ஆர்ஹெச் எனும் அபாய அலாரம்



உடலுக்குள் உணவாகவும் உயிராகவும் ஒவ்வொரு செல்லாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது ரத்தம். இதில் A, B, AB and O என பல வகைகள் உள்ளதை அறிந்திருப்பீர்கள்.

இந்த ஒவ்வொரு ரத்த வகையிலும் உள்ள சிவப்பணுவில் ‘ஆன்டிஜென்’ எனும் புரதம் இருக்கிறது. இதை ஆர்ஹெச் காரணி (Rh factor) என்கிறோம். இந்த ஆர்ஹெச் காரணி கர்ப்ப காலத்தில் ஒரு பெண் மீது எப்படி ஆதிக்கம் செலுத்துகிறது, என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதைத் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமானது.

முதன்முதலில் ‘Rhesus’ எனும் ஒரு வகை குரங்கு மூலம் இந்த விஷயம் கண்டுபிடிக்கப்பட்ட காரணத்தால், சுருக்கமாக இந்தக் காரணிக்கு ஆர்ஹெச் (Rh) என்று பெயர் வைத்துவிட்டனர். ஆர்ஹெச் ரத்த வகையில் இரண்டு விதம் உண்டு.

சிவப்பணுவில் ஆர்ஹெச் காரணியைப் பெற்றுள்ளவர்களின் ரத்தத்தை ஆர்ஹெச் பாசிட்டிவ் (Rh positive) ரத்தம் எனவும், இது இல்லாதவர்களின் ரத்தத்தை ஆர்ஹெச் நெகட்டிவ் (Rh negative) ரத்தம் எனவும் அழைக்கின்றனர்.

குழந்தை பெற்றுக்கொள்ள இருக்கும் ஒரு பெண்ணுக்கு ஆர்ஹெச் நெகட்டிவ் (Rh negative) ரத்தம் இருந்தால், அவள் பெற இருக்கும் குழந்தைக்கு அது ஒரு யுத்தக் களமாகி, அதன் உயிரையே பறித்துவிடக் கூடிய அளவுக்குக் கொடுமையாகிவிடும் என்பதுதான் மிகப் பெரிய சோகம். அதேவேளையில் இந்தியாவில் ஆர்ஹெச் பாசிட்டிவ் (Rh positive) ரத்தம் உள்ளவர்கள் சுமாராக 85% பேர்; ஆர்ஹெச் நெகட்டிவ் (Rh negative) ரத்தம் உள்ளவர்கள் 15% பேர் மட்டுமே என்பதில் சிறிய ஆறுதல்.

என்ன காரணம்? என்ன பிரச்னை?

தம்பதிகள் இருவரும் ஒரே வகை ரத்தம் உள்ளவர்களாக - அதாவது, ஆர்ஹெச் பாசிட்டிவ் ரத்தம் அல்லது ஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தம் என்று இருந்தால் பிரச்னை இல்லை. மனைவியின் ரத்தம் ஆர்ஹெச் நெகட்டிவ் என்றும், கணவரின் ரத்தம் ஆர்ஹெச் பாசிட்டிவ் என்றும் அமைந்து, பிறக்கும் குழந்தைக்கும் ஆர்ஹெச் பாசிட்டிவ் ரத்தமாக அமைந்துவிட்டால், பிரசவ நேரத்தில் சிக்கல் ஆகிவிடும்.

இதைக் கொஞ்சம் விரிவாகவே பார்ப்போம்.
கருவில் வளரும் சிசுவுக்குத் தேவையான உணவு, ஆக்ஸிஜன் போன்ற சங்கதிகள் எல்லாமே ரத்தம் வழியாகத் தாயிடமிருந்துதான் போகின்றன என்று பொதுவாகச் சொன்னாலும், எந்தக் கட்டத்திலும் தாயின் ரத்தச் சிவப்பணுக்களும் சிசுவின் ரத்தச் சிவப்பணுக்களும் கலந்துவிடுவதில்லை. இந்தக் கலப்பைத் தடுப்பதற்குத்தான் நஞ்சுக்கொடி (Placenta) உள்ளது.

