கவிதை வனம்



மந்திரக்குரல்

கோயிலில்
புரியாத மந்திரத்திற்கு
வேண்டிக்கொண்டே
நூறு ரூபாயைத்  
தட்டில் காணிக்கை செலுத்திய
வெள்ளை வேட்டி
வெளியே வருகையில்...
அய்யா... சாமீ
தர்மம் பண்ணுங்கய்யாவின்
விரித்த துணியில்
சட்டைப்பையில்
நோண்டியெடுத்து
ஒரு ரூபாயை
போட்டுவிட்டு நகர்ந்தபோது
வெளிக்கோபுர மாடமெங்கும்
எதிரொலித்தது
கால் வீங்கிக்கிடந்த
அய்யா... சாமீ...யின் குரல்
நீங்க நல்லாருக்கணுஞ் சாமி!

- செ.செந்தில்மோகன்

ஞாபகம்

ஒவ்வொரு நாள்
வயல்காட்டைச் சுற்றி
வரும்போதும்
அப்பாவை
நினைவுபடுத்துகிறது
சோளக் கொல்லை
பொம்மை அணிந்திருக்கும்
சட்டை.
- வி.சுந்தரராஜன்