பெண்மையையும் தாய்மையையும் பாடி பெயின்ட்



பெண்மைக்கு பெருமை சேர்ப்பது தாய்மை தான்... அந்த தாய்மையை மிக அற்புதமாக உணர்த்தும் வகையில் மகளிர் தினம் மற்றும் அன்னையர் தினம் இரண்டையும் ஒன்றாக இணைத்து கூறும் உடல் ஓவியம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார் மேக்கப் கலைஞர் இளங்கேஸ்வரி.

‘‘சென்னை தான் எனக்கு சொந்த ஊர். 19 வயதிலேயே மேக்கப் மீது அதிக ஆர்வம். அப்போவே முறைப்படி கத்துகிட்டு இந்தத் துறைக்குள்ள வந்துட்டேன். எல்லோர் போலவும் மேக்கப் அழகுக்கலை இதை மட்டுமே வச்சுட்டு வேலை செய்யறது எனக்கு அவ்வளவா பிடிக்கல. ஏதாவது வித்தியாசமா செய்யணும்னு முயற்சி செய்திட்டே இருப்பேன்.

அப்படித்தான் தொடர்ச்சியா ஃபேஷன் ஷோ நடத்தி கின்னஸ் ரெக்கார்ட், அடுத்து கேன்சர் நோய்க்கான விழிப்புணர்வு. அதாவது முழு மேக்கப் ஆனால் தலைமட்டும் மொட்டை அடித்தது போல் ஸ்டைல் செய்து அதையும் யாரும் செய்யாத விதமாக ரேம்ப் வாக் தொடர்ந்து நடத்தி சாதனை புரிந்தேன்.

இப்படி அவ்வப்போது சமூக நிகழ்வுகள்,  சமூகப் பிரச்சினைகள் சார்ந்து மேக்கப்பில் என்னென்ன செய்யமுடியுமோ அத்தனையும் முயற்சி செய்வதுதான் என் பழக்கம். அப்படித்தான் இம்முறை இந்தாண்டு  மார்ச்-8 மகளிர் தினத்தையும், மே 10 அன்னையர் தினத்தையும் ஒன்றாக இணைக்கும் வகையில் ஒரு கர்ப்பிணிப் பெண் அவள் உடலுக்குள் இருக்கும் குழந்தை சகிதமாக பாடி பெயின்ட் மற்றும் மேக்கப் கலையை வைத்து போட்டோ ஷூட் நடத்தினோம்.

பெரும்பாலும் பாடி பெயின்ட் என்றால் வெறுமனே பாடி பெயின்ட்  மட்டுமே பயன்படுத்துவர். ஆனால் இதில் ஆர்ட் வேலைகளும் செய்திருக்கிறோம். சிலிக்கானில் செய்யப்பட்ட குழந்தை மாதிரியை அப்படியே வாங்கி அதில் செட்டு போல அமைத்தோம். வயிற்றுக்குள் குழந்தை எப்படி இருக்கும் என்பதை கூகுள் புகைப்படங்கள் மூலம் ஆராய்ந்து அந்த சிலிக்கான் குழந்தை பொம்மை மேல் இன்னும் கொஞ்சம் பெயின்டிங் வேலைகளை செய்து நுணுக்கமாக உருவாக்கினேன்’’ என்னும் இளங்கேஸ்வரி இந்தியாவில் இன்னும் பாடி பெயின்டிங் குறித்த புரிதல் குறைவாகவே இருப்பதாகச் சொல்கிறார்.

‘‘பாடி பெயின்டிங் ஆர்ட் என்பது இந்தியா தமிழகம் பொருத்தமட்டில் பெரிதாக பிரபலமடையவில்லை. காரணம் நம் கலாச்சாரமும் அதற்கு இடம் கொடுப்பதில்லை. அப்படியே மாடல்கள் சரி என்று சொல்லி வந்தாலும் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள். அவர்கள் எப்படி சொல்கிறார்களோ அப்படித்தான் நாம் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இந்த பாடி பெயின்டிங்கில் எங்களுக்கு மாடலாக கிடைத்த அஞ்சனா என்னை முழுவதுமாக நம்பினார்.

அவரைப் போலவே புகைப்படக் கலைஞர் சேது, எனக்கு என்ன தேவையோ நான் என்ன எதிர்பார்க்கிறேனோ அதை அப்படியே தத்ரூபமாக புகைப்படத்தில் கொண்டுவந்தார். மேலும் அஞ்சனாவின் உடல் பகுதி கூட அதிக அளவில் உடைகள் இல்லாமல் இருந்தாலும் பார்ப்பதற்கு அதிக கவர்ச்சியாகவும் அல்லது முகம் சுழிக்கும் அளவிற்கு இருக்காது. பெண்மையை முழுமை படுத்துவதே தாய்மை தான். இந்த இரண்டையும் இணைக்க நினைச்சேன் அப்படி உருவானது தான். இந்த தாய்மை பாடி பெயின்டிங் போட்டோ ஷூட்’’ என்றார் இளங்கேஸ்வரி.