பறக்கப் பயின்ற கதை!



சராசரியாக ஒரு கண்டு பிடிப்புக்கு எத்தனை ஆண்டுகள் ஆகும்?
- எஸ்.ரஜத், 9ம் வகுப்பு, மகாத்மா பள்ளி, மதுரை.

சில கண்டுபிடிப்புகள் சீக்கிரமே முடியும். சிலவற்றுக்கு பல ஆண்டுகள் ஆகும். 10 ஆண்டுகள், 100 ஆண்டுகள்... ஏன் 1000 ஆண்டுகள் செலவான கண்டுபிடிப்புகள் கூட உண்டு. ஒவ்வொரு கண்டுபிடிப்பாளரும் ஒரு புதிய சிந்தனையைச் செலுத்தி, பழையதிலிருந்து கொஞ்சம் முன்னேறுவார்கள். இப்படி பழங்காலம் தொட்டே தொடர்ந்து வந்த ஆராய்ச்சியின் பலன்தான் இன்றைய ஆகாய விமானம்!

ரைட் சகோதரர்கள்தான் விமானத்தைப் படைத்தார்கள் என்று நாம் நினைக்கிறோம். 1903 டிசம்பர் 17 அன்று ரைட் சகோதரர்கள் வெற்றிகரமாக நிகழ்த்திய முதல் பறத்தலுக்கு முன்பே, பலர் பறக்க முயன்றிருக்கிறார்கள்.

 இறக்கைகளைக் கட்டிக்கொண்டு பறக்க முயன்று உயிரை விட்டிருக்கிறார்கள். பறக்கப் பயின்ற கதை நீண்ட நெடுங்காலத்துக்கு முன்பே தொடங்கிவிட்டது. அபுல் காசிம் அப்பாஸ் பின் ஃபிர்னாஸ் என்ற அரேபியர் கொஞ்சம் கிறுக்குத்தனம் பிடித்த கண்டுபிடிப்பாளர்.

சத்தம் என்பது அவருக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால் அவருடைய அறையிலேயே இடி-மின்னலை உருவாக்கும் இயந்திரத்தை உருவாக்கினார்! ‘பறத்தல்’ பற்றியும் நிறைய சோதனைகள் செய்தார். கி.பி. 875ல் ஒரு நாள் பருந்தின் சிறகுகளை தன் உடலில் ஒட்டிக்கொண்டு, ஒரு கோபுர உச்சியிலிருந்து குதித்தார். அப்பாஸ் கொஞ்ச தூரம் பறந்து, பிறகு கீழே விழுந்ததாக சில பார்வையாளர்கள் சொன்னார்கள். வால் இல்லாததால் அவர் கீழே விழுந்ததாக இன்னும் சிலர் கருதினார்கள்.

உயிரிழப்புகள் தொடர்ந்தாலும் பறக்கும் ஆசை மட்டும் குறையவே இல்லை. கி.பி.1000 ஆண்டில் ஒரு ஈரானியர் பறக்க முயன்று இறந்தார். ஒரு இங்கிலாந்துக்காரர் இரண்டு கால்களையும் உடைத்துக் கொண்டார். அப்போதெல்லாம் நம்மைப் போல இன்னொருவர் பறக்க முயன்று தோற்றிருக்கிறார் என்ற தகவல் கூட மற்றவருக்குத் தெரியாது. பறவைகளைப் பார்த்து பறக்கும் ஆசையும் அதிகமாகிக் கொண்டே வந்தது. இன்று மொட்டை மாடியில் நின்றால், அரை மணி நேரத்தில் எத்தனை விமானங்களைப் பார்க்க முடியும்!

பூமியின் உள்பகுதியில் நிறைய தாதுக்கள் உள்ளதாமே... அவற்றை எடுத்துப் பயன்படுத்த முடியாதா?- ர.கவின், 10ம் வகுப்பு, கணபதி பள்ளி, சென்னை-24.

பூமியின் உள்பகுதியில் இரும்பும் நிக்கலும் ஏராளம். அங்கே அவை கொதிநிலையில் இருப்பதால் வாயுக்கள் வெளியாகும். இதனால் அங்கிருக்கும் காந்தக்குழம்பு லேசாகி புறப்பகுதியை நோக்கித் தள்ளப்படும். மிகுந்த அழுத்தத்தில் அடைபட்டுக் கிடக்கும் இந்தக் காந்தக்குழம்பின் சேட்டையால்தான் பூமியின் மேலடுக்குகள் நகர்கின்றன.

விரிந்து பரந்த பெருங்கடலின் மேல் மிதந்து நகருமே பெரிய பனிப்பாறைகள்... அது போலவே பூமியின் பாறைத் தட்டுகள் தட்டுகின்றன. அதுதான் நிலநடுக்கம்.இப்போது சொல்லுங்கள்... பூமியின் உள்பகுதியில் உள்ள தாதுக்களை எடுக்கலாமா?