முதல் முறையாக பின்னணிப் பாடகராக அறிமுகமாகிறார் டிஎம்எஸ் மகன்!
காலத்தால் அழியாத குரலுக்கு சொந்தக்காரர் பின்னணிப் பாடகர் டி.எம்.செளந்தரராஜன். அவருடைய மகன் டி.எம்.எஸ்.செல்வகுமார், நீண்ட காலமாக இசையுலகில் பயணித்து வந்தபோதும் இப்பொழுதுதான் முதன் முறையாக, சமுத்திரக்கனி நடித்துள்ள ‘வீர வணக்கம்’ படத்தில் பின்னணிப் பாடகராக அறிமுகமாகியுள்ளார்.  முதல் வாய்ப்பு குறித்த பூரிப்பு அவர் முகத்தில் ஜொலிக்கிறது.‘‘அப்பாவுக்கு மூன்று பெண் குழந்தைகள், நான்கு ஆண் குழந்தைகள் என மொத்தம் 7 பிள்ளைகள்.
இப்போது 3 பேர்தான் இருக்கிறோம். ‘நான் பெற்ற செல்வம்’ படம் வெளிவந்த காலத்தில் நான் பிறந்ததால் எனக்கு செல்வகுமார் என்று பேர் வைத்தார்...’’ என்றபடி புன்னகையுடன் பேசத் தொடங்கினார் டி.எம்.எஸ்.செல்வகுமார்.  இளம் வயதில் நடிகராக வேண்டும் என்ற ஆசை இருந்ததா அல்லது இசைத் துறைக்கு வரணும்னு நினைத்தீர்களா?
நடிப்பு ஆர்வம் துளியும் இருந்ததில்லை. இசைத் துறை மீதுதான் ஆர்வம் இருந்துச்சு. அப்பா பாடகராக இருந்தாலும் சில படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் ராமண்ணா ‘தாயுமானவர்’ என்ற படம் எடுப்பதாக இருந்தார். அதில் என்னை சின்ன தாயுமானவராக நடிக்க வைக்க ப்ளான் பண்ணியிருந்தார்.
ஆனால், அது நடக்கவில்லை. ஒருவேளை அந்தப் படம் வந்திருந்தால் நானும் நடிகனாகியிருப்பேன்.அப்பா, ‘கல்லும் கனியாகும்’ என்ற சொந்தப் படம் எடுத்தார். அந்தப் படத்துல என்னையும் நடிக்க வைக்கச் சொல்லி அப்பாவிடம் அம்மா கேட்டார். படிப்பு கெட்டுவிடும்னு அப்பா சம்மதிக்கவில்லை. ஆனால், உண்மையில் எனக்கு படிப்பு கெட்டுப் போயிடுச்சு. ஏனெனில், இசைத் துறை மீது நாட்டம் இருந்ததால் என்னுடைய கவனமெல்லாம் இசை மீதுதான் இருந்தது. அப்பாவுடன் பலமுறை ரிக்கார்டிங் போயிருக்கிறேன். ‘குடியிருந்த கோயில்’, ‘அன்பே வா’, ‘ராஜபார்ட் ரங்கதுரை’ போன்ற படங்களில் இடம் பெற்ற ‘ராஜாவின் பார்வையிலே...’, ‘மதனமாளிகை...’ போன்ற பாடல்களை அப்பா பாடும்போது நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைச்சது. அதிலிருந்து பாடகனாக வேண்டும் என்ற ஆசை எனக்குள் அதிகமாச்சு.
இசையை யாரிடம் கற்றுக்கொண்டீர்கள்?
1973ல் முதன் முறையாக ஒரு கச்சேரியில் பாடினேன். அப்போது எனக்கு 16 வயசு. அப்போது யாரிடமும் இசையைக் கற்றுக்கொள்ளாமல் கேள்வி ஞானத்தால் பாட ஆரம்பிச்சேன். அந்த வாய்ப்புகளைக் கொடுத்தது இளையராஜா. அப்போது இளையராஜா மியூசிக் டைரக்டராக அறிமுகமாகவில்லை.
