அமெரிக்கா Vs சீனா... வர்த்தகப் போர் யாருக்கு லாபம்?



ஒருகாலத்தில் ‘உலக போலீஸ்’ என ஒரு நாடுதான் இருந்தது. அது அமெரிக்கா. ஆனால், இன்று இரண்டு போலீஸ்கள். ஒன்று அமெரிக்கா. மற்றது சீனா.
இரண்டு உலகப் போர்கள் முடிவடைந்த சூழ்நிலையில் உலகமே இரண்டாகப் பிரிந்து கிடந்தது. ஒன்று அமெரிக்க தலைமையிலான முதலாளித்துவ நாடுகள். மற்றது ரஷ்ய தலைமையிலான கம்யூனிஸ்ட் சார்பான நாடுகள். இந்தக் காலத்தைத்தான் பனிப்போர் காலம் என்று வரலாறு சொல்கிறது.

ஆனால், 1980களின் இறுதியில் ரஷ்யா உடைந்தது, பல கம்யூனிச நாடுகளின் வீழ்ச்சி, ஜெர்மனி இணைப்பு எல்லாம் சேர்ந்து உலகத்தை அமெரிக்கா தலைமையிலான ஒற்றை உலகமாக மாற்றியிருந்தது. 
ஆனால், 1990 முதல் ஒரு தேசம் மட்டும் அமெரிக்காவுக்கு டஃப் கொடுத்துக்கொண்டே இருந்தது. அதுதான் சீனா.இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மாவோ தலைமையிலான கம்யூனிசப் புரட்சி சீனாவை முன்னேற்றப் பாதையில் செலுத்தினாலும் அந்நாட்டின் மக்கள் தொகை பெரும் இடையூறாகவே இருந்து வந்தது.

மட்டுமல்ல... கொள்கையில் சோஷலிசம் பேசினாலும் அமெரிக்கா போலவே சீனாவும் முதலாளித்துவ சிந்தனைகளைத்தான் பின்பற்றியது. இதுவே அதன் பொருளாதார முன்னேற்றத்துக்கும் வழிவகுத்தது.இன்று உலகளவில் பொருளாதார அடிப்படையில் முன்னேறியிருக்கும் முதல் நாடு சீனாதான். 

இரண்டாவதுதான் அமெரிக்கா. இச்சூழலில்தான் ‘வர்த்தகப் போர்’ என உலகளவில் குறிப்பிடப்படும் வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப், சில மாதங்களுக்கு முன் அறிவித்தார்.சர்வதேச ரீதியில் இந்த நடவடிக்கை விவாதப் பொருளானது. அனைத்து நாடுகளும் இதுகுறித்து விவாதித்து வருகின்றன. இந்நிலையில்தான் அதிமுக்கியமான வினா ஒன்று எழுந்திருக்கிறது.

சீனா மீதான வரலாறு காணாத அமெரிக்காவின் வரி விதிப்பு எங்கு கொண்டு செல்லும்? சீன பொருளாதாரத்தை இந்த நடவடிக்கை பின்னுக்குத் தள்ளுமா?

உலகப் பொருளாதார வல்லுனர்கள் குழு இதற்கான விடைகளை அலசிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் இக்கட்டுரை எழுதப்படும் இந்த நொடி வரை கிடைத்திருக்கும் விடை அமெரிக்காவின் வயிற்றில் அமிலத்தைக் கரைத்திருக்கிறது.ஆம். இந்த வரிவிதிப்பு சீனாவை அசைக்காது என்கிறார்கள்.  

ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பது உற்பத்திதான். அதாவது மேனுஃபேக்சரிங் (Manufacturing). சீனா பல காலமாகவே உற்பத்தியில் ஒரு சூப்பர் பவராக இருந்து வருகிறது. ‘உலகத்தின் ஃபேக்டரி’ என்று சொல்லும் அளவுக்கு மேனுஃபேக்சரிங் துறையில் சீனா நம்பர் ஒன் தேசமாகத் திகழ்கிறது. 

உண்மையில் உற்பத்தியில் சீனாவின் உலகப் பங்கு 32 சதவீதம். அமெரிக்காவோ வெறும் 17 சதவீதம்தான். இன்னும் 5 வருடங்களில் உலக உற்பத்தியில் சீனாவின் பங்கு 45 சதவீதத்துக்கு உயரும்... அதே கால அளவில் அமெரிக்காவின் பங்கு 11 சதவீதமாக சரியும் என்கிறார்கள்.

இவை எல்லாம் டிரம்ப் 2வது முறையாக அமெரிக்காவின் அதிபராக பதவியேற்பதற்கு முன்பிருந்தே கணிக்கப்பட்டு வரும் விஷயங்கள். இவை எல்லாம் தெரிந்தும் டிரம்ப் ஏன் 100, 200 என சீனப் பொருட்களின் மேல் வரி விதிப்பதாக அறிவிக்கிறார்?

