கழிவுகளை வெளியேற்றும் மிகச் சிறந்த உணவு நுண் பசுந்தழைகள்!



ஹோம் அக்ரி - 2

சரியான ஆரோக்கியம் தரும் உணவு, ஊட்டத்தை அளிப்பதுடன் தேவைஇல்லாத கழிவுகளையும் வெளியேற்ற வேண்டும். இதுவே நாம் நம் கையால் உணவை உற்பத்தி செய்ய முக்கிய காரணம்.  

சரியான உணவு, ஊட்டத்தைத் தருவதோடு உடல் நலத்தை வேறு எப்படி பாதுகாக்கிறது, கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது என்று தெரிந்து கொள்வது, நாம் சரியான உணவை தேர்ந்து கொள்வதற்கும், உணவு முறையை வகுத்துக் கொள்வதற்கும் வழி செய்யும். இதற்கு நம் உடலில் இயற்கையாக என்ன உறுப்புகள், எந்த முறைகளில் கழிவுகளையும் விஷமிகளையும் ஒவ்வாத பொருட்களையும் மாசுக்களையும் வெளியேற்றுகின்றன என்று புரிந்து கொள்ள வேண்டும். கழிவுகளை வெளியேற்றுவதில் மிகச்சிறந்த உணவாக நுண் பசுந்தழைகளை (Micro greens) கொள்ளலாம்.

முளை கட்டிய தானியங்கள் நமக்குப் பரிச்சயமானவையே. இவற்றை இன்னும் சில நாட்கள் வளரவிட்டு இலைகள் தங்களுடைய உண்மையான வடிவத்தை அடைந்தவுடன் அவற்றை அப்படியே தண்டு மற்றும் இலைகளோடு அறுவடை செய்து பயன் படுத்திக்கொள்வதைத்தான் நுண் பசுந்தழை வளர்ப்பு என்கிறோம். ஆனாலும் முளை கட்டிய பயிறுக்கும், நுண் பசுந்தழை வளர்ப்புக்கும் பல வேற்றுமைகள் உள்ளன. முதலில் தானியங்கள் தவிர பல கீரைகளையும், காய்கறி விதைகளையும் நுண் பசுந்தழைகளாக உபயோகப்படுத்தலாம்.

இதற்கு மண் அல்லது வேறு ஆதாரம் தேவை. முளைப்பாரிக்கு மண் தேவையில்லை. நுண் பசுந்தழைகள் முளைகட்டிய பயிரைக் காட்டிலும் அதிக உயிரூட்டமும், உயிர்ச் சத்துகளும் நிறைந்தவை. நுண் பசுந்தழைகள் வளர்க்க பல நல்ல காரணங்கள் உள்ளன. இது மிகச்சிறந்த உயிர் உணவு; கடைகளில் கிடைக்காதது. அறுவடை செய்து பின் சில மணி நேரத்தில் இதை உண்பது முழுப்பலன்களைக் கொடுக்கும். அதனால் இதை நாமே உற்பத்தி செய்வதுதான் நல்லது உற்பத்தி செய்வது மிகவும் எளிது.

வீட்டின் வெளியில் இடம் இல்லாதவர்களும், தோட்டம் இல்லாதவர்களும் சுலபமாக வளர்க்கலாம் மிகக்குறைந்த உற்பத்திச் செலவு; தேவையான பொருட்கள் அனைத்தும் வீட்டில் சாதாரணமாக புழங்கக் கூடியவையே. நாள்தோறும் ஒரு சில நிமிடங்கள் செலவு செய்தால் போதும். இயல்பாக நீங்கள் வசிக்கும் இடத்தில் வளராத பயிர்களையும் வளர்க்கலாம். உதாரணமாக பொதுவாகவே வெப்பமாக இருக்கும் திருச்சியிலும் முட்டைக்கோஸ், காலிஃப்ளவர், லெட்யூஸ் போன்றவைகளை வளர்க்கலாம் எந்தவிதமான ரசாயன இடுபொருள்களும், பூச்சிக்கொல்லிகளும் தேவையில்லை.

நுண் பசுந்தழைகள் உயிருள்ள உணவு வகையைச் (Bio - genic foods) சார்ந்தவை. இதில் அபரிமிதமான அளவில் (வளர்ந்த பயிர்களைக் காட்டிலும் 40 மடங்கு வரை அதிகமான அளவு) வைட்டமின்களும், தாதுக்களும், நுண் தாதுக்களும், சோதனைக்கூடங்களில் அளவிட முடியாத உயிர் வளர்க்கும் சக்தியும், என்சைம்களும் நிறைந்திருக்கின்றன. இவ்வகை உணவுகளைத் தினமும் சேர்த்துக்கொள்வது எண்ணிலடங்கா பலன்களைத் தரக்கூடியது. சரி. நுண் பசுந்தழை வளர்ப்பில் என்னென்ன விதைகளை உபயோகிக்கலாம்?