அப்போது பாவலர் இசைக் குழுவில் தொடர்ந்து பாடினேன்.மேடையில் நான் பாடிய முதல் பாடல் ‘என்னடி ராக்கம்மா...’ பாடல். அப்போது லஸ் கார்னரில் உள்ள செலக்ட் ஹோட்டலில் எங்கள் மீட்டிங் அடிக்கடி நடக்கும். மலேஷியா வாசுதேவன், நடிகை சந்திரகாந்தா தம்பி, மாணிக்க விநாயகம் எல்லோரும் என்னுடைய நண்பர்கள்.
‘பராசக்தி’ இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம் ஐயாவிடம்தான் இசையை முறையாக கத்துக்க ஆரம்பிச்சேன். அவரிடம் சிஷ்யனாக சேர்ந்தது சுவாரஸ்யமான நிகழ்வு. என்னுடைய இசைக் கச்சேரிக்கு சுதர்சனம் ஐயா சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும் அப்பாவிடம், ‘பையனுக்கு சாரீரம் நல்லாயிருக்கு... எங்கிட்ட அனுப்பி வையுங்க, நான் பையனை தயார் பண்ணி வைக்கிறேன்’னு கேட்டுள்ளார்.
அப்பாவுக்கும் சுதர்சனம் ஐயாதான் ‘செல்லப்பிள்ளை’யில் வாய்ப்பு கொடுத்தவர். அப்பாவுக்கு அவர் மீது தனி மரியாதை என்பதால் அவரிடம் என்னை அனுப்பி வைத்தார். இரண்டு வருடப் பயிற்சிக்குப் பிறகு 1976ல் அப்போதைய கலைவாணர் அரங்கத்தில் என்னுடைய அரங்கேற்றம் நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு ஏ.பி.நாகராஜன், எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், சீர்காழி கோவிந்தராஜன், வாலி, எல்.ஆர்.ஈஸ்வரி, வாணி ஜெயராம் உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். ஒரு மணி நேரம் கிளாசிக்கல், ஒரு மணி நேரம் பக்திப் பாடல்கள் என நடந்த அந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு அனைவரும் வாழ்த்தினார்கள்.
பல ஆண்டுகளாக இசைத் துறையில் இருக்கிறீர்கள். பின்னணிப் பாடகருக்கான வாய்ப்பு தாமதமாக கிடைத்ததாக கருதுகிறீர்களா?
அப்படிச் சொல்லமுடியாது. சமுத்திரக்கனி நடித்துள்ள ‘வீர வணக்கம்’ படத்தில்தான் முதன் முறையாக பின்னணி பாடியிருக்கிறேன். இயக்குநர் அனில் நாகேந்திரன் சார் வாய்ப்பு கொடுத்தார். ஏற்கனவே அவருடைய உருவாக்கத்தில் மலையாளத்தில் முருக பக்திப் பாடலைப் பாடியிருக்கிறேன்.
கச்சேரிக்காக பல இடங்களுக்கு செல்லும்போது ரசிகர்கள் ஏன் திரைப்படத்தில் பாடவில்லை என்று கேட்பார்கள். அந்தக் கேள்விக்கு இப்போது பதில் கிடைத்துவிட்டது.
குரல் வளத்துக்கு என்ன மாதிரி பயிற்சி எடுத்துக்கொள்வீர்கள்?
அப்பா பாடும் முன் ஹீரோ யார் என்று கேட்டு தெரிஞ்சுக்குவார். அதுக்கேத்த மாடுலேஷன்ல பாடுவார். குரல் பயிற்சி என்று பார்க்கும்போது தனி அறையில் தம்புராவுடன் பல மணி நேரம் சாதகம் பண்ணுவார்.
