AI உளவியல் ஆலோசனைகளும் மனித உளவியல் ஆலோசகரும்!
சமீபத்தில் புகழ்பெற்ற பத்திரிகை ஒன்று, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ஏஐ சாட்பாட்டை எதற்கெல்லாம் மக்கள் பயன்படுத்துகின்றனர் என்ற ஆய்வை மேற்கொண்டது.
காதல் முறிவு, தனிமை, பொருளாதாரப் பிரச்னை, வேலையில் ஏற்படும் அழுத்தம் உட்பட பல்வேறு பிரச்னைகளால் உண்டாகும் மனச்சோர்வு அல்லது மன அழுத்தத்தின் போது ஓர் உளவியல் ஆலோசகரைப் போல சாட்பாட்டை ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்திவந்திருக்கின்றனர் என்று அதிர்ச்சியளிக்கிறது அந்த ஆய்வு.
 உதாரணத்துக்கு, தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வரும் இளைஞர், மனிஷ். இரவு நேரத்தில் தனது காதலியுடன் பிரேக்அப் செய்துவிட்டு, மிகுந்த மன அழுத்தத்துடன் அவர் தங்கியிருக்கும் அறைக்கு வந்திருக்கிறார். நள்ளிரவு ஒரு மணி என்பதால் நண்பர்களைக் கூட அழைக்க முடியவில்லை. இந்நிலையில் தனது பிரச்னை குறித்து ஏஐ உடன் உரையாடியிருக்கிறார்.
மனிஷ் சொல்வதையெல்லாம் எந்தவித ஜட்ஜ்மெண்ட்டும் இல்லாமல், திறந்த மனதுடன் கேட்டிருக்கிறது ஏஐ. அத்துடன் மனிஷின் பிரச்னைகளைப் புரிந்துகொண்டு, “நீங்கள் சொல்வதை எல்லாம் உங்களின் காதலி காது கொடுத்து கேட்கவில்லை. அது உங்களைக் காயப்படுத்தியிருக்கிறது.
இதைப் பற்றி உங்களின் காதலியிடம் பேசியிருக்கிறீர்களா?’’ என்று ஏஐ கேட்க, ஞானம் கிடைத்ததைப் போல உணர்ந்திருக்கிறார் மனிஷ். ஆம்; மனிஷின் பிரச்னையே அவருடைய நிலையைச் சொல்லும்போது, காதலி கேட்பதில்லை என்பதுதான். ஆனால், இதைப்பற்றி அவர் பேசவே இல்லையாம்.
அடுத்த நாளே காதலியிடம் தன்னுடைய பிரச்னை என்னவென்று நேரிடையாகவே சொல்ல, அவருடைய பிரேக் அப் முடிவுக்கு வந்து, காதல் தொடர்கிறது.இதுபோல பலரது உளவியல் பிரச்னைகளுக்கு ஏஐ உதவியிருப்பதாகச் சொல்கின்றனர். “எந்த நேரத்தில் வேண்டுமானாலும், எங்கிருந்து வேண்டுமானாலும் ஏஐ உடன் உரையாட முடியும்.
கட்டணம் செலுத்தத் தேவையில்லை. நாம் சொல்வதை முழுமையாக எந்தவித ஜட்ஜ்மெண்ட்டும் இல்லாமல் ஏஐ கேட்கிறது. நம்முடைய பிரச்னைகளைப் புரிந்து கொள்கிறது.ஏஐ உடன் முழுமையாக மனம் திறந்து நம்பிக்கையுடன் பேச முடியும்...” போன்ற காரணங்கள் ஏஐ-யிடம் ஆலோசனை கேட்க காரணம் என்கின்றனர்.
இந்நிலையில் உளவியல் பிரச்னைகளுக்காக ஏஐ-யிடம் ஆலோசனை கேட்பது நல்லதா? ஏஐ தொழில்நுட்பத்தால் மனிதர்களின் உளவியல் பிரச்னைகளைத் தீர்க்க முடியுமா? வருங்காலத்தில் உளவியல் ஆலோசகர்களின் இடத்தை ஏஐ பிடித்துவிடுமா... போன்ற கேள்விகளுடன் உளவியல் ஆலோசகரான ரஹ்மான் கானை அணுகினோம்.
‘‘ஒருபோதும் ஏஐ 100 சதவீதம் சரியான உளவியல் ஆலோசனையை வழங்க முடியாது என்று உறுதியாகச் சொல்கிறேன். காரணம், மேற்கத்திய கலாசாரத்தின் அடிப்படையில்தான் ஏஐ மாதிரியான தொழில்நுட்பத்தை உருவாக்குகிறார்கள். அதனால் ஏஐ தொழில்நுட்பம் உலகில் உள்ள அனைத்து மக்களின் உணர்வுகளையும் பொதுமைப்படுத்தித்தான் ஆலோசனையை வழங்கும். ஆனால், ஒவ்வொரு மனிதனின் உணர்வுகளும், உளவியல் பிரச்னைகளும் அவன் வாழ்கின்ற இடம், சுற்றியிருக்கிற மக்கள், கல்வி, கலாசாரத்தைப் பொருத்து மாறுபடும். தமிழ்நாட்டில் வசிப்பவரின் பொருளாதாரம் அல்லது உறவுச் சிக்கலால் ஏற்படும் உளவியல் பிரச்னையும், நியூயார்க்கில் வசிப்பவரின் உளவியல் பிரச்னையும் வேறு வேறு. ஆனால், இருவருக்குமே ஒரே மாதிரியான ஆலோசனையைத்தான் ஏஐ வழங்கும்.
