கொலம்பஸ்... கொலம்பஸ்... விட்டாச்சு லீவு!
கோடை விடுமுறை வந்துவிட்டாலே அந்த ஒரு மாதம் குழந்தைகளுக்கு கொண்டாட்டம்தான். ஆனால் அம்மாக்களுக்கோ திண்டாட்டம்தான். குறிப்பாக வீட்டில் இல்லத்தரசியாக இருக்கும் அம்மாக்களைவிட வேலைக்கு செல்லும் அம்மாக்கள்தான் விடுமுறையில் இருக்கும் குழந்தைகளை சமாளிக்க போராடுகிறார்கள். காரணம், இவர்களால் ஒரு மாதம் விடுமுறை எடுக்க முடியாது. அதே சமயம் வீட்டில் குழந்தைகளையும் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட வைக்க வேண்டும்.

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் இல்லாமல் குழந்தைகளை வளர்க்க முடியாது என்ற சூழல். அதே சமயம் ஒரு நாள் முழுதும் அவர்கள் அதில் தங்களின் கவனத்தை செலுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
அம்மாக்களின் நிலமையை புரிந்துகொண்டுதான் சம்மர் கேம்ப் என்று ஒன்று அறிமுகமானது. இதில் குழந்தைகளுக்கு ஓவியம் தீட்டுவது, பாட்டு கிளாஸ், பஜன் கிளாஸ், விளையாட்டுப் பயிற்சி என பல உள்ளன. இவை காலத்திற்கு ஏற்பவும் குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப மாறி வருகின்றன.  இன்றைய குழந்தைகள் ஒரு இடத்தில் அமர்ந்து வண்ணம் தீட்ட விரும்புவதில்லை. அதே சமயம் தங்களின் குழந்தைகள் எப்ேபாதும் போல் வண்ணம் தீட்டுவது போன்றவற்றில் ஈடுபடாமல் புதியதாக ஏதாவது பயிற்சி கொடுக்க வேண்டும் என்பது இன்றைய பெற்றோர்களின் விருப்பமாக உள்ளது. அதன் அடிப்படையில் கோடை விடுமுறையில் உங்களின் குழந்தைகளுக்கான வித்தியாசமான சம்மர் கேம்ப் பயிற்சி பற்றி தெரிந்து கொள்ளலாம்.
கோல்ஃபர்ஸ் எட்ஜ்: இந்தக் கோடையில் சென்னை, ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள கோல்ஃபர்ஸ் எட்ஜ் குழந்தைகளுக்கான சம்மர் கேம்பினை துவங்கிஉள்ளது. ஏழு முதல் 17 வயதுள்ள குழந்தைக்காகவே சிறப்பாக இந்த சம்மர் கேம்பினை அமைத்துள்ளனர். பொதுவாக கோல்ஃப் விளையாட்டு பெரிய மைதானத்தில்தான் விளையாடுவார்கள்.
அதே போன்ற உணர்வினை குளு குளு ஏசி அறைக்குள் குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களும் விளையாட வசதியினை ஏற்படுத்தி தந்துள்ளார் இந்த விளையாட்டு அரங்கின் நிறுவனர் பரத். இது முழுக்க முழுக்க இன்டோர் விளையாட்டு என்பதால் குழந்தைகள் வெயிலில் சிரமப்படுவார்கள் என்று பெரியவர்கள் அச்சப்பட வேண்டியதில்லை.
மேலும் கோல்ஃப் விளையாட தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இதனை எவ்வாறு விளையாட வேண்டும், அதற்கான உபகரணங்கள் என அனைத்தும் இந்த கேம்பில் வழங்கப்படுகிறது. குழந்தைகளின் கவனத்திறன் மற்றும் ஒருங்கிணைப்பை உருவாக்கக்கூடிய அற்புதமான விளையாட்டு.
முதல் பேட்ச் துவங்கிய நிலையில் தற்போது இரண்டாவது பேட்ச் மே மாதம் 13ம் தேதி துவங்க இருக்கிறது. சம்மர் கேம்பிற்கு பிறகும் இந்த விளையாட்டினை விளையாட விரும்பும் குழந்தைகள் மீண்டும் அங்கு சென்று விளையாடவும் பயிற்சி பெறவும் வசதி செய்து தருகிறார்கள்.