பிரசவ நேரத்தில் நஞ்சுக்கொடி வெளியில் வந்துவிடுவதால், இடைப்பட்ட சிறிது நேரத்தில் குழந்தையின் ரத்தமும் தாயின் ரத்தமும் கலந்துவிடுகின்றன.

அப்படிக் கலக்கும்போது, பாசிட்டிவ் நெகட்டிவ் கலப்பு ஒத்துப்போகாது என்பதால் குழந்தையின் ஆர்ஹெச் பாசிட்டிவ் ரத்தம் தாயின் ஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தத்தில் ‘ஆர்ஹெச் எதிரணுக்கள்’ (Rh Antibodies) எனும் ‘வீட்டுப் பாம்பு’களை உற்பத்தி செய்கின்றன.

இந்த எதிரணுக்களை ‘வீட்டுப் பாம்புகள்’ என்று சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. வீட்டில் பாம்பு வளர்த்தால், அது வீட்டுக்காரரை ஒன்றும் செய்வதில்லை.

ஆனால், வீட்டுக்குள் யாராவது நுழைந்தால், அவரை ‘எதிராளி’யாக நினைத்துக் கொத்திவிடும்.  அப்படித்தான், தாயின் ரத்தத்தில் ஆர்ஹெச் எதிரணுக்கள் உற்பத்தியான பிறகு உருவாகும் குழந்தை அந்த ரத்தத்துக்கு ‘எதிராளி’யாகி விடுகிறது.

எனவேதான், கருப்பையில் சிசுவானது தங்கி வளர ஆரம்பித்தவுடன், தாயின் ஆர்ஹெச் எதிரணுக்கள் கொண்ட ரத்தம் சிசுவின் ரத்தத்தை எதிராளியாக நினைத்து, சிசுவின் சிவப்பணுக்களைச் ‘சுனாமி’போல் அழித்துவிடுகிறது. இதன் விளைவாக, சிசுவுக்குக் கடுமையான ரத்த அழிவுச்சோகை(Haemolytic anaemia), மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இவை சிசுவாக அது கருப்பையில் வளரும்போது அல்லது குழந்தையாக பிறந்த பின்பு ஏற்படுகின்றன. இதனால் சில குழந்தைகள் இறந்துவிடுவதும் உண்டு.

எப்போது பாதிப்பு?

தாய்க்கும் சேய்க்குமான இந்த ‘ரத்தக் கலப்பு’ முதல் குழந்தையின் பிரசவ நேரத்தில் நிகழ்வதால், முதல் குழந்தைக்கு மேற்சொன்ன பாதிப்புகள் எதுவும் ஏற்படுவதில்லை. பெரும்பாலும் இரண்டாவது குழந்தைக்குத்தான் இந்தப் பாதிப்புகள் ஏற்படுவது வழக்கம். இந்த நிலைமைக்கு  ‘ஆர்ஹெச் பொருந்தாமை’ (Rh incompatibility) என்பது மருத்துவப் பெயர்.

அதேநேரம், ஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தம் உள்ள பெண்களுக்குக் கீழ்க்காணும் சூழல்களில் ஆர்ஹெச் பாசிட்டிவ் ரத்தத்துடன் கலப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்போது முதல் குழந்தைக்கும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

* தவறுதலாக ஆர்ஹெச் பாசிட்டிவ் ரத்தம் தாய்க்குச் செலுத்தப்படும்    போது.
* கருச்சிதைவு ஆகும்போது.
* கருக்கலைப்பு மேற்கொள்ளும்போது.
* கருப்பையை விட்டு வேறு இடங்களில் சிசு உருவாகும்போது.
* கோரியானிக் வில்லஸ் சாம்பிளிங்,  பனிக்குட நீர்ப் பரிசோதனை போன்ற கருப்பைக்குள் ஊசி செலுத்திப் பரிசோதிக்கும் பரிசோதனைகளின்போது.
* கர்ப்பகாலத்தில் ரத்தப்போக்கு  ஏற்படும்போது.
* முத்துப்பிள்ளை கர்ப்பத்தின்போது.

