படம் இயக்குகிறார் முத்தழகு!



தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என ஐந்து மொழிகளிலும் பரபரப்பாக நடித்து வந்த பிரியாமணிக்கு திடீரென்று படங்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. கவர்ச்சிக் காட்சிகளுக்கு ‘அதிரடி தள்ளுபடி’ ஆஃபர் அறிவித்தும்கூட இந்த நிலைமை சரியாகவில்லை என்பதால் கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்.

ஏதேனும் பரபரப்பாக கிளப்பிவிட்டால்தான் நிலைமை சரியாகும் என்று நினைத்தவர், தனது மும்பை காதலரான முஸ்தபா ராஜ் என்பவருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோவை ட்விட்டரில் போஸ்ட் செய்து, ‘இவர் தான் என் காதலன். பிற்காலத்தில் இவரைத்தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். உடனே என் திருமணத்தைப் பற்றி வதந்தி பரப்ப ஆரம்பித்து விடாதீர்கள். அடுத்த ஆண்டு எங்கள் திருமணம் நடக்கலாம். அதையும் நானே முறைப்படி அறிவிக்கிறேன். என் திருமணம் ரகசியமாக நடக்காது. அதை ரசிகர்களுக்கு தெரியும்படி நடத்துவேன்’ என்றும் சொன்னார். ம்ஹூம். எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.



பிரியாமணிக்கு நடிப்பைத் தவிர்த்து டெக்னிக்கல் சைடிலும் நல்ல அனுபவம் உண்டு. சில படங்களின் ஷூட்டிங்கில் அவர் சும்மா இருக்கப் பிடிக்காமல், டைரக்டரிடம் சென்று, படத்தை அவர் எப்படி இயக்குகிறார்? கேமரா கோணங்களை எப்படி வைக்கிறார் என்று உன்னிப்பாக கவனிப்பார். எனவே, அவர் மனதில் டைரக்டராக வேண்டும் என்ற ஆசை விஸ்வரூபம் எடுத்துள்ளது. ‘அதென்னவோ தெரியவில்லை.

திடீரென்று எனக்கு படம் இயக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதெல்லாம் சாத்தியமா என்று தெரியவில்லை. அந்தப் படத்தில், ‘நான் ஈ’ சுதீப்பை ஹீரோவாக வைத்து, மென்மையான காதல் கதையை இயக்க விரும்புகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். ‘நடிப்பு இல்லைன்னா டைரக்‌ஷன்’ என்கிற இவரது டெக்னிக், மார்க்கெட் இழந்துபோன மற்ற நடிகைகளுக்கும் தெம்பு கொடுத்திருக்கிறது.

- தேவா