ரத்த மகுடம்-82
பிரமாண்டமான சரித்திரத் தொடர்
கரிகாலனின் உதடுகளில் புன்னகை பூத்தது. தூணில் நன்றாக சாய்ந்து கொண்டான். அதேநேரம் தன் உடல் பாகங்கள் வெளிச்சத்தில் படாதபடியும் பார்த்துக் கொண்டான்.‘‘பல்லவ இளவரசரை எப்படி நம்ப வைத்தாய்...’’ குறுஞ்சிரிப்புடன் ஸ்ரீராமபுண்ய வல்லபர் கேட்டார்.‘‘படாதபாடு பட்டுதான்...’’ மரியாதையுடன் சிவகாமி பதிலளித்தாள்.
‘‘கரிகாலன் சொன்னதை அவர் நம்பவில்லையா..?’’‘‘இம்மியளவு கூட நம்பவில்லை...’’‘‘உங்கள் இருவருக்கும் இடையில் உரையாடல் நடக்கையில் கரிகாலன் இடையில் புகுந்து எதுவும் சொல்லவில்லையா..?’’‘‘இல்லை...’’ ‘‘கொஞ்சம் புரியும்படியாக சொல்...’’‘‘திறந்தவெளியில் பல்லவ வீரர்கள் மத்தியில் விசாரணை நடைபெற்றது...’’ ‘‘ம்...’’
‘‘என் மீதான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன... கொஞ்சம் நாடகீயத்தன்மையுடன் அனைத்துக்கும் பதில் அளித்தேன்...’’ ‘‘ம்...’’‘‘அதன் பிறகு என்னை தனியாக அழைத்துச் சென்றார்...’’ ‘‘அப்போது கரிகாலன் கூட அங்கு அனுமதிக்கப்படவில்லையா..?’’ ‘‘இல்லை...’’
சாளுக்கிய போர் அமைச்சர் எதுவும் சொல்லாமல் மவுனமானார். சிவகாமி தொடர்ந்தாள். ‘‘என் தரப்பை தனிமையில் கேட்டுவிட்டு ‘உன்னை நம்புகிறேன் சகோதரி...’ என்று இராஜசிம்மர் சொன்னார்...’’ ‘‘அவ்வளவுதானா..?’’
‘‘ஆம்... அவ்வளவுதான்... அதன்பிறகு பல்லவ இளவரசரின் கட்டளையை ஏற்று கரிகாலரும் நானும் மதுரைக்கு புறப்பட்டு வந்திருக்கிறோம்...’’ ‘‘இப்போது கரிகாலன்..?’’‘‘மயக்கத்தில் இருக்கிறார்... காலை வரை எழுந்திருக்க மாட்டார்...’’ ராமபுண்ய வல்லபரின் முகத்தில் ஆழ்ந்த யோசனைகள் படர்ந்தன. ‘‘சிவகாமி...’’ ‘‘தெரியும் குருவே...’’ சட்டென அவள் இடைமறித்தாள்.
‘‘தெரியுமா..? என்ன தெரியும்..?’’ ‘‘இப்போது நீங்கள் சொல்லப் போவது!’’ சாளுக்கிய போர் அமைச்சர் வியப்புடன் அவளைப் பார்த்தார்.‘‘பல்லவ இளவரசரும் கரிகாலரும் உன்னை நம்பவில்லை... சந்தேகத்தின் சாயல் இன்னும் அதிகமாகி இருக்கிறது... இதைத்தானே கூற வருகிறீர்கள் குருவே!’’புருவங்கள் உயர, ‘‘ஆம்...’’ என பதிலளித்தார் ராமபுண்ய வல்லபர்.
‘‘இதை நானும் ஊகித்தேன் குருவே... அப்படித்தான் இருக்கும் என நம்பவும் செய்கிறேன்... ஏன் தெரியுமா..?’’ சாதாரணமாக இதுவரை பேசி வந்த சிவகாமி சட்டென தன் குரலை உயர்த்தினாள். ‘‘நாம் இருவரும் பேசுவதை இப்போது மறைந்திருந்து கரிகாலர் கேட்டுக் கொண்டிருக்கிறார்!’’ சாளுக்கிய போர் அமைச்சர் திகைத்தார் என்றால்... தூணில் சாய்ந்திருந்த கரிகாலன் அதிர்ச்சியின் விளிம்புக்குச் சென்றான்! ‘‘மயக்க மருந்து கொடுத்ததாக சொன்னாயே சிவகாமி...’’ ராமபுண்ய வல்லபர் படபடத்தார்.