அச்சம்தான் காரணம் என்கிறார்கள். அமெரிக்காவின் சரிவும் சீனாவின் எழுச்சியும் உலகளவில் கண்கூடாகத் தெரிந்து வருகிறது. இது, ‘உலகின் நம்பர் ஒன்’ நாடு என இதுநாள் வரை பெயர் வாங்கியிருந்த அமெரிக்காவின் பிம்பத்தை உடைத்து வருகிறது. இதை சரிசெய்யவே இப்பொழுது வரி விதிப்பு அறிவிப்பை டிரம்ப் மேற்கொள்கிறார் என்கிறார்கள்.

ஆனால், இந்த வரி விதிப்பு நடவடிக்கைகள் அமெரிக்காவைத்தான் மிகவும் பாதிக்கும் என்கிறார்கள் பொருளாதாரப் புலிகள். ஏனெனில் அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் மதிப்பு 143 பில்லியன் டாலர். ஆனால், சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களின் மதிப்பு 438 பில்லியன் டாலர்.

இதனால் அமெரிக்காவுக்கு துண்டுவிழும் மதிப்பு 295 பில்லியன் டாலர். இதனால்தான் டிரம்ப் 2017ம் ஆண்டு முதல் முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றதும் சீனாவின் மேல் 20 சதவீத வரி விதித்தார். சோயாபீன்ஸும் பெட்ரோலியப் பொருட்களும்தான் அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

ஆனால், ஸ்மார்ட்ஃபோன்களில் தொடங்கி, சோலார் பேனல்கள், சிப்கள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மேக்னட்டுகள்... எனப் பல பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது சீனா.சோயா பீன்ஸை மற்ற நாடுகளில் இருந்து சீனாவால் வாங்க முடியும். பெட்ரோலியப் பொருட்களும் அப்படித்தான்.

ஆனால், சீனாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் இல்லாமல் ஒரேயொரு அமெரிக்க குடிமகன் கூட வாழ முடியாது.இப்படியெல்லாம் நடக்கும் என முன்பே கணித்தோ என்னவோ... அமெரிக்காவில் இருந்து பொருட்கள் வாங்குவதை சீனா கடந்த சில வருடங்களாகவே குறைத்து வருகிறது. மாற்று ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.

மட்டுமல்ல... ஆப்பிரிக்கா, தென் அமெரிக்க நாடுகள், தெற்காசிய நாடுகள்... என பல நாடுகளுக்கு தன் பொருட்களை சீனா ஏற்றுமதி செய்யத் தொடங்கிவிட்டது. இதற்காக சீனா மேற்கொண்ட ‘பெல்ட் அண்ட் ரோட்’ பிராசஸ் பெருமளவு அந்நாட்டு பொருளாதாரத்தை உயர்த்தத் தொடங்கியுள்ளது.

உலகில் இருக்கும் 190 சொச்சம் நாடுகளில் சுமார் 150  நாடுகளை வெட்டியும், ஒட்டியும் போகும் ஒரு பாதைதான் இந்த ‘பெல்ட் அண்ட் ரோட்’  திட்டம். அதாவது இந்த 150 நாடுகளில் இருக்கும் சாலைகள் மற்றும்  துறைமுகங்களை இணைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.

பெல்ட் என்றால் சாலை  விரிவாக்கத் திட்டம். ரோட் என்றால் துறைமுகங்களை இணைக்கும் திட்டம்.  இதன்மூலம் இந்த 150 நாடுகளும் சல்லிசாக வர்த்தகம் பார்க்கலாம்.

இந்தத் திட்டத்தால் ‘பெல்ட் அண்ட் ரோட்’ ப்ராசஸில் இருக்கும் அனைத்து நாடுகளும் பயன்பெறும்... இந்த நாடுகளின் உற்பத்தி மதிப்பு குறைந்தது 5 சதவிகிதம் உயரும் என வாக்குறுதி அளித்தே இந்நாடுகளை தன் திட்டத்தில் சீனா இணைத்திருக்கிறது.பொதுவாக சுமார் 150  நாடுகளின் சாலைகளையும், துறைமுகத்தையும் இணைக்கும்போது அது சூழலுக்கும்  மனிதர்களுக்கும் பல இடைஞ்சல்களைத் தரும். 

ஆனால், அப்படி எதுவும் நடக்காது என சீனா உறுதிமொழி வழங்கியிருக்கிறது. இந்த உறுதி காப்பாற்றப்படுமா என்பது இனி வரும் காலங்களில் தெரிய வரும்.இந்தத் திட்டத்தில் சீனாவுடன் கைகோர்க்கும் நாடுகளுக்கு கடன் வசதிகளையும் சீனாவே செய்து தருகிறது.

இதற்கிடையில் பல உலக சபைகளிலிலிருந்து அமெரிக்கா விலகியுள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி சீனா, கடன் வலையை மூன்றாம் உலக நாடுகளை நோக்கி விரிக்கிறது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். மொத்தத்தில் இன்றைய தேதியில் அமெரிக்காவை நம்பி சீனா இல்லை; ஆனால், சீனாவை - சீனப் பொருட்களை நம்பி அமெரிக்கா இருக்கிறது.இப்போதைக்கு இது மட்டுமே நிஜம்.

டி.ரஞ்சித்