பசியால் இறக்கும் குழந்தைகள்!



ஏமனின் ஹஜ்ஜா நகரில் குழந்தைகள் எலும்பும் தோலுமாக பெற்றோர்களின் கண்முன்னே பசியால் துடித்து இறந்து வருகின்றனர். உலகறிந்த காரணம், சவுதி அரேபியாவின் இரக்கமற்ற போர்வெறி. உள்நாட்டுச் சந்தையில் உள்ள காய்கறிகள், ரொட்டியைக் கூட வாங்கமுடியாத வறுமையில் ஏமன் நாட்டு மக்கள் தவித்து வருகின்றனர்.
அலி அல் ஹஜாலியின் கண்முன்னே அவரது மூன்றுவயது மகன் பசியால் இறந்ததும் அப்படித்தான். ஹூதிபுரட்சியாளர்கள் வடக்கு ஏமனைக் கட்டுபாட்டில் வைத்துள்ளனர். அவர்களை எதிர்த்து நடக்கும் போரில் வீசப்படும் ஏவுகணையால் பல நூறு மக்கள் பலியாகி வருகின்றனர்.  

உணவுக்கு அரசை நம்பியுள்ள எட்டு மில்லியன் ஏமன் நாட்டு மக்களின் எண்ணிக்கை விரைவில் 14 மில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. நாடு முழுவதும்  4 லட்சம் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடி வருகின்றனர். 2 மில்லியன் டாலர்களை ஏமன் மத்திய வங்கிக்கு அரபு அமீரகத்துடன் இணைந்து அளித்துள்ளதாக சவுதி கூறியது. சன்னி- ஷியா இனவெறுப்புக்கு ஏதுமறியாத மக்கள் பலியாகவேண்டுமா என்ற கேள்விக்கு சவுதி அரேபியா என்ன பதில் சொல்லப்போகிறது?