ஸ்போர்ட்ஸ் டென்: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவர் மத்தியில் டிரெண்டாகி வருகிறது பிக்கில் பால் என்ற விளையாட்டு. இது டென்னிஸ் போன்ற விளையாட்டு என்றாலும் இதன் விளையாட்டு முறை மற்றும் பயன்படுத்தப்படும் பந்துகள் எல்லாம் வித்தியாசமாக இருக்கும். டென்னிஸ் ஆடுகளத்தை விட இதன் விளையாட்டுத் தளம் சிறியதாக இருக்கும். பேட்மின்டனில் பயன்படுத்தப்படும் பேட் போல்தான் இதற்கான பேட்டும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
துவாரங்கள் கொண்ட பிளாஸ்டிக் பந்தினை கொண்டுதான் இந்த விளையாட்டினை விளையாடுவார்கள். இந்த விளையாட்டு விளையாடுவது சுலபம். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் இதனை விளையாடலாம். சென்னை, கொளப்பாக்கத்தில்
அமைந்துள்ள ஸ்போர்ட்ஸ் டென் என்ற இடத்தில்தான் பிக்கில் பால் விளையாட்டிற்கான சம்மர் கேம்பினை நடத்துகிறார்கள். தனிநபர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவதால், பலரும் இந்த விளையாட்டின் மேல் ஆர்வம் செலுத்த துவங்கியுள்ளார்கள். மேலும் இந்த விளையாட்டினை சம்மர் கேம்ப் மட்டுமில்லாமல் அதன் பிறகும் முறையாக பயிற்சியாகவும் சொல்லித் தருகிறார்கள்.
ரைஸ் அகாடமி: கோடை விடுமுறை என்றால் விளையாட்டு மட்டுமில்லை... இசைக்கும் நேரத்தினை ஒதுக்கலாம் என்கிறார்கள் சென்னை, சாந்தோமில் அமைந்துள்ள இசைப் பயிற்சி பள்ளியான ரைஸ் அகாடமி.
இவர்கள் இசை சார்ந்த அனைத்துப் பயிற்சிகளும் இங்கு அளித்து வருகிறார்கள். இந்த வருட கோடை விடுமுறையில் குழந்தைகளுக்காக கிட்டார் இசைக்கருவியின் பயிற்சியினை வழங்கி வருகிறார்கள். 35 வருடமாக கிட்டார் துறையில் இருந்து வரும் ஜோசப் மாத்யு என்பவர்தான் கிட்டார் பயிற்சியினை அளிக்கிறார்.
இந்த சம்மர் கேம்ப் குழந்தைகளுக்கு மட்டுமில்லை... இசையின் மேல் ஆர்வமுள்ளவர்கள், ஏற்கனவே கிட்டார் வாசிக்க தெரிந்தவர்கள் யார் வேண்டும் என்றாலும் கலந்து கொள்ளலாம். இதில் ராக், ஷ்ரெட் மற்றும் ப்ளூஸ் போன்ற கிட்டார் டெக்னிக்குகளை கற்றுக்கொள்ளலாம். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பயிற்சி அளிப்பதால், குழந்தைகள் இந்த ஒரு மாத பயிற்சியில் கிட்டாரின் பேசிக் கிட்டார் வாசிக்கும் முறைகளை பழகிக் கொள்ள முடியும். மேலும் விருப்பமுள்ளவர்கள் அங்கு தொடர்ந்து பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். வீட்டிற்கும் நேரடியாக வந்து பயிற்சியும் அளிக்கிறார்கள். இந்த சம்மர் கேம்ப் ஏப்ரல் மாதம் தொடங்கி வருகிற ஜூன் மாதம் வரை நடைபெறுகிறது..
நிஷா
வாசகர் பகுதி
வீட்டிலேயே ஃபேஷியல் செய்யலாம்!
முகம் எப்போதும் பொலிவுடன் இருக்க அதனை நாம் முறைப்படி பராமரிக்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு முறையும் அழகு நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதே சமயம் வீட்டிலிருந்தே முறைப்படி ஃபேஷியல் செய்து கொள்ளலாம்.
*ஃபேஷியல் செய்வதற்கு முன்பு முதலில் முகத்தை கிளின்சிங் செய்ய வேண்டும். முகத்தை நன்கு கழுவிவிட்டு ஒரு சிறிய பஞ்சில் பாலைத் தொட்டு முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். அல்லது பாதாம் எண்ணெய் கொண்டும் செய்யலாம்.
*அடுத்து நன்றாக ஸ்கரப் செய்ய வேண்டும். இதற்கு சிறிதளவு சர்க்கரை எடுத்துக் கொண்டு, அத்துடன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து வட்டவடிவில் 3-5 நிமிடங்கள் மென்மையாக முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் முகத்தை நீரில் கழுவி விட வேண்டும். இது முகத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து முகத்திற்கு பொலிவை உண்டாக்கும்.
*வாழைப் பழத்தை நன்றாக அரைத்து அதனுடன் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவிவிட வேண்டும். இது முகத்தை பளபளப்பாக்கக்கூடிய பேஸ் பேக்.
*டோனிங் மற்றும் மாய்சரைசிங் செய்ய வெள்ளரி சாறுடன் எலுமிச்சை சாறு அல்லது ரோஸ் வாட்டரை கலந்து பஞ்சில் நனைத்து முகத்தில் தடவ வேண்டும். இது முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. சருமத்தை மிருதுவாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. இளமையான தோற்றத்தை பாதுகாக்கிறது.
- கே.பிரபாவதி, கன்னியாகுமரி.
|