தரமற்ற கிருமிநாசினிகளால் வரும் தர்மசங்கடம்!



 எச்சரிக்கை

‘‘கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக இப்போது நிறைய கிருமிநாசினிகள் விற்பனையாகி வருகின்றன. அடிக்கடி கை கழுவும் பழக்கம் தற்போது மக்களிடையே அதிகரித்திருக்கிறது. இந்த தருணத்தில் கிருமிநாசினி பயன்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்’’ என்று எச்சரிக்கிறார் சரும நல மருத்துவர் கார்டிலியா பபிதா.

‘‘கைகளை சுத்தப்படுத்துவது, வீட்டைத் தூய்மைப்படுத்துவது இன்றைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானதாக இருக்கிறது. கைகளுக்காக நிறைய சானிட்டைஸர்கள் விற்கப் படுகின்றன. அதேபோல் வீடு, அலுவலகம் போன்றவற்றைத் தூய்மைப்படுத்த Floor cleaners, Glass cleaners, Dish wash cleaners போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம்.
ஆனால், அவற்றிலுள்ள வேதிப்பொருட் களானது நேரடியாகவும், மறைமுகமாகவும் நமது சருமத்துக்கும், உடல் உறுப்புகளுக்கும் பாதிப்பை அளிக்கிறது. இந்த பாதிப்புகள் அதில் அடங்கியுள்ள வேதிப்பொருட்களின் அளவைப் பொறுத்து உடனடியாகவோ அல்லது நீண்ட கால ஆரோக்கிய சீர்கேடுகளையோ நமக்கு உருவாக்குகிறது.    

பொதுவாக, இயற்கையாகவே நம் சருமத்தில் எண்ணெய்த்தன்மை இருக்கிறது. இப்படியாக சானிட்டைஸர்/சோப் அதிகமாக பயன்படுத்தும்போது நம் சருமத்தில் இருக்கும் எண்ணெய்த் தன்மை குறைய ஆரம்பிக்கும். சருமத்தில் இருக்கும் எண்ணெய்த்தன்மை குறையும்போது மென்மையான தோலிலிருந்து(Soft skin) உலர்ந்த சருமம்(Dry) அல்லது கடினமான சருமமாக(Rough skin) மாறும் நிலைக்கு நம் சரும ஆரோக்கியம்
தள்ளப்படுகிறது.

நிலத்தில் தண்ணீர் தன்மை இல்லாமல் காய்ந்து காணும்போது எவ்வாறு வெடிப்பு ஏற்படுகிறதோ, அதேபோன்று சருமத்தில் எண்ணெய்த்தன்மை குறையும்போது வெடிப்பு ஏற்பட காரணமாகும்.

அதுவும் முதலில் விரல் முனையில் வெடிப்பு ஏற்பட ஆரம்பிக்கும். இது ப்ளீச்சிங் பவுடர், டிஷ் வாஷ் அல்லது ஃப்ளோர் க்ளீனர் அடிக்கடி பயன்படுத்துவோருக்கும் கூட சருமத்தில் உள்ள இயற்கையான எண்ணெய்த்தன்மை குறைந்து உலர்ந்த அல்லது கடினமான, சருமப் பிரச்னை உருவாக காரணமாகிறது.

இதுபோன்ற வெடிப்பைத் தவிர்க்க கைகளை கழுவிய பிறகு துண்டால் அழுத்தி துடைக்காமல், ஒத்தி எடுத்து மாய்ஸரைசர் லோஷன் -ஐ தடவ வேண்டும். மாய்ஸரைசர் லோஷனை தற்போது யாரும் பயன்படுத்துவதைவிட மாய்ஸரைசர் க்ரீம் அல்லது ஆயின்மென்ட் பயன்படுத்தலாம். அப்படி வீட்டில் எதுவும் இல்லையென்றால் தேங்காய் எண்ணெய் அல்லது வாசனை இல்லாத சமையல் எண்ணெயை கையில் தடவி பயன்படுத்திக் கொள்ளலாம்.

வாஸலினில் பெட்ரோலியம் ஜெல்லி சேர்க்கப்பட்டிருப்பதால் கையில் தடவிக் கொள்வதற்கு சுலபமாக இருக்கும். சிலருக்கு வாஸலின் தடவுவதால் கை பிசுபிசுப்பாக இருப்பதுபோல் உணர்ந்தால், அது அவர்களுக்கு  பிடிக்காத பட்சத்தில் மாய்ஸரைசர் க்ரீம் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி பயன்படுத்துவதால் பாக்டீரியாக்கள் எதுவும் சருமத்தைத் தாக்காமல் இருக்கும் வகையில், பாதுகாப்பிற்கு வழிவகுக்கிறது.

கொரோனா பிரச்னையைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் தரமற்ற கிருமிநாசினிகள் விற்பனை செய்யப் படுவதாக பிரிட்டன் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இதுகுறித்து International of journal pharmaceutics இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில், கொரோனா நோய்த்தொற்றிலிருந்து தப்புவதற்காக உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் கிருமி நாசினிகளை வாங்கி வருகின்றனர்.

எனினும், பார்ப்பதற்கு அசல் கிருமிநாசினிகளைப்போல் தோற்றமளித்தாலும் அவற்றில் பல தரமற்றவையாக இருக்கின்றன. எனவே கிருமிநாசினிகள் வாங்கும்போது மிகுந்த கவனம் தேவை என்று பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.’’

- அ.வின்சென்ட்