அதிகரிக்கும் திறந்தவெளி சிறைகள்




இந்தியாவில் நீதிமன்றம் மூலம் ஒருவருக்கு வழங்கப்படும் தண்டனை, அவர் தன் தவறை உணர்ந்து வருந்தி திருந்துவதற்காகவே. ராஜஸ்தான் முதல் இந்தியா முழுவதுமுள்ள திறந்தவெளி சிறைகள் இதை பிராக்டிக்கலாக சாதிக்க முயற்சித்து வருகின்றன. திறந்தவெளி சிறைகள்..? யெஸ். 19ம் நூற்றாண்டில் குற்றவாளிகளின் பழக்கவழக்கங்களை மாற்றி சீர்திருத்தும் முயற்சியில்  அமெரிக்காவில்  திறந்தவெளி சிறைகள் உருவாயின.  இந்தியாவில் 1953ம் ஆண்டு உத்திரப் பிரதேச மாநிலத்தில் முதல் திறந்தவெளி  சிறைக்கூடம் உருவானது. இதற்கடுத்த முன்னேற்றமாக ராஜஸ்தானில் தொடங்கிய திறந்தவெளி சிறையில் குற்றவாளிகள் குடும்பத்துடன்  தங்கியிருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

கடந்தாண்டு டிசம்பரில் உச்சநீதிமன்றம், ராஜஸ்தானில் வெற்றிபெற்ற திறந்தவெளி சிறை பாணியை பல்வேறு மாநிலங்களிலும் உருவாக்க  உத்தரவிட்டது. இந்த ஆணை செயல்படுத்தப்பட்டால் சிறைக்கைதிகளுக்கு சுதந்திரமான வாழ்வு கிடைப்பதோடு, சிறைத்துறையின்  செலவுகளும் கணிசமாகக் குறையும். இப்போது இந்தியாவிலுள்ள 63 திறந்தவெளி சிறைகளில் 5 ஆயிரத்து 370 கைதிகள் வாழ்கின்றனர்.  நாட்டிலுள்ள மொத்த கைதிகளின் எண்ணிக்கையான 4,19,623-துடன் ஒப்பிடும்போது இது வெறும் 1.28%தான். ராஜஸ்தானில் மட்டுமே 29  திறந்தவெளி சிறைகள் செயல்பட்டு வருகின்றன. மகாராஷ்டிரா, கேரளா, குஜராத், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் திறந்தவெளி  சிறைகள் உண்டு. “அடிப்படை வசதிகளற்ற சிறையில் அடைத்துவிட்டு தண்டனை நிறைவடையும்போது காந்தியாக அவர்கள் வீடு  திரும்புவார்கள் என்று நினைத்தால் அது பெரும் தவறு...” என்கிறார்

சிறைத்துறை ஆராய்ச்சியாளர் சக்கரபர்த்தி. இந்தியாவிலுள்ள சிறைகள் அதிக கைதிகளின் எண்ணிக்கையால் தவித்து வருகின்றன. மேலும்  இவர்களை பாதுகாப்பதற்கான காவலர்களின் பணியிடங்களும் மாநில அரசுகளால் போதுமான அளவு நிரப்பப்படுவதில்லை. இந்நிலையில்  திறந்தவெளி சிறைகளே எதிர்காலத் தீர்வாக இருக்கலாம். காலையிலும் மாலையிலும் கைதிகளின் வருகை பதிவு செய்யப்படும்  நிலையிலும் இங்கிருந்து தப்பித்துச் செல்பவர்களின் எண்ணிக்கை 481 பேர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில்  உள்ளது. இதற்கும்  பிணைக்கான தொகையைக் கட்டமுடியாத வறுமைதான் காரணம். “நீதியின் அர்த்தம் பழிக்குப்பழி அல்ல. சமூகம் கைதிகளை கோபத்துடன்  அணுகினால் வல்லுறவு குற்றங்களுக்காக சிறைக்குச் செல்பவர்கள் தண்டனை முடிந்து வெளியுலகைப் பார்க்கும்போது தீவிர  குற்றவாளியாக மாறியிருப்பார்கள்!” என எச்சரிக்கிறார் ஆராய்ச்சியாளர் சக்கரபர்த்தி.       l

-ச.அன்பரசு