*    கோதுமை
*    பச்சைப் பயறு
*    உளுந்து
*    கீரை வகைகள்
*    கடுகு
*    வெந்தயம்
*    பார்லி
*    முட்டைக் கோஸ்
*    காலிஃப்ளவர்
*    பட்டாணி
*    முள்ளங்கி
*    வெங்காயம்

வளர்க்கும் முறை:

இவற்றை வீட்டின் உட்புறமே வளர்க்கலாம். சிறிய தட்டுகள், வாளி மூடிகள், ட்ரே போன்ற உயரம் குறைவான ஏதாவது ஒரு பாத்திரத்தில் நல்ல தரமான ஊட்டம் நிறைந்த மண் மற்றும் குப்பை கலந்த கலவையை ஓர் அங்குல உயரத்துக்கு பரப்ப வேண்டும். பிறகு நன்றாக 12 மணி நேரம் ஊற வைத்த விதைகளை நெருக்கமாகப் பரப்ப வேண்டும். பின் அதன் மேல் கொஞ்சம் மக்கிய எரு அல்லது மண்புழு உரம் கொண்டு விதைகள் மறையும் அளவு தெளிக்க வேண்டும். பின்னர் அது நனையும் அளவுக்கு ஒரு நல்ல கைத்தெளிப்பான் மூலமாக நீரை பனி (Mist) போல் தினமும் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

பனி போல் தெளிப்பதால் குறைந்த அளவே நீர் போதுமானதாக இருக்கும். ஆனால், கீழிருக்கும் மண் மிகவும் காய்ந்திருந்தால் மேலே தெளிக்கும் நீரை இழுத்துக் கொள்ளும். அதனால், மண் பரப்பும் போது அதை ஓரளவுக்கு நனைத்துக் கொள்வது நல்லது. காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருந்து தெளித்த நீர் அப்படியே இருந்தால் நாளுக்கு ஒருமுறை தெளித்தால் போதும். சில விதைகள் ஓரிரு நாட்களில் முளைக்க ஆரம்பிக்கும். சில விதைகள் அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளும்.

முள்ளங்கி, கடுகு, பச்சைப் பயறு விதைகள் 2 - 3 நாட்களில் முளைத்து மண்ணிலிருந்து வெளிவரும். மற்றவை ஒரு சில நாட்கள் கழித்து முளைத்து வரும். முழுதாக இலை தன் வடிவம் அடைவதற்கு 10 - 15 நாட்கள் ஆகும். 15 நாட்களுக்குள் அறுவடை செய்யலாம். கொத்தமல்லி விதையை மட்டும், தரையில் தேய்த்து அது பாதியாக உடைந்த பிறகு விதைக்க வேண்டும். விதைகளை வாங்கும் போது அவை பூச்சி, பூஞ்சாணக் கொல்லி கலந்தவையா என்று பார்த்து வாங்க வேண்டும்.

அரசு விதிகளின்படி கிட்டத்தட்ட எல்லா விதைகளுமே ‘திராம்’ போன்ற மருந்துகளால் விதை நேர்த்தி செய்யப்பட்டபிறகே விற்பனை செய்யப்படுகின்றன. இவை கொடிய விஷம் ஆதலால், இவற்றை மிகக்குறுகிய காலப் பயிராக வளர்க்கும் போது நிச்சயமாக பயன்படுத்தக் கூடாது. அதனால் பெரும்பாலான விதைகளை மளிகைக் கடைகளிலேயே சேகரம் செய்வது நல்லது. அப்படி கிடைக்காத விதைகளை விவசாயிகளிடமிருந்தும் பாரம்பரிய விதை சேகரிப்பு தன்னார்வலர்களிடமிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.

(வளரும்)
மன்னர் மன்னன்

நாம் வாங்கும் விதைகள் தரமானவைதானா, மரபணு மாற்றம் (GM Seeds) செய்யப்பட்டவையா என்று எப்படி தெரிந்து கொள்வது?
- அருள்மொழி வர்மன், காட்பாடி.

காய்கறி விதைகளில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் இன்னும் சந்தைக்கு வரவில்லை. கத்திரி மட்டுமே பரிசோதனை முறையில் விளைவிக்கப்பட்டது. ஆனால், பருத்தி விதைகள் மரபணு மாற்றம் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றன. அந்த விதைகளின் கவர்களில் GM seeds என்று குறிப்பிட்டிருக்கும். நீங்கள் முடிந்தளவுக்கு நண்பர்கள், விவசாயிகள், பாரம்பரிய விதை காக்கும் தன்னார்வலர்
களிடமிருந்து விதை வாங்கிக் கொள்வது நல்லது.

என் வீட்டில் வெளியில் ஏதும் வளர்ப்பதற்கான வாய்ப்பு இல்லை. பால்கனியிலும் வெளிச்சம் வருவதில்லை. வீட்டுக்கு உள்ளே வளர்ப்பதற்கு ஏதும் வழிமுறைகள் உள்ளனவா?
- நடராஜன், ஹொஸ்கொடே, பெங்களூர்.

உள்ளன. ஒருசில பயிர்களை செயற்கையான ஒளியில் வளர்க்கலாம். இந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டுள்ள நுண் பசுந்தழைகளை LED செயற்கை ஒளியில் வளர்க்கலாம். ஆனாலும் வீட்டினுள் நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும்.

ஆடிப்பட்டம் தேடி விதை என்று சொல்வார்கள். அப்படியென்றால் மற்ற காலங்களில் எப்படி விதைப்பது? இது வீட்டுத் தோட்டத்துக்கும் பொருந்துமா?  
- கார்த்திகா, சென்னை.

ஒவ்வொரு பயிருக்கும் சிறந்த பட்டம் என்று ஒன்றிருக்கிறது. அந்தப் பட்டத்தில் விதைக்கும் போது அது சிறந்த பலன்களைத் தரும். ஒரே பயிருக்கு பலவிதமான ரகங்கள் இருக்கின்றன. இந்த ரகங்கள் வெவ்வெறு பருவங்களுக்கு என்று உருவாக்கப் பட்டிருக்கின்றன. உதாரணமாக புரட்டாசி பட்டத்திற்கென்றே ஒருசில காய்கறி, தானியங்கள் உள்ளன. இவற்றை மார்கழிப்பட்டத்தில் விதைத்தால் சரியான பலன் தராது. பருவத்தே பயிர் செய் என்று இதைத்தான் கூறுவார்கள்.