பட்டர் பிஸ்கட் இங்கிருந்துதான் சென்னை டீ கடைக்கு வருகின்றன!



‘‘ஒரு டீ... ரெண்டு பிஸ்கட்...’’ இந்த வார்த்தையை உச்சரிக்காதவர்கள் யாருமில்லை. அந்தளவிற்கு டீயும் பிஸ்கட்டும் நம் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்து விட்டன.

நம்மில் பலரும் தேநீர் பிரியர்கள்தான். 
இன்னும் சிலர், தேநீரோடு சேர்த்து சுவைக்கக் கூடிய பிஸ்கட் பிரியர்கள். ஆனால், தேநீரைப்போல, வீட்டில் பிஸ்கட்டை தயாரிக்க முடியாது.
அப்படியானால் எல்லா தேநீர் கடைகளிலும் கண்ணாடி ஜாடிகளுக்குள் வைத்து விற்பனை செய்யப்படுகிற பிஸ்கட்டுகள் எங்கு தயாரிக்கப்படுகின்றன?

சென்னை மற்றும் பிற ஊர்களில் கிடைக்கும் பட்டர் பிஸ்கட்டின் பிறப்பிடம் எது?

வட சென்னையின் ஒரு பகுதியான வண்ணாரப்பேட்டைக்குள் இருக்கும் ‘லாலாகுண்டா’ என்ற இடம் பற்றித் தெரியுமா? சென்னையின் பூர்வகுடிகள் முதல் பிழைப்பு தேடிவந்த அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து வசிக்கும் பகுதி அது. ஒரு காலத்தில் ஆண்களும் பெண்களும் பீடி சுற்றும் தொழிலை இங்கு மேற்கொண்டனர். 
மட்டுமல்ல; ஸ்டீல் பட்டறை தொழிலுக்கு பேர் போன இடமும் இதுதான். பாத்திரம் செய்வது முதல் எவர்சில்வர் பாத்திரங்களுக்கு பாலிஷ் போடுவது வரை அனைத்து வகையான உழைப்பும் நடக்கும் இடம் இது. அப்படி இருந்த லாலாகுண்டாதான், தற்போது பட்டர் பிஸ்கட் தயாரிக்கப்படும் இடமாக மாறி இருக்கிறது. சென்னை மற்றும் இன்னும் பிற பகுதிகளுக்கு இந்தப் பகுதியில் இருந்துதான் பட்டர் பிஸ்கட்டுகள் தயார் செய்து அனுப்பப்படுகின்றன.

சுமார் 50 வருடங்களுக்கு முன்பு பட்டர் பிஸ்கட் தயாரிக்கப்படும் பேக்கரிகள் ஒன்றிரண்டு மட்டுமே லாலாகுண்டாவில் செயல்பட்டு வந்தன. தொடர்ந்து, அடுத்தடுத்த வருடங்களில் 100க்கும் அதிகமான பிஸ்கட் தயாரிக்கும் பேக்கரிகள் தொடங்கப்பட்டு, பல இடங்களுக்கு அங்கிருந்து பிஸ்கட் அனுப்பப்பட்டன.இப்படி நிறைய பேக்கரிகள் பெருக்கெடுத்ததற்கு காரணம் அங்கு தயாரிக்கப்படும் பிஸ்கட்டின் சுவையும் வாசமும்தான். 

லாலாகுண்டாக்குள் நுழைவதற்கு ஒரு கிலோமீட்டருக்கு முன்பாகவே பிஸ்கட்டின் மணம் நாசியை நிரப்பத் தொடங்கிவிடும். வாசத்தைப் பின் தொடர்ந்து சென்றால் ஏதாவது ஒரு பிஸ்கட் பேக்கரிக்குச் செல்லலாம். அந்தளவிற்கு சிறப்பு வாய்ந்த பிஸ்கட்கள் தயாரிக்கப்பட்டன.

இவையெல்லாம் முன்பு. ஆனால், தற்போது சுமார் 50க்கும் குறைவான பேக்கரிகள் மட்டுமே அந்தப் பகுதியில் செயல்படுகின்றன. ஒவ்வொரு பேக்கரியிலுமே 5 முதல் 8 நபர்கள் வரை வேலை பார்க்கின்றனர். இந்தத் தொழிலை நம்பி மட்டுமே இன்றுவரை 200க்கும் அதிகமான குடும்பங்கள் இருக்கின்றன. 

ராகி பிஸ்கட், நெய் பிஸ்கட், தேங்காய் பிஸ்கட், பட்டர் பிஸ்கட் போன்ற நான்கு வகையான பிஸ்கட்டுகள் தற்போது அங்கு தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயார் செய்யப்படுகிற பிஸ்கட்டுகள்தான் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள தேநீர் கடைகளில் நாம் சாப்பிடும் பிஸ்கட்டுகள். இந்த பிஸ்கட்டுகள் ஒரு ரூபாயில் இருந்து ரூபாய் 2, 3, 5 போன்ற விலைகளில் வெவ்வேறு அளவில் விற்கப்படுகின்றன.