எப்படி தடுப்பது?

தாயின் உடலில் ‘ஆர்ஹெச் பொருந்தாமை’ ஏற்படுவதைத் தடுத்தால் மட்டுமே குழந்தைக்குப் பாதிப்புகள் உண்டாவதைத் தடுக்க முடியும். அதற்கு தாயின் ரத்தமும் குழந்தையின் ரத்தமும் கலப்பதற்கு வாய்ப்புள்ள பிரசவம், கருச்சிதைவு, கருக்கலைப்பு, கருப்பைக்கு வெளியில் குழந்தை உருவாதல், கர்ப்ப காலத்தில் மேற்கொள்ளப்படும் சிறப்புப் பரிசோதனைகள் ஆகிய நேரங்களில்  ‘ஆர்ஹெச் இம்யூனோகுளோபுலின்’ எனும் மருந்தைத் தாய்க்குச் செலுத்திவிட வேண்டும்.

இது குழந்தையின் ஆர்ஹெச் பாசிட்டிவ் ஆன்டிஜென்கள் தாயின் ரத்தத்தில் ஆர்ஹெச் எதிரணுக்கள் உற்பத்தியாவதைத் தடுத்துவிடுகிறது. இதன் பலனால், குழந்தையின் ரத்தச் சிவப்பணுக்கள் அழிவதும் தடுக்கப்படுகிறது.

    பரிசோதனை அவசியம்!

தாயின் ரத்தத்தில் ஆர்ஹெச் எதிரணுக்கள் ஏற்கனவே உற்பத்தி ஆகாமல் இருந்தால் மட்டுமே ‘ஆர்ஹெச் இம்யூனோகுளோபுலின்’ மருந்தைச் செலுத்துவது பலனளிக்கும். அதனால், அந்த மருந்தைச் செலுத்துவதற்கு முன்பு, கர்ப்பிணியின் ரத்தத்தில் ஆர்ஹெச் எதிரணுக்கள் இருக்கின்றனவா என பரிசோதித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

இதற்கு ‘மறைமுக கூம்ப்ஸ் பரிசோதனை’ (Indirect Coomb’s test) செய்யப்படும். இதன் முடிவு நெகட்டிவ் என்றால், அந்தக் கர்ப்பிணிக்கு ஆர்ஹெச் எதிரணுக்கள் இல்லை என்றும், பாசிட்டிவ் என்றால், ஆர்ஹெச் எதிரணுக்கள் இருக்கின்றன என்றும் பொருள்.

எப்போது பரிசோதனை மேற்கொள்வது?

முதல் டிரைமெஸ்டரில் முதல் செக்கப்புக்கு டாக்டரிடம் செல்லும்போது, கணவர், மனைவி இருவரின் ரத்த ஆர்ஹெச் வகைகளைப் பரிசோதித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். கணவருக்கு ஆர்ஹெச் பாசிட்டிவ் ரத்தம், மனைவிக்கு ஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தம் என்றால், முதல் குழந்தை பிறந்ததும் அதன்  ஆர்ஹெச் வகையைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைக்கு ஆர்ஹெச் பாசிட்டிவ் ரத்தம் என்றால், குழந்தை பிறந்த 24 - 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ‘ஆர்ஹெச் இம்யூனோகுளோபுலின்’ மருந்தைச் செலுத்திவிட வேண்டும். குழந்தைக்கு ஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தம் என்றால் தாய்க்கு இதைச் செலுத்த வேண்டிய அவசியமில்லை.ஒருமுறை இந்த மருந்து செலுத்தப்பட்டால், அது அந்தக் கர்ப்பத்துக்கு மட்டும்தான் பலன் தரும். அடுத்தமுறை கர்ப்பமுற்றால், மறுபடியும் இந்த ஊசி மருந்தைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

