பெண் உதவி இயக்குநர்கள் தேவையா?
மவுனப் படக் காலம் தொடங்கி கோலிவுட்டுக்கு பலர் படையெடுத்துள்ளனர். ஆண்களும் பெண்களும் இத்துறைக்கு ஆர்வத்துடன் வருகிறார்கள். குறிப்பாக கடந்த சில வருடங்களாகவே பெண் உதவி இயக்குநர்கள் வருகை அதிகரித்துள்ளதைப் பார்க்க முடிகிறது.  இந்த நிலையில் சினிமாவில் பெண் உதவி இயக்குநர்கள் தேவையா? பெண் உதவி இயக்குநர்களுக்கு சம உரிமை கிடைக்கிறதா... போன்ற கேள்விகள் சமீபத்தில் எழுந்துள்ளன.காரணம், பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்து வெற்றியடைந்த ‘டிராகன்’ படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. 
இவர் ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ வெற்றிக்குப் பிறகு சிம்பு நடிக்கும் ‘எஸ்டிஆர் 51’ படத்தை இயக்குகிறார். அந்தப் படத்துக்காக ‘உதவி இயக்குநர்கள் தேவை’ என்று சமூக வலைத்தளத்தில் விளம்பரம் செய்து தேர்வு நடத்தினார். அதில் தேர்வானவர்கள் அனைவரும் ஆண் உதவி இயக்குநர்கள்!இதுதான் இப்பொழுது விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.  ‘‘என்னுடைய அடுத்த படம் சிம்பு நடிக்கும் ‘எஸ்டிஆர்-51’. ஏஜிஎஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு உதவி இயக்குநர்கள் தேவை என வெளிப்படையாக அறிவித்தேன். 15000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்தன. அதில் 30 பெண்களிடம் இருந்து வந்த விண்ணப்பங்களும் அடக்கம்.
உதவி இயக்குநருக்கான தேர்வை எந்தவித சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் மூன்று சுற்றுகளாக நடத்தினேன். அதில் அடுத்தடுத்த சுற்றுகளில் பெண் இயக்குநர்கள் கலந்துகொள்ளவில்லை. அதன் காரணமாக ஆண் உதவி இயக்குநர்களிடம் நேர்முகத் தேர்வு நடத்தி அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தேன்.
இந்த நடைமுறை அனைத்தும் தகுதி, திறமை அடிப்படையில் மட்டுமே நடந்தது. இதில் சிபாரிசு, வாரிசு போன்ற சலுகைகள் வழங்கப்படவில்லை...’’ என்கிறார் இந்த சர்ச்சையை சமீபத்தில் ஆரம்பித்து வைத்திருக்கும் இயக்குநரான அஸ்வத் மாரிமுத்து.
‘‘பெண் உதவி இயக்குநர்கள் சின்சியராக பணிபுரிவார்கள்...’’ என தன் தரப்பை முன்வைக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய்.
‘‘சினிமாவில் இப்போது ஆண், பெண் என பாலின ரீதியாகப் பிரித்துப் பார்ப்பதில்லை என்றுதான் நினைக்கிறேன். ஆண், பெண் இருவரும் சமமாக நடத்தப்படுகிறார்கள். என்னுடைய படங்களில் பல பெண் உதவி இயக்குநர்கள் வேலை செய்துள்ளார்கள். பெண் உதவி இயக்குநர்களைப் பொறுத்தவரை சின்சியராக, தொலைநோக்குப் பார்வையுடன் வேலை செய்கிறார்கள். கதை விவாதம், திரைக்கதை, வசனம் என படைப்பு ரீதியாக அவர்களுடைய திறமை கவனம் ஈர்க்கும்படியாக இருக்கும்.
நிறைய உலக சினிமாக்கள் பார்க்கிறார்கள். புத்தகம் படிக்கிறார்கள். திகில் கதை எழுதுகிறார்கள். எனக்குத் தெரிந்து, அடுத்த ஐந்தாண்டுகளில் பெண் இயக்குநர்கள் மிக உயர்ந்த இடத்தைப் பிடிப்பார்கள்...’’ என்கிறார்.இதை ஆமோதிக்கிறார் தயாரிப்பாளரும் இயக்குநருமான சி.வி.குமார். ‘‘ஆண்கள் பங்களிப்பு எவ்வளவு முக்கியமாக இருக்கிறதோ அந்தளவுக்கு பெண்களின் பங்களிப்பும் முக்கியமாக இருக்கிறது.
கதை விவாதம் தொடங்கி படப்பிடிப்பு வரை அவர்களுடைய பங்களிப்பு அதிகம். இப்போது தமிழ் சினிமாவில் பெண் உதவி இயக்குநர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். பெண் உதவி இயக்குநர்கள் அவசியமான இடத்தில் இருக்கிறார்களா, தவிர்க்கப்படுகிறார்களா என்று கேட்டால் அவர்களுடைய திறமைதான் அதை முடிவு செய்கிறது.