ரூம்ல இருந்து வெளியே வரும்போது குளிச்சு முடிச்ச மாதிரி வியர்வை உடல் முழுவதும் பரவியிருக்கும். அப்பா எவ்விதமோ அவ்விதமே மகனும். மற்றபடி உணவுக் கட்டுப்பாடு எதுவுமில்லை.நீங்கள் செளராஷ்டிரா மொழியை தாய்மொழியாகக் கொண்ட குடும்பம். அப்பாவின் தமிழ் உச்சரிப்பு சுத்தமாக இருக்கும்.
அப்பாவின் மொழி ஆற்றல் பற்றி சொல்லுங்களேன்...?
அப்பா சமஸ்கிருதம் படிச்சவர். என்னுடைய தாத்தா மீனாட்சி ஐயங்கார் கோயில் குருக்களாக இருந்தவர். வேத மந்திரங்களை பிரமாதமாகப் பாடுவார்.
தாத்தாவுடன் இருந்ததால் அப்பாவும் கோயில் பஜனையில் உச்சஸ்தாயியில் பாடுவாராம். தாத்தாவின் சாரீரம் அப்பாவுக்கும் அப்படியே இருந்துச்சு. அப்பாவிடம் ‘ள’, ‘ழ’ போன்ற வார்த்தைகளின் உச்சரிப்பு தெளிவாக இருக்கும். ஒரு நிகழ்ச்சியில் வைரமுத்து ஐயா பேசும்போது, ‘தமிழை கத்துக்கணும்னு நினைக்கிறவங்க டி.எம்.எஸ்.ஐயா பாடலை கேட்டாலே போதும்’னு சொன்னார்.
அப்பாவின் அந்திமக் காலத்தில் நிறைவேறாத ஆசை ஏதேனும் இருந்ததா?
அப்படி எதுவுமில்லை. சென்னையில் அப்பா பெயரில் சாலை அமைந்துள்ளது. மதுரையில் அப்பாவுக்கு சிலை வைத்துள்ளார்கள். இயல், இசை, நாடக மன்றத்தில் தலைவர் பொறுப்பு வகித்தார். பத்மஸ்ரீ விருது கொடுத்தார்கள்.
இளம் பாடகர்களுக்கு உங்கள் ஆலோசனை என்ன?
எல்லோரும் அருமையாகப் பாடுகிறார்கள். எந்தக் குரல் பொருத்தமாக இருக்கும் என்பதைத் தெரிஞ்சுக்கிட்டு பாடணும். சிலருக்கு மிமிக்ரி மாதிரி பல குரல்களில் பாட முடியும். ஆனால், தனித்துவமான குரல் வளத்துடன் பாடும்போதுதான் அது பேசப்படும். நான் அப்பா குரல் தவிர வேறு குரல்களில் பாட மாட்டேன். மெலடி பாடல்கள் பாடகர்களுக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுக்கும்.
உங்களிடம் பயன் தராத திறமை எதாவது உண்டா?
அப்படிச் சொல்லமாட்டேன். என்னுடைய திறமை இசை மட்டுமே. அதுதான் என் வாழ்வின் அடிநாதம். சிறுவயதிலிருந்தே இசைக்காக என்னை முழுமையாக அர்ப்பணித்துவிட்டேன். எனக்குத் தெரிந்தது இசை மட்டுமே.
யாருடைய இசையில் பாட விருப்பம்?
யார் வாய்ப்பு கொடுத்தாலும் பாடுவேன். ஏ.ஆர்.ரஹ்மான் அவருடைய இசையில் அப்பாவை பாட வைக்க விரும்பினார். இப்போதுள்ள டிரெண்டுக்கு ஏற்ப ஸ்ருதியை குறைத்து பாட வைக்கும் முயற்சியும் எடுத்தார்.
அப்பாவின் உடல் நலம் ஒத்துழைக்காததால் அது நடக்கவில்லை. சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை சந்திச்சு பேசும்போது ‘அப்பாவுக்கு கொடுக்க நினைத்த பாடலை எனக்கு கொடுங்க’ன்னு கேட்டேன். சிலருக்கு திருப்புமுனை இளம் வயதில் வரும். சிலருக்கு 50, 60 வயதுகளில் வரும். காலம் கனியும்!
செய்தி: எஸ்.ராஜா
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|