பெண் மைய சினிமா-ஆயிரம் குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவரின் கதை!



உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்ததில் போருக்குப் பெரும் பங்கு உண்டு. மனித குலத்துக்கு முற்றிலும் எதிரான செயல் என்றாலும் இன்னமும் போர் நின்றபாடில்லை. ஏதோ ஒரு மூலையில் இந்த நிமிடம் கூட துப்பாக்கிக் குண்டுகளும், அணுகுண்டுகளும் வெடித்துக்கொண்டிருக்கலாம். அதில் அப்பாவி குழந்தைகளும், பெண்களும் பலியாகலாம்.

உதாரணத்துக்கு இன்றும் நடந்துகொண்டிருக்கும் சிரியா உள்நாட்டுப் போரைச் சொல்லலாம். கடந்த சில வருடங்களாகவே சிரியாவில் போரின் காரணமாக வீட்டையும் உயிரையும் இழந்த ஆயிரக்கணக்கானோரின் புகைப்படங்கள் வெளியாகி பேரதிர்ச்சியை உண்டாக்கி வருகின்றன. அந்தப் புகைப்படங்கள் எல்லாம் போர் நிகழ்த்திய கொடுமைகளின் சிறு துளி தான். உண்மையில் அங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை ‘The Cave’ போன்ற ஆவணப்படங்கள்தான் சாட்சியாக நம் முன் காட்டுகிறது.

யுத்தத்துக்கு நடுவில் உயிரைப் பொருட் படுத்தாமல் தன்னலமற்று பணியாற்றிய ஒரு இளம் பெண் மருத்துவரின் சேவை பயணம் தான் இந்த ஆவணப்படம். போரின் துயரங்களை அருகிலிருந்து பார்த்ததைப் போன்ற ஓர் உணர்வைத் தரும் இதன் கதைக்குள் செல்வோம்.

ஒரு குறிப்பிட்ட வயது வந்தவுடனே திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்று குடும்பத்தைக் கவனிப்பது மட்டுமே பெண்களுக்கு உரியது. வீட்டை விட்டு வெளியே வந்து ஆண்கள் செய்யும் எந்த வேலையையும் அவர்கள் செய்யக்கூடாது, அவர்களுக்குச் சமமாக நடக்கக்கூடாது போன்ற எழுதப்படாத விதிகள் இருக்கும் ஒரு சமூகத்தில் பிறந்தவர் அமானி. ஆம்; அவர் பிறந்த ஊர் சிரியாவில் இருக்கும் கவுட்டா. அவரது சிறுவயது கனவு மருத்துவர் ஆக வேண்டும் என்பது. அதுவும் குழந்தைகளுக்கான மருத்துவர். சுற்றியுள்ளவர்களின் ஏச்சு பேச்சுகளைத் துச்சமாக மதித்து
தன்னுடைய குறிக்கோளை நோக்கி வீறு நடைபோட்டு குழந்தைகளின் மருத்துவராகியவர் அமானி.

யுத்தத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டின்போது தலையில் அடிபட்ட 11 வயது குழந்தைதான் அமானி சிகிச்சை அளித்த முதல் நபர். இதுபோல யுத்தத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளைக் காப்பாற்றியிருக்கிறார். அவரது வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களும் யுத்தத்தின் அவலங்களும் காட்சிக் கோர்வைகளாக திரையில் விரிகின்றன. நாம் கற்பனைக் கூட செய்து பார்க்க முடியாத அவலங்கள் ஒவ்வொன்றாக அரங்கேறுகின்றன. இப்படியெல்லாம் நிகழுமா? இதெல்லாம் மனித செயல்களா? போன்ற கேள்விகளுடன் ஒவ்வொரு காட்சியும் நகர்கிறது.

எந்த நேரமும் போர் விமானம் பறந்துகொண்டிருக்கும் சத்தமும், குண்டு வெடிப்பின் பயங்கரமும், குழந்தைகளின் ஓலமும் கேட்டுக்கொண்டிருக்கும் இடத்தில் ஒரு மருத்துவமனை இருக்கிறது. பெரிதாக எந்த வசதியும் அந்த மருத்துவமனையில் இல்லை. அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்து கூட இல்லாத நிலை. மருத்துவர்களுக்குக் கூட சரியான உணவு கிடைப்பதில்லை. இப்படியான ஒரு மருத்துவமனையை நிர்வகிக்கிறார் அமானி. அவர்களுக்குக் கீழே சில ஆண் மருத்துவர்களும் இருக்கிறார்கள்.

அமானியிடம் சிகிச்சை பெற வரும் ஆண்கள், ‘இங்கு ஆண் மருத்துவர் யாருமே இல்லையா? வீட்டில் இருக்க வேண்டியதுதானே. உங்களுக்கு இங்கே என்ன வேலை?’ என்று ஏளனமாக கேட்கிறார்கள். போர் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் பெண்களின் மீதான அடக்குமுறை என இந்த இரண்டையும் சகித்துக்கொண்டு துணிச்சலுடன் சிகிச்சையளிக்கிறார் அமானி. போரின் தீவிரம் அதிகமாகிறது.

மருத்துவமனையின் மீது குண்டுகள் விழுந்துகொண்டே இருக்கின்றன. கெமிக்கல் குண்டுகள் வேறு குழந்தைகளை பதம் பார்க்கிறது. அடிபட்டவர்களை வரிசையாக அட்மிட் செய்துகொண்டே இருக்கிறார்கள். மருத்துவமனை எங்கும் போரில் அடிபட்ட குழந்தைகளால் நிறைந்து கிடக்கிறது. மருத்துவர்கள்
சிகிச்சையளிக்கும்போது அணுகுண்டுகள் மருத்துவமனையின் சுவர்களை சின்னாபின்னமாக்குகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் நிலைகுலைந்துபோகிறார் அமானி. இருந்தாலும் தன் உயிரைக் காப்பாற்றிக்கொண்டு அவர் வீட்டுக்குத் திரும்பவில்லை.

தன்னை நாடி வருபவர்களுக்குப் பாதுகாப்பாக எப்படி சிகிச்சையளிக்கலாம் என்று யோசிக்கிறார். மருத்துவமனைக்குக் கீழ் ஒரு குகை போல அமைத்து அதில் அடிபட்டவர்களுக்குச் சிகிச்சையளிக்கிறார் அமானி. அப்படி அடிபட்டவர்கள் எல்லோருமே குழந்தைகள் என்பதுதான் பெருந்துயரம். 2016 முதல் 2018 வரை இந்த குகை மருத்துவமனையை அமானி நடத்தியிருக்கிறார்.

இதில்தான் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்குச் சிகிச்சையளித்து உயிரைக் காப்பாற்றியிருக்கிறார். மருத்துவமனை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அணுகுண்டால் தகர்க்கப்படலாம். தன் உயிர் எப்போது வேண்டுமானாலும் போகலாம் என்ற சூழலில்தான் அமானி தொடர்ந்து மருத்துவச் சேவையைப் புரிந்திருக்கிறார்.

இந்த அசாதாரண சேவையைத்தான் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் ஃபெராஸ் ஃபயாத். சிறந்த ஆவணப்படத்துக்கான ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்த ஆவணப்படம் உலகம் எங்கும் பல விருதுகளை அள்ளியிருக்கிறது. போரின் அவலத்தை இவ்வளவு நெருக்கமாக யாரும் படமாக்கியதில்லை என்று விமர்சகர்கள் புகழ்கின்றனர்.

த.சக்திவேல்