‘‘என்னை சந்தேகக் கண்ணோடு பார்ப்பவர்... நிழலாக என்னைத் தொடருபவர்... மதுரையில் நான் என்ன செய்யப் போகிறேன் என்று காணாமல் அசதியால் உறங்குவாரா என்ன..? தினமும் பிராணாயாமம் செய்யும் மனிதர் அவர்... மூச்சை எப்போது எதற்கு ஏன் அடக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்...’’
‘‘அறிந்தும் எதற்காக அவனுக்கு மயக்க மருந்தைக் கொடுத்தாய்..?’’ ‘‘அது என் கடமை என்பதால்...’’ ‘‘அவன் அதை சுவாசிக்க மறுத்தது..?’’ ‘‘அவரது கடமை என்பதால்!’’
‘‘தெரிந்தும் இதையெல்லாம் இப்போது ஏன் சொல்கிறாய்..?’’ ‘‘செவி குளிர கரிகாலர் இதைக் கேட்க வேண்டுமென்று!’’ ‘‘சிவகாமி...’’ ‘‘கோபப்படாதீர்கள் குருவே... மதுரையில் ஒரு காரியத்தை நிறைவேற்ற பல்லவ இளவரசர் கரிகாலரை அனுப்பியிருக்கிறார்... அது மட்டும் நிறைவேறிவிட்டால் அவர்கள் பக்கம் வலு கூடிவிடும்...’’
‘‘அப்படியென்ன காரியம் அது..?’’ ‘‘‘பகலில் பக்கம் பார்த்துப் பேசு... இரவில் அதுவும் பேசாதே’ என்பது தமிழர் வாக்கு குருவே... அதுவும் கரிகாலர் நம்மை கவனித்துக் கொண்டிருக்கும் நிலையில் வெளிப்படையாக நாம் பேசவே கூடாது...’’ ‘‘இரு... உடனே வீரர்களை சல்லடையிட்டு தேடச் சொல்கிறேன்...’’
‘‘அது பயனற்ற வேலை என்பதை காஞ்சியிலேயே தெரிந்து கொண்டிருப்பீர்களே! குருவே, கரிகாலர் அசுவ சாஸ்திரி மட்டுமல்ல; கஜ சாஸ்திரியும் கூட! காற்றின் பயன்பாட்டை நன்கு அறிந்த அவரை அவர் போக்கில்தான் வசப்படுத்த வேண்டும்! அதை நான் பார்த்துக் கொள்கிறேன். பல்லவ இளவரசரும் நானும் தனிமையில் பேசிய விவரங்களை நம் வழக்கப்படி சாளுக்கிய மன்னருக்கு செய்தியாக அனுப்பிவிட்டேன்!’’ ‘‘என்ன..?’’
‘‘கோபம் கொள்ளாதீர்கள் குருவே... உங்களால் அனுப்பப்பட்ட ஆயுதம்தான் நான் என்றாலும்... தனக்கு அதில் உடன்பாடில்லை என்றாலும்... சாளுக்கியர்களின் நலன் கருதி எனது உண்மை வடிவம் வெளிப்படக் கூடாது என்பதில் இப்போது நம் சாளுக்கிய மன்னர் உறுதியாக இருக்கிறார்... அக்கறையும் செலுத்துகிறார்... எனவேதான் தங்களை மீறி அவருக்கு செய்தி அனுப்பினேன்!’’
‘‘என்னவென்று..?’’ ‘‘அதை வேளிர்களின் தலைவராக மாறியிருக்கும் கடிகை பாலகர் தங்களிடம் தெரிவிப்பார்!’’ ‘‘சிவகாமி...’’‘‘ஆச்சர்யத்துக்கும் ஆவேசத்துக்கும் இப்போது நேரமில்லை குருவே... பாண்டிய மன்னரிடம் பக்குவமாக பேசி நீங்களும் சாளுக்கிய இளவரசரும் வந்த காரியத்தை முடியுங்கள்...’’
