3 முக்கியமான பழக்கங்கள்!
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது மிகவும் அவசியம். இருப்பினும் நமக்கான நேரத்தை உருவாக்குவது கடினமாகி வருகிறது. இதன்காரணமாக உடல்பருமனில் தொடங்கி உடலில் பல நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. எனவே, எந்த வேலை இருந்தாலும் காலையில் சிறிது நேரத்தை நமக்காக ஒதுக்கி வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைச் செய்தால் ஆரோக்கியமாக வாழலாம்.
 ஆயில்புல்லிங்
பழங்காலத்தில் ஆயில்புல்லிங் செய்து உடலில் ஏற்படும் பல பிரச்னைகளை நீக்கி வந்தனர். ஆயுர்வேதத்திலும் இதைச் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆயில்புல்லிங் செய்வதால் வாயில் உள்ள பாக்டீரியா மற்றும் துர்நாற்றம் நீங்கும். ஈறு வீக்கம் இருக்காது. உடலில் நச்சுத்தன்மை சேராது. உடலுக்கும் நல்ல ஆற்றல் கிடைக்கும்.
செய்முறை
ஒரு தேக்கரண்டி எள்ளு எண்ணெய் (நல்லெண்ணெய்) அல்லது தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றிக் கொண்டு பின்னர், 5 முதல் 20 நிமிடங்களுக்கு நன்கு நுரை வரும் வரை கொப்பளித்து உமிழ்ந்துவிட வேண்டும்.
எச்சரிக்கை
ஆயில்புல்லிங் செய்யும்போது எண்ணெயை விழுங்கி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அந்த எண்ணெயில் நிறைய பாக்டீரியாக்கள் இருக்கும். அது வயிற்றுக்குள் சென்றால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
இரண்டு கிளாஸ் தண்ணீர்
தினசரி தூங்கி எழுந்ததும் பல் தேய்த்து சுத்தம் செய்த பிறகு, வெறும் வயிற்றில் 2 கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உடலின் உறுப்புகளை நீரேற்றமாக வைத்து இருக்க இது உதவுகிறது. மற்றும் சரியாகச் செயல்பட ஊக்குவிக்கிறது.
நீர் உயிரணுக்களுக்கு ஊட்டச்சத்துக்களை எடுத்துச் சென்று நச்சுகளை நீக்குகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியைப் பலப்படுத்துகிறது மற்றும் நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் உதவுகிறது. இது முகத்திற்குப் பளபளப்பைக் கொண்டு வருகிறது மற்றும் முடி ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது. ஊறவைத்த பருப்புகள்
பருப்புகளைத் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடும்போது தீங்கு விளைவிக்கும் என்சைம்கள் அகற்றப்பட்டு மற்றும் அதில் உள்ள ஊட்டச்சத்துகள் அதிகரிக்கும். இவற்றில் கொழுப்பு அமிலங்கள். ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள், கார்போஹைட்ரேட் அமினோ அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளன.
இவற்றை சாப்பிடுவதால் பல நோய்களிலிருந்து விலகி இருப்பது மட்டுமின்றி, சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியமும் அதிகரிக்கிறது. எனவே, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கியமான இந்த மூன்று பழக்கங்களை கடைபிடிப்பது அவசியமாகும்.
- கவிதா பாலாஜிகணேஷ்
|