காதலும்கூட கார்கில் போர்தான்!



தமிழ் சினிமாவில் அவ்வப்போது புது முயற்சிகளாக சில வித்தியாசமான படங்கள் வருவதுண்டு. சிவானி செந்தில் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கார்கில்’கூட அப்படிப்பட்ட படம்தான் என்கிறார்கள். ஜிஷ்ணு நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. தயாரிப்பாளர் எஸ். தாணு பாடல்களை வெளியிட்டார்.

 “கார்கில் என்றாலே கார்கில் போர்தான் நினைவுக்கு வரும். காதலும் அப்படி ஒரு போர் மாதிரிதான். அதனால்தான் ‘கார்கில்’ என்று டைட்டில் வைத்துள்ளேன். நாயகியுடன் ஊடல் கொண்டுள்ள நாயகனின் சென்னை - பெங்களூர் வரையிலான கார் பயணமும் அதில் நடக்கும் நிகழ்வுகளும்தான் மொத்தப்படமும்.

முக்கியமாக, தமிழ்சினிமாவில் புதுவிஷயமாக இந்தப்படத்தில் ஒரே ஒருத்தர் தான் நடித்துள்ளார் அவர்தான் நாயகன் ஜிஷ்ணு. புது முயற்சி என்பதற்காக போரடிக்காமல், முழுக்க முழுக்க பொழுதுபோக்குப் படமாகத்தான் இதை உருவாக்கியுள்ளேன்” என்கிறார் இயக்குனர் சிவானி செந்தில்.

 இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட ‘அய்யனார் வீதி’ பட இயக்குனர் ஜிப்ஸி ராஜ்குமார் இந்த படக்குழுவினரை வாழ்த்தி பேசும்போது, சிறிய பட்ஜெட் படங்கள் இன்று தியேட்டர்களில் என்ன பாடுபடுகிறது என்பதை தனது பட அனுபவத்திலிருந்து மனக்குமுறலாகக் கொட்டினார்.

 “இயக்குனர் சிவானி செந்திலின் மனைவி தான் தயாரிப்பாளராக இறங்கியுள்ளதால் பயப்படுவதாகக் கூறினார். என்னுடைய ‘அய்யனார் வீதி’ படத்தை ரிலீஸ் செய்த சமயத்தில் தான் ‘பாகுபலி’ படம் வெளியானது. இருந்தாலும் எனது தயாரிப்பாளர் படத்தை ரிலீஸ் செய்யும் தைரியத்தை எனக்கு அளித்தார். படம் ரிலீசாகி இரண்டாவது வாரம் போஸ்டர்கள் ஓட்ட ஆரம்பித்துவிட்ட நிலையில் தியேட்டர்காரர்கள், காட்சிகளின் எண்ணிக்கையை குறைக்க ஆரம்பித்தார்கள். சில பேர் இடமில்லை எனக் கூறிவிட்டார்கள்.

இன்றைக்கு தமிழ் சினிமாவில் வாராவாரம் ஐந்து படங்கள் வரை ரிலீசாகிக் கொண்டு இருக்கின்றன. இதனால் நிறைய தயாரிப்பாளர்கள் தெருவிற்கு வந்துகொண்டிருக்கின்றனர். இதுதான் இன்றைய நிலைமை. ஆனால் இதுல எல்லாம் தாக்குப் பிடிச்சு நிற்கிறவன் தான் ஜெயிக்க முடியும். எனக்கு கிடைச்ச அனுபவம் மூலமா இது மாதிரி புது படக்குழுவினருக்கு என்னோட ஆதரவை தர்றதுக்காகத்தான் இந்த விழாவுக்கு வந்தேன்.

 இன்னைக்கு தியேட்டர்காரர்கள்தான் எல்லாத்தையும் முடிவு பண்றாங்க. ரெண்டுநாள் ஓட்டிட்டு மூணாவது நாள் படத்தைத் தூக்கிடுறாங்க. அவங்களை யாரு கேட்கிறது! யாராலேயும் கேட்க முடியாது.. ஏன்னா அவங்க வலுவா இருக்கிறாங்க” என கொட்டித் தீர்த்துவிட்டார்.

- எஸ்