‘‘நாங்கள் வந்திருக்கும் காரியம்..?’’ ‘‘எனக்கு மட்டுமல்ல... பல்லவ இளவரசருக்கும் கரிகாலருக்கும் கூடத் தெரியும்! அதை உடைப்பதற்கான செயலில்தான் கரிகாலர் இறங்கப் போகிறார்! அவரை நான் பார்த்துக் கொள்கிறேன்...’’சிவகாமியை உற்றுப் பார்த்தார் ராமபுண்ய வல்லபர். அவருக்கு தலைசுற்றியது. இப்போது, அவளை நம்புவதா வேண்டாமா என்ற கேள்வி அவருக்குள்ளும் எழுந்தது!
‘‘என்னை பரிபூரணமாக நம்புங்கள் குருவே... தாய்நாட்டுக்கு ஒருபோதும் நான் துரோகம் செய்யமாட்டேன்...’’ சொன்னவள் சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துவிட்டு பரபரப்பானாள். ‘‘கரிகாலர் இந்நேரம் இங்கிருந்து அகன்றிருப்பார்... அவரை நான் பின்தொடர வேண்டும்...’’ என்றபடியே அருகில் வந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கினாள். ‘‘வருகிறேன் குருவே...’’
பதிலை எதிர்பார்க்காமல் விடுவிடுவென்று மாளிகையை விட்டு வெளியேறி இருளில் மறைந்தாள்; கரைந்தாள். மனதில் புயலடிக்க சாளுக்கிய போர் அமைச்சர் அவள் சென்ற திசையை வெறித்துப் பார்த்துவிட்டு மாளிகைக்குள் புகுந்தார்! சில கணங்களுக்குப் பின் கரிகாலன் தன் மறைவிடத்தை விட்டு வெளியே வந்தான். ராமபுண்ய வல்லபரும் சிவகாமியும் பேசிய இடத்தை அடைந்தவன் சட்டென நின்றான்.
மரத்தின் கீழே என்பதால் இலைகளின் அசைவில் அவ்வப்போது நிலவின் ஒளி தரையை முத்தமிட்டு முத்தமிட்டு அகன்று கொண்டிருந்தது. கரிகாலன் அந்த இடத்தை அடையவும் நிலவின் ஒளி பூமியை முத்தமிடவும் சரியாக இருந்தது. பளீரென ஒளி வீசிவிட்டு மறையவே சட்டென குனிந்து அந்தப் பொருளை எடுத்தான். அதிர்ந்தான். அது பாண்டியர்களின் முத்திரை மோதிரம்!
மீனின் கண்களில் பொருத்தப்பட்டிருந்த இரு முத்துக்களும் இருளிலும் ஒளிர்ந்தன.இந்த மோதிரம் சிவகாமிக்கு எப்படிக் கிடைத்தது..? கண்கள் சுருங்க கரிகாலன் அங்கு நின்றது ஒரு கணம்தான். அதற்குள் கூகையின் குரல் அவனை நடப்புக்கு அழைத்து வந்தது.புருவங்கள் முடிச்சிட ஆந்தையின் அலறல் வந்த திசை நோக்கிச் சென்றான். அது ராமபுண்ய வல்லபர் தங்கியிருந்த மாளிகைக்கு அடுத்த மாளிகைக்கு அழைத்துச் சென்றது. இருளில் தன்னைக் கரைத்தபடி அந்த மாளிகைக்குள் நுழைந்தான்.
சட்டென அவன் தோளில் ஒரு கரம் வந்து விழுந்தது.கூகைதான். ஆந்தையேதான். ஆனால், பறவை அல்ல... சீனன்! சோழ மன்னருக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்திய அதே சீனன்!மீண்டும் ஆந்தையைப் போல் அலறிவிட்டு கரிகாலனைப் பார்த்து கண்சிமிட்டிய சீனன், தன்னைப் பின்தொடரும்படி சைகை செய்துவிட்டு அந்த மாளிகையை நோக்கி நடந்தான்.இருவரும் மாளிகையின் பின்புறத்தை அடைந்தார்கள்.
படர்ந்திருந்த கொடியைப் பிடித்தபடி சீனன் ஏறத் தொடங்கினான். இடைவெளிவிட்டு கரிகாலனும் ஏற ஆரம்பித்தான். இருவரும் கொடியைப் பிடித்து ஏறுவதை இன்னொரு மரத்தின் பின்னால் நின்றபடி புன்னகையுடன் சிவகாமி பார்த்துக் கொண்டிருந்தாள்!
(தொடரும்)
அட்டையில்: ப்ரியா ஆனந்த்; படம்: கிரண்ஷா
கே.என்.சிவராமன்
ஓவியம்: ஸ்யாம்
|