நான் கவனித்தவரை பெண் உதவி இயக்குநர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள். ஹீரோ, ஹீரோயினை ஹேண்டில் பண்ணுவது, காஸ்டியூம் போன்ற வேலைகளில் அவர்கள் பங்களிப்பு முக்கியமாக இருக்கிறது.
காதல் கதைகளில் ஆண்களைவிட அவர்களுடைய பார்வை பெரிய மாற்றத்தைக் கொடுக்கிறது. மற்றபடி ஆண், பெண் பாலினப் பாகுபாடுகளுக்கு இடமில்லை...’’ என்கிறார் சி.வி.குமார்.
‘‘பெண்கள் வேலைக்காக வெளியே செல்லும்போது எல்லா பெற்றோருக்கும் ஒருவித பயம் இருக்கும்...’’ என்றபடி பேசத் தொடங்கினார் அலிஷா ரஹ்மான்.
‘தக் லைஃப்’ படத்தின் உதவி இயக்குநர் இவர்.‘‘மணி சாரைப் பொறுத்தவரை, உதவி இயக்குநர்கள் கிரியேட்டிவ்வாக பல ஆலோசனைகளைத் தருவதற்கு வாய்ப்பு கொடுப்பார். இதுதான் என்னுடைய முதல் படம். முதல் நாள் தில்லியில் ஆக்ஷன் சீக்வென்ஸ் காட்சிகளில் வேலை செய்ய வேண்டும்.
சாலையில் எடுக்கப்பட்ட அந்தக் காட்சிகள் ஜூனியரான எனக்கு சவாலாக இருந்தாலும் அடுத்தடுத்த நாளில் உற்சாகத்தைக் கொடுத்துச்சு. பெண் என்று பிரித்துப் பார்க்காமல் பெண்களும் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்று இருபாலருக்கும் ஒரேவித பொறுப்புகளைக் கொடுத்தார்.
அந்தப் படத்தில் எனக்கும், இன்னொரு உதவி இயக்குநர் சஞ்சனாவுக்கும் கேமரா பக்கத்திலேயே நின்று கவனிக்கும் வேலையைக் கொடுத்தார். அப்போது மணி சார், ‘நான் திட்டுவேன். அது நீங்க சினிமா கத்துக்க மட்டுமே’ என்று எங்களை வழி நடத்தினார்...’’ என்கிறார் அலிஷா ரஹ்மான்.
ப்ரீத்தியும் இதை ஏற்கிறார். இவர் உதவி இயக்குநர் மட்டுமல்ல, தயாரிப்பாளரும் கூட. ‘என்னை அறிந்தால்’, ‘துருவ நட்சத்திரம்’ படங்களில் பணிபுரிந்திருக்கிறார்.
‘‘‘என்னை அறிந்தால்’ என்னுடைய முதல் படம். அந்தப் படத்தில் கவுதம் வாசுதேவ் மேனன் சார், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நடிகர், நடிகைகளுக்கான ஆடிஷன், காஸ்டியூம், டயலாக் ரிகர்சல் கவனிக்கும் பொறுப்புகளைக் கொடுத்தார். குறிப்பாக அனிகா, த்ரிஷா மேடம் மகளாக நடித்த 2 வயசு குழந்தையை ஹேண்டில் பண்ணணும். வழக்கமாக பெண் உதவி இயக்குநர்கள் என்றால் அவர்களுக்கு காஸ்டியூம் டிப்பார்ட்மெண்ட்தான்னு சொல்வார்கள். ஆனால், எனக்கு ஆர்ட்டிஸ்டுகளை ஹேண்டில் பண்ணும் வாய்ப்பு கொடுத்தார்.
சூர்யா சாரின் ‘நவரசா’ அந்தாலஜியில் இருந்தேன். ‘சிருங்காரா’ புரொடக்ஷன் பொறுப்பைக் கொடுத்தார்கள். ‘வெந்து தணிந்தது காடு’ முதல் பிரதி பண்ணும் வாய்ப்பு கிடைச்சது. ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் அசோசியேட் டைரக்டராகவும், இணை தயாரிப்பாளராகவும் இருந்தேன்.