லாலாகுண்டாவைப் போலவே சென்னையில் ராயப்பேட்டை, குளத்தூர், தி.நகர், பெரியார் நகர், கிண்டி போன்ற இடங்களில் பிஸ்கட் தயாரிக்கும் பேக்கரிகள் இருக்கின்றன.
ஆனால், அங்கெல்லாம், ஒன்று அல்லது இரண்டு பேக்கரிகள் மட்டுமே இருக்கும். இந்த லாலாகுண்டாவில்தான் ஒரு தெருவுக்கு 5 பேக்கரிகளாவது இருக்கின்றன.

ஆரம்பத்தில், பிஸ்கட் விற்பனை செய்யும் விற்பனையாளர்களே இந்த பேக்கரியை நடத்தி வந்தனர். அவர்களே பிஸ்கட் தயார் செய்து, அவர்களே பிஸ்கட்டையும் ஒவ்வொரு பகுதிக்கும் விற்பனை செய்து வந்தனர்.

ஆனால், தற்போது நிலைமையே வேறு. பிஸ்கட் விற்பனை செய்யும் வியாபாரிகள், அவர்களுக்கு எவ்வளவு பிஸ்கட் தேவைப்படுகிறதோ அதற்கு தேவையான பொருட்களை மட்டும் பிஸ்கட் தயாரிப்பவர்களுக்கு வாங்கிக் கொடுக்கின்றனர். பொட்களை வாங்கிக்கொண்ட பேக்கரி உரிமையாளர்கள் விற்பனையாளர்கள் சொல்லும் அளவிலான பிஸ்கட்டுகளை செய்து கொடுக்கிறார்கள்.

அதாவது, ஒன்றரைக் கிலோ பிஸ்கட் தயாரித்துக் கொடுத்தால் ரூ.50 சம்பளமாகக் கொடுப்பார்கள். அந்த வகையில், இன்றளவும் ஒவ்வொரு பேக்கரியிலும் தினசரி 150 கிலோ பிஸ்கட்டுகளுக்கு குறைவில்லாமல் தயார் செய்யப்படுகின்றன.

‘எனது 19வது வயதில் இருந்தே இந்தத் தொழில்தான் செய்து வருகிறேன். ஆரம்பத்தில் ஒருவரிடம் பிஸ்கட் தயாரிப்பவராக வேலை பார்த்தேன். இப்போது, சொந்தமாக ஒரு பேக்கரி வைத்திருக்கிறேன். 

தொடர்ந்து 30 ஆண்டுகளாக இதே தொழில்தான் என்பதால் பிஸ்கட் தயாரிப்பு மற்றும் விற்பனை சார்ந்த அனைத்து நுணுக்கங்களும் எனக்குத் தெரியும்.நான் முதன்முதலில் வேலை பார்க்கும்போது ஒன்றரைக் கிலோ பிஸ்கட் தயாரித்துக் கொடுத்தால், ரூ.13.50 கொடுப்பார்கள். அதை, நாங்கள் வேலை பார்க்கிற அனைவரும் பிரித்துக் கொள்வோம்.

இப்போது அது ரூ.50 ஆக உயர்ந்திருக்கிறது. பட்டர் பிஸ்கட் தயாரிப்பிற்கு பேர்போன இடம் என்றால் அது இந்த லாலாகுண்டாதான். ஏனெனில், இங்கு தொழில் செய்பவர்கள் அனைவருமே இந்தத் தொழிலில் நிறைய அனுபவம் உள்ளவர்கள்.

அந்தக் காலத்தில் பிஸ்கட்டுகளை விறகு அடுப்பின் மூலம் சுடுவோம். தற்போது, ஓவன் மூலம் பிஸ்கட் தயாரிக்கிறோம். விலைவாசி உயர்வால் வருமானம் குறைந்தளவுதான் கிடைக்கிறது என்றாலும் எங்களால் இந்தத் தொழிலை விட்டு வெளியே வர முடியவில்லை...’’ என்கிறார் லாலாகுண்டா பகுதியில் பட்டர் பிஸ்கட் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் முகம்மது ஹனீப்.

அவரைத் தொடர்ந்து தன் கருத்தை முன்வைக்கிறார் தொழிலாளியான ராஜேஷ். ‘‘நான் சிறுவனாக இருக்கும்போது இந்தத் தெரு முழுக்கவே பிஸ்கட் வாசமாக இருக்கும். அந்தளவிற்கு, பிஸ்கட் உற்பத்தி அமோகமாக இருந்த காலம் அது. ஆனால், தற்போது 50க்கும் குறைவாகத்தான் பேக்கரிகள் செயல்படுகின்றன.

என்றாலும் மொத்த சென்னைக்குமே இங்கிருந்துதான் பட்டர் பிஸ்கட்டுகள் செல்கின்றன். நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு பேக்கரியில் 200ல் இருந்து 300 கிலோ வரை பிஸ்கட்டுகள் தயார் செய்யப்படுகின்றன. அரக்கோணம், திருவள்ளூர், நெல்லூர், திருப்பதி என சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் இங்கிருந்துதான் பிஸ்கட் டுகள்அனுப்பப்படுகின்றன...’’ என்கிறார் ராஜேஷ். ஒரு, டீ... ரெண்டு பிஸ்கட்டுக்கு பின்னால் இவ்வளவு கதைகள் இருக்கின்றன. வாங்க, டீ குடித்தபடி, பிஸ்கட் சாப்பிடலாம்!

செய்தி: ச.விவேக்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்