உயில் எழுதாதீங்க... பத்திரம் பதிவு செய்யுங்க!
‘‘‘சனாதனம் வேணுமா? இல்ல திராவிடம் வேணுமா? இல்ல ரெண்டும் வேணாமா? இதெல்லாம் முடிவு பண்ண வேண்டியது அவங்களோ நானோ, நீயோ இல்ல. ஓட்டுப் போட்டான் பாருங்க... அவன்...’ இந்த ஒரு வசனத்துக்காக மட்டும் ரெண்டு கட் சென்சார்ல நடந்துச்சு.  அப்புறம் இதற்கான விளக்கத்தை சரியா கொடுத்து மும்பை சென்சார் குழு ஆய்வுக்குப் பிறகு இந்த வசனம் இப்ப டீசரில் இடம் பிடிச்சிருக்கு...’’இணையத்தில் சர்ச்சையாகிய வசனம் குறித்த விளக்கத்துடன் பேசத் துவங்கினார் இயக்குநர் எஸ்.சிவராமன். 25 வருடங்களுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர். இப்பொழுது ‘வில்’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். ‘‘Will பத்திரம்னு உயில் எழுதும்போது சொல்வோம் இல்லையா... அதுதான் டைட்டில். ஒரு வில் பத்திரம்... அதுல மகன் / மகள், குடும்பப் பெயர்களுக்கு இடைல சம்பந்தமே இல்லாம ஒரு பொண்ணு பெயரும் இடம்பிடிச்சிருக்கு. யார் அந்தப் பொண்ணு, சொத்துக்கும் அந்தப் பொண்ணுக்கும் என்ன சம்பந்தம்... இதெல்லாம் சேர்ந்த தேடல், கோர்ட் விசாரணைகள்தான் கதை, படம்...’’ புன்னகைக்கிறார் எஸ்.சிவராமன்.
 இப்படியான வழக்குகளை சந்தித்ததுண்டா?
நிலத்துக்கான சண்டை ஒரு யுனிவர்சல் பிரச்னை. ஏன், நாளைக்கு வேற கிரகத்திலே இருந்து வந்து நம்ம கூட ஒரு சண்டை நடந்தா லும் அது நிலச் சண்டையாதான் இருக்கும். இந்த மாதிரி நிறைய வழக்குகள் சந்திச்சிருக்கேன். தவறுதலா உயிலில் ஒரு பெயர் எழுதி அதிலே நடந்த வழக்குகள் கூட இருக்கு. இந்தப் படமே சொத்து, அதைச் சார்ந்த புரிதல்கள், விளக்கங்கள் எல்லாம் சேர்ந்ததா இருக்கும்.
ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு கை மாறும் சொத்துகள்லதான் நிறைய பிரச்னைகள் வரும். அதனாலதான் உயில் எழுதும் போது ரொம்ப கவனமா இருக்கணும்னு சொல்றோம்.
நீதிபதியாக சோனியா அகர்வால்..?
ஆமா. நீதிபதியாக சோனியா அகர்வால், வழக்கறிஞரா விக்ராந்த் நடிச்சிருக்காங்க. சோனியா அகர்வால் நடிப்பில் ஒரு நிதானம் இருக்கும். அவங்க முகத்தில் எப்போதுமே ஒரு பொறுப்புணர்வு இருக்கும். நீதிபதி கேரக்டருக்கு அந்த நிதானம் ரொம்பப் பொருத்தமா இருந்துச்சு.
அலேக்யா, பதம் வேணு குமார், மோகன்ராமன், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன் இப்படி நிறைய பேர் நடிச்சிருக்காங்க.டி.எஸ்.பிரசன்னா சினிமாட்டோகிராபி. இவர் ‘ஜெயிலர்’ உட்பட பல படங்களில் கேமரா அசிஸ்டெண்டா இருந்திருக்கார். விஷுவலா ஒரு ரிச் இருக்கும். எகிஸிக்யூட்டிவ் புரொடியூசரான தினேஷ் ஜி, இந்தப் படத்துக்கு எடிட்டராகவும் வேலை செய்திருக்கிறார். சோனியா அகர்வால் பிரதர் சௌரப் அகர்வால் இந்தப் படம் மூலமா இசையமைப்பாளரா அறிமுகமாகறார்.
படத்தின் மெசேஜ்..?
நிலச்சண்டைதான் இன்னைக்கு நடக்குற அத்தனை பிரச்னைகளுக்கும் காரணம். கையகல நிலம் இருந்தாலும் அதை அரசாங்க விதிப்படி மிகச்சரியா பத்திரம் பதிவு செய்து தகுந்த டாக்குமெண்ட் வாங்கி வைங்க. உயில் எழுதி வைப்பது, ஒப்புக்கு பத்திரம் எழுதுவதையெல்லாம் தவிர்த்திட்டு ஆரோக்கியமா இருக்கும்போதே எந்த சொத்து யாருக்கு... எந்த வாரிசுக்கு என்ன பயன்கள்... யார் எவ்வளவு அனுபவிக்கலாம்... இப்படி புள்ளிவிவரங்களுடன் அதிகாரபூர்வமா பத்திரம் பதிஞ்சு வைங்க. இந்தக் கருத்தைத்தான் படம் சொல்லுது.
ஷாலினி நியூட்டன்
|