கர்ப்பத்தடை செய்துகொள்பவர்களுக்கு பிரசவத்தைத் தொடர்ந்து கர்ப்பத்தடை செய்துகொள்ளும் எண்ணம் உள்ளவர்களுக்கு இந்த மருந்து செலுத்தப்பட வேண்டிய அவசியமில்லை. என்றாலும், அரிதாக சிலருக்கு கருத்தடைமுறை தோற்றுப்போகும்; அப்போது மீண்டும் கர்ப்பமடையலாம் அல்லது பிற்காலத்தில் கருத்தடையை நீக்கிவிட்டு மறுபடியும் கர்ப்பம் அடைய முடிவெடுக்கலாம்.  இம்மாதிரியான சூழல்களில் அப்போது இந்த மருந்தைச் செலுத்த முடியாது. எனவே, பாதுகாப்பாக இப்போதே இந்த மருந்தைச் செலுத்திக்கொள்ளும்படி மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு.

தடுப்பூசி போடப்படவில்லை என்றால்?

ஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தம் உள்ள பெண்ணுக்கு முதல் பிரசவத்தில் முன்னேற்பாடாகத் தடுப்பூசி போடப்படவில்லை; அவருடைய அடுத்த கர்ப்பத்தில் ‘மறைமுக கூம்ப்ஸ் பரிசோதனை’ பாசிட்டிவ் என்றால், கர்ப்பகாலம் முழுவதும் மிகவும் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, கர்ப்பமான 5 மாதங்களுக்குப் பிறகு, சிசுவுக்கு ரத்தசோகை ஏற்படுகிறதா என்பதை அறிய ‘பல்ஸ் டாப்ளர் ஸ்கேன் பரிசோதனை’ அடிக்கடி மேற்கொள்ளப்படும்; ரத்தசோகை இருந்தால், ரத்தப் பரிசோதனை தேவைப்படும்.

ரத்தசோகை கடுமையாக இருந்தால், சில சிறப்பு மகப்பேறு மருத்துவமனைகளில் கர்ப்பப்பையில் வளரும் சிசுவுக்கு ரத்தம் செலுத்தப்படுகிற நவீன சிகிச்சையையும் இப்போது மேற்கொள்கின்றனர்.

இதன் மூலம் சிசுவுக்கு ஏற்படுகிற உயிராபத்தைத் தடுத்துவிடுகின்றனர்.
ஒருவேளை, பிரசவ நேரம் நெருங்கும் காலத்தில்தான் குழந்தைக்கு ரத்தசோகை இருப்பது தெரியவருகிறது என்றால், பிரசவத் தேதிக்கு முன்னரே குழந்தை பிறக்கத் தூண்டப்படுவதுண்டு அல்லது சிசேரியன் அறுவைப்பேறு மேற்கொள்ளப்படுவதுண்டு. அப்படிப் பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை இருந்தால் சிறப்பு நீலவிளக்கொளி சிகிச்சையில் (Phototherapy) அதைச் சரிபடுத்துகின்றனர். வெகு அரிதாக சில குழந்தைகளுக்கு ரத்தம் செலுத்தப்படுவதும் உண்டு.

பயம் வேண்டாம்!

ஆர்ஹெச் நெகட்டிவ் ரத்தம் உள்ள பெண்களுக்குப் பிறக்கும் எல்லா குழந்தைகளுக்கும் இப்பிரச்னைகள் ஏற்படுவதில்லை; சில விதிவிலக்குகளும் உண்டு. எனவே, ‘ஆர்ஹெச் பொருந்தாமை’க்குப் பயப்படத் தேவையில்லை. அதேநேரத்தில், இதில் சிறிது கவனமாக இருந்து, விளைவுகள் மோசமாகாமல் தடுத்துக்கொள்ள வேண்டும் எனும் எச்சரிக்கை உணர்வு இருக்க வேண்டியது முக்கியம்.

(பயணம் தொடரும்)