 2024ம் ஆண்டு நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பெற்றார்.

இதோ தற்போது தாய்லாந்து நாட்டின் முதல் உலக அழகி கிரீடம் வென்ற பெண்ணாக ஓபல் அந்நாட்டு மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.ஓபல், சமூக சேவையில் அதீத நாட்டம் கொண்டவர். ‘OpalForHer’ என்னும் தொண்டு நிறுவனம் மூலம் பெண்களின் மார்பகப் புற்றுநோய்க்கு விழிப்புணர்வு கொடுத்து வருகிறார். 

மேலும் இலவசமாகவே நோய் கண்டறியும் மருத்துவ முகாம்கள் நடத்தி வருகிறார். பெண்களுக்கான கல்வி, ஆரோக்கியம், சுகாதாரம் குறித்த கருத்தரங்கங்கள், முகாம்கள், நடத்தி பலருக்கும் உதவி வருகிறார் ஓபல்.

ஷாலினி நியூட்டன்