தேவதை விளையாட்டு



பெண் மைய சினிமா

ஒரு சிறுமியின் கற்பனையினூடாக  நம்மை இந்த உலகத்திலிருந்து இன்னொரு  உலகத்துக்கு அழைத்துச்சென்று அங்கேயே சிறிது காலம்  தங்கியிருந்ததைப் போன்ற ஓர் அனுபவத்தைத் தருகின்ற படம் ‘Pan’s Labyrinth’. இதுவரைக்கும் வெளியான ஸ்பானிய மொழிப்படங்களில்  முக்கியமானது இது.ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு பாதாள உலகத்தை ஒரு ராஜா ஆட்சி செய்துவந்தார். சூரிய ஒளியே உள்ளே  புகமுடியாத அளவுக்கு அந்த பாதாளம் மிகவும் ஆழமானது. அங்கே வசித்து வந்த மக்கள் செல்வ செழிப்புடனும், மகிழ்ச்சியாகவும்,  மரணமின்றியும் நீண்ட காலம் வாழ்ந்து வந்தார்கள். பூமியிலிருக்கும் பொய், வேதனை, ஏமாற்றம், கவலை, ஊழல், துயரம் போன்ற எந்த  கசப்பான விஷயங்களும் அங்கேயில்லை.

ராஜாவுக்கு அழகான ஒரு மகள் இருந்தாள். அவள் தான் அந்த பாதாளத்தின் இளவரசி. மக்கள் அனைவருடனும் அவள் நெருக்கமாக பழகி  வந்தாள். அதனால் அவள் மக்களின் உண்மையான அன்புக்கு பாத்திரமாக இருந்தாள்.பூமியையும், அங்கே வசிக்கும் மனிதர்களையும் பார்க்க  வேண்டும் என்பது அவளின் நீண்ட நாள் ஆசை. ஆனால், மகளின் ஆசையை நிராகரிக்கிறார் ராஜா. அப்பா தன் ஆசைக்கு  முட்டுக்கட்டையாக இருப்பதை எண்ணி தூங்காமல், சாப்பிடாமல் இருக்கிறாள் இளவரசி.ஒரு நாள் அரண்மனையின் காவலாளிகளை  ஏமாற்றிவிட்டு பூமிக்கு வந்து முதன் முதலாக சூரிய ஒளியைத் தரிசிக்கிறாள் இளவரசி. ஆனால், சூரிய ஒளி இளவரசியின் பார்வையைப்  பறித்துவிடுகிறது. பூமியில் அவளை யாருக்கும் தெரியவில்லை. யாரும் அவளுக்கு உதவ முன் வரவில்லை. சரியான உணவு, ஓய்வு  இல்லாமல் உடல்நிலை பாதிக்கப்படுகிறாள். பூமியில் வாழ்க்கை எவ்வளவு வேதனையானது என்பதை உணர்கிறாள். சில நாட்களில்  இறந்தும் விடுகிறாள்.

மகள் அரண்மனையைவிட்டு வெளியேறிய விஷயம் ராஜாவுக்குத் தெரிய வருகிறது. மகள் எப்படியும் திரும்பி வந்துவிடுவாள் என்று பல  வருடங்களாக காத்துக்கிடக்கிறார். பூமியில் அவள் இறந்து போன விஷயம் கூட அவருக்குத் தெரிவதில்லை. ஒருவேளை மகள்  இறந்துவிட்டால், அவளுடைய ஆன்மா இன்னொரு உடலில் புகுந்து பாதாள உலகத்துக்கு வந்துசேரும் என்று அவர் தீவிர நம்பிக்கையுடன்  தவம் கிடக்கிறார். 100 வருடங்கள் ஓடிவிடுகின்றன. மகள் திரும்பவேயில்லை. அப்போதும் அந்த தந்தை நம்பிக்கையை விடவில்லை.இறந்துபோன இளவரசியின் ஆன்மா ஸ்பெயினில் வசிக்கும் ஒபிலியா என்ற சிறுமியின் உடலுக்குள் வந்து சேர்கிறது. ஒபிலியா பெரிய  புத்தகப் புழு. தேவதை கதைகள் என்றால் அவளுக்கு உயிர். கதையில் சொல்லப்படுவதை எல்லாம் அப்படியே நம்பி வாழ்க்கையில்  செயல்படுத்துபவள். அவளின் தந்தை ஒரு டெய்லர். யுத்தத்தில் இறந்துபோகிறார்.

அவளும், அம்மாவும் தனியாக யாருடைய துணையும் இல்லாமல் வாழ்ந்துவருகிறார்கள். ஒபிலியாவின் தந்தை வழக்கமாக ஒரு ராணுவ  அதிகாரிக்கு யூனிபார்ம் தைத்துக் கொடுப்பார். அந்த அதிகாரிக்கும் ஒபிலியாவின் அம்மாவுக்கும் இடையே காதல் மலர்ந்து இருவரும்  திருமணம் செய்துகொள்கிறார்கள். புதிய தந்தையை ஒபிலியாவுக்குப் பிடிப்பதில்லை. ராணுவ அதிகாரி ஒபிலியாவையும், அவளின்  அம்மாவையும் தன்னுடைய இடத்தில் வந்து தங்கச் சொல்கிறார். அதனால் வலுக்கட்டாயமாக ஒபிலியாவை அந்த இடத்துக்கு அழைத்துச்  செல்கிறாள் அம்மா.அந்த ராணுவ அதிகாரி கடினமான ஆளாக இருக்கிறார். அவரைப் பார்த்தாலே ஒபிலியாவுக்குச் சுத்தமாகப்  பிடிப்பதில்லை. இந்நிலையில் ஒபிலியாவின் அம்மா கர்ப்பமடைகிறாள்.

ஒரு நாள் ஒபிலியாவுக்கு தான் பூமியின் மகள் அல்ல; அதல பாதாள உலகத்தின் இளவரசி என்று தெரிய வருகிறது. ஆனால், தான் ஒரு  இளவரசி என்று நிரூபிக்க மூன்று கடமையை அவள் நிறைவேற்ற வேண்டும். அதை நிறைவேற்றும் போது உயிருக்கு ஆபத்தும்  இருக்கிறது.ஒபிலியா தன் கடமையை நிறைவேற்றி தனக்காக காத்துக்கிடக்கும் தந்தையைச் சந்தித்தாளா? ஒபிலியாவின் அம்மா என்ன  ஆனாள் என்பதே மீதிப்படம்.ஒரு பக்கம் போர். இன்னொரு பக்கம் அமானுஸ்ய கதை. இரண்டையும் இணைக்கும் திரைக்கதை, அற்புதமான  ஒளி, ஒலிப்பதிவுகள், அரங்க அமைப்பு, மேக் அப், கிராபிக்ஸ் காட்சிகள், இசை, ஒபிலியாவின் அப்பாவித்தனம் எல்லாம் படத்தை பலமுறை பார்க்க வைக்கும். காட்சிக் கவிதையாக விரியும் இப்படத்தின் இயக்குனர் டெல் டோரா. போரில் கணவனை இழந்த பெண்ணின்  துயரையும், தந்தையில்லாத மகளின் கடினத்தையும், சிறுமியின் அக உலகத்தையும், விருப்பங்களையும் இப்படம் அற்புதமாக பதிவு  செய்கிறது.

-த.சக்திவேல்