என்னதான் தொழில்நுட்பங்கள் வளர்ந்திருந்தாலும், மனிதனின் மூளைக்கும், அவனது உணர்வுகளுக்கும் நிகராக முடியாது. உளவியல் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர் அனுபவம் வாய்ந்த உளவியல் ஆலோசகரைச் சந்தித்து, முகம் பார்த்து, நேருக்கு நேராகப் பேசி, ஆலோசனை பெறும்போது கிடைக்கும் தீர்வை ஏஐ தொழில்நுட்பத்தால் ஒருபோதும் கொடுக்க முடியாது...” என்கிற ரஹ்மான் கான், இது குறித்து மேலும் பகிர்ந்தார்.
“ஒருவருக்கு உளவியல் ரீதியான பிரச்னைகள் ஏற்படுவதற்கு நிறைய காரணிகள் இருக்கின்றன. அவர் சார்ந்த குடும்பம் மற்றும் சமூகச்சூழலால் பிரச்னைகள் உண்டாகலாம், பொருளாதார ரீதியாக மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம், பரம்பரை சார்ந்தும் உளவியல் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதையெல்லாம் நன்கு ஆராய்ந்தபிறகுதான் தீர்வைச் சொல்ல முடியும். நாம் வெறுமனே ஏஐ-யிடம் பிரச்னையைச் சொல்லும்போது, அது எந்த காரணியையுமே ஆய்வு செய்யாமல் பொத்தாம் பொதுவாக ஒரு தீர்வைத் தருவது தற்காலிகமானதாகத்தான் இருக்கும். அந்தத் தீர்வு பிரச்னையைச் சரி செய்யுமா என்றுகூட உறுதியாகச் சொல்லிவிட முடியாது. சில நேரங்களில் ஏஐ ஆலோசனை தவறான வழிகாட்டலாக மாறவும் வாய்ப்பிருக்கிறது.
எப்படி சில கேம்கள் குழந்தைகளைத் தவறாக வழி நடத்தி தற்கொலை வரைக்கும் கொண்டு போகிறதோ, அதுமாதிரி ஏஐ ஆலோசனையும் கொண்டு போகலாம். மட்டுமல்ல, மேலும் மன அழுத்தத்துக்குள் கொண்டு போகவும் வாய்ப்பிருக்கிறது.பொதுவாக கவுன்சிலிங்கில் ஒரே அமர்வில் பிரச்னையைச் சரிசெய்ய முடியாது. முதல் அமர்வு முடிந்து, சில நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பெற்றவரின் நிலை மேம்பட்டிருக்கிறதா என்பதை அறிய இரண்டாம் முறையாகவும் கவுன்சிலிங் தருவோம்.
முதல் அமர்வில் சிலவற்றைச் செய்யச் சொல்வோம். அதையெல்லாம் அவர் செய்திருக்கிறாரா என்று பரிசோதித்து, அவர் முற்றிலும் சரியாகும் வரை கவுன்சிலிங் வழங்குவோம். சிலருக்கு நான்கு, ஐந்து அமர்வுகள் கூட தேவைப்படும். உளவியல் பிரச்னைகளைப் படிப்படியாகத்தான் சரி செய்ய முடியும். அதற்கு நீண்ட நாட்கள் தேவைப்படும். ஆனால், ஏஐ ஆலோசனையில் அப்படியில்லை. உடனடியாக ஒரே அமர்வுதான்.
அதில் ஃபாலோ அப்கள் இல்லை. இப்படியான நடைமுறைச் சிக்கல்கள் எல்லாம் ஏஐ-யில் இருக்கு.அடுத்து, ஆலோசனை கேட்பதற்காக ஒருத்தர் என்னிடம் வருகிறார் என்றால், அவருடைய உணர்வுகளுக்கு உகந்த மாதிரி நான் நடந்துகொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, அவர் அழுகிறார் என்றால் நான் ஆறுதலாக அரவணைக்க வேண்டும்.
அவர் மகிழ்ச்சியாக இருக்கும்போது, நானும் மகிழ்வுடன் புன்னகைக்க வேண்டும். நான் ஒரே மாதிரியாக உட்கார்ந்திருந்தால் அவரால் மனம் திறந்து பேச முடியாது. ஆலோசனை பெற வருகிறவரின் உணர்வுக்கு உகந்த மாதிரி ஏஐ தொழில்நுட்பத்தால் ஆலோசனை வழங்க முடியாது. இத்தகைய காரணங்களால் உளவியல் ஆலோசகரின் இடத்தை ஒருபோதும் ஏஐ அபகரிக்க முடியாது. இந்த ஏஐ டெக்னாலஜியால் உண்மையிலேயே உளவியல் ஆலோசகர்களுக்கு வேலைதான் அதிகமாகும். காரணம், ஏஐ-யிடம் ஆலோசனை பெறப் போய், மேலும் பிரச்னை பெரிதானால் எங்களிடம்தான் அவர்கள் வரவேண்டும்...’’ என்று அழுத்தமாக முடித்தார் ரஹ்மான் கான்.
த.சக்திவேல்
|