சினிமாவில் பெண் உதவி இயக்குநர்கள் பங்களிப்பை அவசியமாகப் பார்க்கிறேன். உதவி இயக்குநர் என்று வரும்போது ஆண், பெண் என்று யாரும் பிரித்துப் பார்ப்பதில்லை. பெண் உதவி இயக்குநர்கள் இரவு ஷூட் முடித்து திரும்பும்போது கம்பெனி வாகனத்தில் அனுப்பி வைக்கிறார்கள். ஆண், பெண், புதியவர்கள், அனுபவசாலிகள் என ஒவ்வொரு உதவி இயக்குநர்களின் ஆலோசனையும் சினிமாவை மெருகேற்ற உதவும். பெண்கள் சரியாகப் பண்ணமாட்டார்கள் என்ற மேலோட்டமான கருத்தை உடைக்கவே பெண்கள் அதிகமாக உழைக்கிறார்கள்...’’ என அழுத்தமாகச் சொல்கிறார் ப்ரீத்தி.
‘சூது கவ்வும் 2’ல் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த காவிய பிருந்தா உமா மகேஷ்வரன், ‘‘நவீன் சந்திரா, சுனைனா நடிப்பில் ஓடிடியில் வெளியான ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’யில் உதவி இயக்குநராக பணியாற்றினேன். அதில் முக்கியமான கதாபாத்திரங்களைத் தவிர, மற்றவர்களை ஆடிஷன் செய்தது மறக்க முடியாத அனுபவம்.
அப்படியாக சுமார் 1,000 நடிகர், நடிகைகளை ஆடிஷன் செய்தேன். தயாரிப்பாளர் சி.வி.குமார் சாரின் திருக்குமரன் எண்டெர்டெயின்மெண்ட் படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றி உள்ளேன். சில இயக்குநர்கள் திரைக்கதை கலந்துரையாடலிலும் வாய்ப்பு கொடுத்துள்ளார்கள்.
இப்போது உண்மைக்கு நெருக்கமாக நிறைய திரைப்படங்கள் வருவதற்குக் காரணம் பெண்களும் கதை சொல்லிகளாக திரையுலகில் பயணிப்பதுதான், கதை விவாதங்களில் பங்கேற்பதுதான்.
இன்று பெண்களின் கருத்தை காது கொடுத்துக் கேட்க இயக்குநர்கள் தயாராக இருக்கிறார்கள். இயக்குநர் நாற்காலியில் அமர விரும்பும் சினிமா ஸ்டூடண்ட்டாக சினிமாத் துறையில் நான் சந்தித்ததெல்லாம் நிறைய உணர்வுபூர்வமான மனிதர்களை மட்டுமே...’’ என்கிறார் காவிய பிருந்தா உமா மகேஷ்வரன்.
‘‘பிரியதர்ஷன் சார் படங்களிலும், ஏ.எல்.விஜய் சார் இயக்கிய விளம்பரப் படங்களிலும் உதவியாளராக ஒர்க் பண்ணியிருக்கிறேன்...’’ என்றபடி பேச ஆரம்பித்தார் பிரஷ்நேவ் பிரஸ்ஸி.
‘‘சினிமாவில் பெண் உதவி இயக்குநர்கள் ஆப்ஷனலாகப் பார்க்கப்படுவதாக நினைக்கிறேன். பின்னணி இல்லாதவர்களைவிட சினிமா வாரிசுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் சூழ்நிலை உள்ளது.
விஸ்காம் முடித்து வருகிறவர்கள் அவ்வளவு சுலபமாக பெரிய இயக்குநர்களிடம் உதவியாளராகச் சேரமுடியாது. மற்றபடி, ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆண், பெண் என்ற பாகுபாடு கிடையாது...’’ என்கிறார் பிரஷ்நேவ் பிரஸ்ஸி.
‘‘கதை விவாதத்தில் ஆண், பெண் என்று பிரித்துப் பார்க்காமல் யார் சிறந்த ஆலோசனை சொல்கிறார்களோ அதை எடுத்துக்கொள்வார்கள்...’’ என்கிறார் ‘அன்னபூரணி’ உதவி இயக்குநரான பெ.நிதாஹனா.‘‘சினிமாவில் பெண்களுக்குரிய மரியாதை கிடைக்கிறது. ஆண், பெண் பாகுபாடு இருக்கிற மாதிரி தெரியவில்லை.
‘அன்னபூரணி’யில் நயன்தாரா மேடத்துடன் ஒர்க் பண்ணும் வாய்ப்பு கிடைச்சது. சினிமாவில் பெண் உதவி இயக்குநர்கள் அவசியம் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளதாகவே நினைக்கிறேன்...’’ என்கிறார் பெ.நிதாஹனா. ‘பெண்ணைப் பேச பெண் ணே எழு’ - இது பாடலாசிரியர் அறிவுமதியின் கவிதை. திரைத்துறையில் பெண்களைப் பற்றி பேச பெண்கள் அதிகளவில் வரவேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். இதுவே பெரும்பாலான பெண் உதவி இயக்குநர்களின் கருத்துக்களாகவும் உள்ளது.
எஸ்.ராஜா
|