ரேஷ்மி மேனனுக்கு ‘டும் டும் டும்’ கன்ஃபார்ம்!



‘உறுமீன்’ என்கிற படத்தில் பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் ஜோடியாக நடிக்கின்றனர். இந்த ஷூட்டிங்கின் போது இருவருக்கும் பற்றிக் கொண்டது. ஆனால், இதுபற்றி கேட்டபோது இருவருமே தனித்தனியாக மறுத்தனர். இந்நிலையில் திடீரென்று அவர்கள் திருப்பதியில் ரகசிய திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியானது.

இதை மறுத்த பாபி சிம்ஹா வேறுவழியில்லாமல் ரேஷ்மி மேனனை தான் காதலிப்பதை ஒப்புக்கொண்டார். ரேஷ்மி மேனனும் பாபி சிம்ஹாவை காதலிப்பதையும், அவரையே திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் தயங்கித் தயங்கி சொன்னார். இந்நிலையில், அவர்களது திருமண நிச்சயதார்த்தம் சென்னை மயிலாப்பூரில் நடந்தது. மீடியாவை இருவருமே அழைக்கவில்லை.



இந்நிகழ்ச்சியில் ரேஷ்மி மேனனுக்கு பாபி சிம்ஹா மோதிரம் அணிவித்தார். அப்போது இருவீட்டு உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் இருந்தனர். பிறகு ஆர்யா, சித்தார்த், கருணாகரன், இயக்குனர்கள் கார்த்திக் சுப்புராஜ், நாகேந்திரன், பாபி சிம்ஹாவின் சகோதரியும் நடிகையுமான ரேஷ்மா கலந்துகொண்டு வாழ்த்தினர். பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் திருமணம் அடுத்த ஆண்டு நடக்கும் என்றும், இன்னும் தேதி முடிவாகவில்லை என்றும் சொல்லப்பட்டது.

திருமணத்துக்குப் பிறகு ரேஷ்மி மேனன் விரும்பினால் சினிமாவில் தொடர்ந்து நடிக்கலாம் என்று பாபி சிம்ஹா தெரிவித்தார். திரைத்துறையைப் பொறுத்தவரையில், முதலில் பலமாக மறுக்கப்படுகின்ற எல்லா காதல் விவகாரங்களும் பிறகு ரகசியமாகவோ அல்லது பகிரங்கமாகவோ நடந்தேறுகின்றன என்பதை இந்த ஜோடியும் நிரூபித்திருக்கிறது. வாழ்க, வளர்க, மீடியாவின் கணிப்புகள்!

- தேவா