எவரெஸ்ட் சிகரம் தொட்ட பார்வைக் குறைபாடுள்ள முதல் இந்தியப் பெண்..!
எவரெஸ்ட் சிகரத்தைத் தொட்ட முதல் பார்வைக் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி இந்தியப் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார் சோன்சின் அங்மோ. எந்தக் குறைபாடும் இல்லாமல் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்களாலேயே எவரெஸ்ட்டில் ஏறுவது அவ்வளவு சுலபமல்ல.  இந்தச் சூழ்நிலையில் அங்மோ ஏறியிருப்பது எல்லோரையும் பாராட்ட வைத்துள்ளது. மாற்றுத்திறனாளிகளாலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 
இமாச்சலப் பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் உள்ள சாங்கோ என்ற தொலைதூர கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் அங்மோ. இந்திய -திபெத்திய எல்லையில் உள்ள கிராமம் இது.
எட்டு வயது இருக்கும்போது அங்மோ தன்னுடைய பார்வையை இழந்தார். இருந்தும் படிப்பில் ஆர்வமாக இருந்தார். ஒருபோதும் தன் குறைபாட்டை பிரச்னையாக அவர் நினைக்கவில்லை. இதனால் டில்லி பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் மிராண்டா ஹவுஸ் கல்லூரியில் பட்டப்படிப்பும், மாஸ்டர் டிகிரியும் முடித்தார்.
தற்போது தில்லியிலுள்ள இந்திய யூனியன் வங்கியில் வாடிக்கையாளர் சேவைப் பிரிவில் பணிசெய்கிறார். சிறுவயதில் இருந்தே மிகுந்த தன்னம்பிக்கையுடனும், தைரியத்துடனும் வளர்ந்தவர் அங்மோ. மலையேற்றம் அவரின் சிறுவயது கனவு என்கிறார். ஆனால், நிதி நெருக்கடி ஒரு பெரிய சவாலாக இருந்துள்ளது. தற்போது, தான் வேலைக்குச்செல்வதால் உலகின் அனைத்து சிகரங்களையும் ஏறத் தொடங்கிவிட்டேன் என நம்பிக்கையாகக் குறிப்பிடுகிறார்.
கடந்த 2024ம் ஆண்டு 5 ஆயிரத்து 364 மீட்டர் உயரமுடைய எவரெஸ்ட் சிகரத்தின் அடித்தள முகாம் பகுதிக்குச் சென்று வெற்றிகரமாக டிரக்கிங்கை முடித்தார். அப்போது இந்த அடித்தள முகாமிற்குச் சென்ற பார்வையற்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெயரைப் பெற்றார். இதுமட்டுமல்ல.
அவர் ஏற்கனவே லடாக்கில் 6 ஆயிரத்து 250 மீட்டர் உயரமுள்ள மவுண்ட் காங் யாட்சே 2 சிகரத்தை ஏறியுள்ளார். மேலும் அதே பகுதியிலுள்ள சுமார் 6 ஆயிரம் மீட்டர் உயரத்தில் பெயரிடப்படாத சிகரத்தை ஏறிய திவ்யாங் பயணக் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். இந்நிலையில் மான் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அங்மோவை பாராட்டிப் பேசினார். அப்போது அங்மோவும் தன்னுடைய குழுவினரை பெருமையாகக் குறிப்பிட்டார். அவருக்கு மலையேற்றம் மட்டுமில்லாமல் விளையாட்டிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. மாநில அளவிலான நீச்சல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். தேசிய அளவிலான ஜூேடா சாம்பியன்ஷிப்பிலும் பங்கேற்றுள்ளார்.
இதனுடன் தேசிய அளவிலான மராத்தான் போட்டியில் பங்கேற்று இரண்டு வெண்கலப் பதக்கங்கள் ஜெயித்துள்ளார். மண்டல மற்றும் தேசிய அளவில் கால்பந்திலும் கலந்துகொண்டுள்ளார். விளையாட்டின் மீதிருந்த காதலே மலையேற்றத்தின் மீதும் இருந்தது. இதனால் 2016ம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் மலையேறுதல் நிறுவனத்தில் மலையேற்றம் பற்றிய அடிப்படை கோர்ஸ் ஒன்றை முடித்தார் அங்ேமா. அங்கேயே விளையாட்டு சம்பந்தமான கல்வியையும் கற்றார். சிறந்த பயிற்சியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2021ம் ஆண்டு ஆபரேஷன் ப்ளூ ஃப்ரீடம் திட்டத்தின் கீழ் உலகின் உயரமான போர்க்களப் பகுதியான சியாச்சின் பனிப்பாறையில் ஏறி புதிய உலக சாதனை படைத்த மாற்றுத்திறனாளிகளின் குழுவில் இருந்த ஒரே பெண் இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து மாற்றுத்திறனாளிகளின் அதிகாரமளிப்பிற்கான சர்வ்ஸ்ரேஷ்ட திவ்யங்ஜன் (Sarvshreshth Divyangjan) தேசிய விருதினைப் பெற்றார். சாதிப்பதற்கு பார்வைக் குறைபாடு ஒரு பிரச்னையல்ல என நிரூபித்திருக்கும் அங்மோ, ‘பார்வைக் குறைபாடு, என் பலவீனமல்ல; அது என் பலம்’ என்கிறார் நம்பிக்கையான குரலில்.
ஹரிகுகன்
|