பெண்களை தாக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்!



கர்ப்பப்பை வாய் புற்றுநோய் எனப்படும் Cervical Cancer, மார்பக புற்றுநோய்க்கு அடுத்ததாக பெண்களை அதிகம் தாக்கக்கூடிய புற்றுநோய்களில் ஒன்றாக உள்ளது. கருப்பையின் கீழ்ப்பகுதியில் இந்த புற்றுநோய் உருவாகும். இந்த புற்றுநோயை ஆரம்பக் காலத்திலேயே கண்டறிய, இந்தியாவிலேயே முதன் முறையாக, சென்னையிலுள்ள அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தில், HPV எனப்படும் Human Papilloma Virus (ஹ்யுமன் பாபிலோமா வைரஸ்) பரிசோதனை மையத்தை ‘ரோஷ் டயக்னாஸ்டிக்ஸ் இந்தியா நிறுவனம்’ ஆரம்பித்துள்ளது.

டி.என்.ஏ சார்ந்த பரிசோதனை, இந்தியாவிலேயே கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கு தொடங்கப்பட்டுள்ள முதல் மூலக் கூறு (Molecular) பரிசோதனை மையம். இதன்  மூலம், கர்ப்பப்பைவாய் புற்றுநோய் வருவதை ஆரம்பநிலையில் கண்டறிந்து குணப்படுத்திவிட முடியும். ‘‘கர்ப்பப்பைவாய் புற்றுநோய் திருமணமான பெண்களை, குறிப்பாக தாம்பத்திய உறவில் இருக்கும் 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களை தான் பாதிக்கும்’’ என்றார் அடையாறு புற்று நோய் சிகிச்சை மையத் தலைவர் முனைவர் வி. சாந்தா.

‘‘பெண்கள் HPV சோதனை செய்து கொள்வதன் மூலம் ஆரம்ப நிலையில்  வைரசை கண்டறிந்து முற்றிலுமாக குணப்படுத்தலாம். தடுப்பூசிகள் நோய் வருவதை தடுக்கும்’’ என்றார். ‘‘கர்ப்பப்பைவாய் புற்றுநோய் பாதிப்பினால் சில அறிகுறிகள் தென்படும்’’ என்றார் அடையாறு புற்றுநோய் மையத்தின் இயக்குநர் டாக்டர் ஜி.செல்வலட்சுமி. ‘‘திருமணத்திற்கு பிறகு தாம்பத்திய உறவின் போது, ரத்தம் வெளியேறுதல், துர்நாற்றத்துடன் வெள்ளை படிதல், மாதவிடாய் நாட்களிலும் மற்ற நாட்களிலும் ரத்தம் வெளியேறுதல், வயிற்று வலி போன்றவை கர்ப்பப்பைவாய் புற்றுநோயின் அறிகுறிகள்.

இந்த அறிகுறிகள் இருக்கும் அனைவருக்கும் புற்றுநோய் என்று  அர்த்தம் இல்லை. மாதவிடாய் பிரச்சனைகள் காரணமாக கூட இருக்கலாம். எந்த பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக பரிசோதனை செய்வது அவசியம்’’ என்றார். HPV வைரஸ் நம் அனைவரின் உடலிலும் இருக்கும். நல்ல செல்கள் அதை தடுத்து பரவாமல் அழித்துவிடும். எப்போது உடலில் ஊட்டச்சத்து குறைகிறதோ இந்த வைரஸ் செல்கள் புற்றுநோயாக உருமாறும். இந்த புற்றுநோய் பெண்களிடம் அதிகளவில் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. 9-10 வயது பெண்கள் தடுப்பூசியை போட்டுக்கொண்டால், கர்ப்பப்பைவாய் புற்றுநோய் வராமல் நூறு சதவீதம் தடுத்துவிடலாம்.

அந்த வயதில் தடுப்பூசி போட தவறினாலும், திருமணம் ஆவதற்கு முன்னரோ அல்லது குறைந்த பட்சம் இப்போதாவது தடுப்பூசி போட்டுக் கொண்டு உடன் பரிசோதனை செய்வது அவசியம். புற்றுநோயைக் கண்டு அஞ்சி ஓடத் தேவையில்லை. முறையாக பரிசோதித்துக் கொண்டால், சுலபமாக குணமடைய செய்யலாம். HPV - டி.என்.ஏ பரிசோதனைகள் வளர்ந்த நாடு களில் மட்டுமே இருந்து வந்தது. இப்போது, சென்னை அடையாறு புற்றுநோய் மையத்தில் அமைக்கப்பட்டு இருப்பது இந்திய பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம். எனவே தோழிகள் அனைவரும், எந்த தயக்கமும், பயமும் இன்றி விரைந்து பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

- க.ஸ்வேதா