சர்க்கரையை கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான்



மூலிகை ரகசியம்

சிறுகுறிஞ்சான் செடி என்றால் சிலருக்கு மட்டுமே தெரியும். அதுவே ‘சர்க்கரைக் கொல்லி’ என்ற பெயரைப் பலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். சர்க்கரை நோய் அதிகமாகிவிட்ட காலத்தில் சிறுகுறிஞ்சான் செடிக்கும் மவுசு ஏற்பட்டிருக்கிறது. இதன் மருத்துவ குணங்கள் என்னவென்று தெரிந்துகொள்வோம்...

 சிறுகுறிஞ்சானின் தாவரவியல் பெயர் Gymnema sylvestris என்பதாகும். அஸ்கெல்பியாடேசே(Asclepiadaceae) தாவர குடும்பத்தைச் சார்ந்தது. கொடியாக படரும் தாவரமான சிறுகுறிஞ்சானின் இலை சிறியதாகவும், இலையின் நுனி கூர்மையானதாகவும் இருக்கும்.  சிறுகுறிஞ்சான் ரத்த சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது. இது தினமும் இன்சுலின் ஊசி போடும் டைப் 1 சர்க்கரை நோயாளியின் நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

 எல்லா இந்திய மருத்துவ முறைகளிலும் இந்த மூலிகைக்கொடி மூட்டுநோய், இருமல், அல்சர் மற்றும் கண்களில் வலி ஆகிய நோய்களுக்கான மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படுகிறது. அழற்சி(Inflammation), வயிற்று மந்தம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலைக்கு மருந்தாகப் பயன்படுகிறது. வேர்கள் பாம்பு கடிக்கு மருந்தாகும். இதன் இலைகளில் உள்ள டிரைடர்பினாய்ட்(Triterpenoid) மற்றும் சப்போனின்ஸ்(Saponins) கலவையாகும். மேலும் Gynemic Acid 1,2,3 மற்றும் 4 ஆகியவற்றுடன் Gymnemagenin மற்றும் Gymnestegenins காணப்படுகிறது.

 சிறுகுறிஞ்சான் இலைகள் அத்துடன் சம எடை அளவு நாவற்கொட்டைகள் எடுத்து இரண்டையும் தனித்தனியாக நிழலில் உலர்த்தி, தனித்தனியாக இடித்து, தூளாக்கி, சலித்து, ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு 1 டீஸ்பூன் அளவு தூளை வாயில் போட்டுக் கொண்டு வெந்நீர் அருந்தி வர வேண்டும். இதை தொடர்ந்து 40 நாட்கள் வரை காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வர நீரிழிவு நோய் கட்டுப்படும்.
 ஒரு சில பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படுவதில் சிக்கல் ஏற்படும். மாதவிலக்கு சரியாக ஏற்பட ஒரு கைப்பிடி சிறுகுறிஞ்சான் இலைகளுடன், 2 கைப்பிடி அளவுகளா இலைகளையும் சேர்த்து, நன்றாக மைய அரைத்து, பசையாக்கி, தினமும் காலை வேளைகளில் வெறும் வயிற்றில் ஒரு நாள் மட்டும் உட்கொள்ள மாதவிலக்கு குறைபாடுகள் நீங்கும்.

 ஆஸ்துமா, வீஸிங் போன்ற சுவாச நோய்கள் மற்றும் இதர நுரையீரல் நோய்கள் தீரவும்,  சிறுகுறிஞ்சான் வேர்த்தூள் ஒரு சிட்டிகை மற்றும் மிளகு, திப்பிலி கலந்து தயாரித்த தூள், அத்துடன் திரி கடுகு சூரணம் ஒரு சிட்டிகை கலந்து வாயில் போட்டு, வெந்நீர் குடித்து வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து காலை, மாலை வேளைகளில் 7 நாட்கள் வரை செய்ய நல்ல குணம் தெரியும்.

 காய்ச்சல் தீர 10 சிறுகுறிஞ்சான் இலைகளுடன், 5 மிளகு, ½ டீஸ்பூன் சீரகம் சேர்த்து, நசுக்கி, ½ லிட்டர் நீரில் இட்டுக் கொதிக்கவைத்து, கஷாயமாக ஒரு மணி நேரத்திற்கு இரண்டு டீஸ்பூன் வீதம் குடித்து வர மிக விரைவிலேயே காய்ச்சல் நீங்கும்.

 ஒரு சிலருக்கு உடலில் இருக்கிற நிண நீர் சுரப்பிகளின் அதீத உணர்வு தன்மையாலும், சாப்பிட்ட உணவின் நஞ்சுத்தன்மையாலும்(Food poison) ஒவ்வாமை(Allergy) ஏற்படுகிறது. இந்த ஒவ்வாமையை உடனடியாக சரி செய்யாவிடில் உடல்நலத்தை பாதிக்கும். ஒவ்வாமை நஞ்சு வெளிப்பட சிறுகுறிஞ்சான் வேரைக் காய வைத்து தூள் செய்து வைத்துக்கொண்டு, ஒரு டீஸ்பூன் அளவு சாப்பிட்டால், சீக்கிரத்தில் வாந்தி ஏற்பட்டு, ஒவ்வாமை ஏற்படுத்திய நஞ்சுத்தன்மை வெளியேறிவிடும்.

 நெஞ்சில் சளி கட்டிக்கொள்ளும்போதும், கடுமையான காய்ச்சல் வரும்போதும் இருமல் ஏற்பட்டு பாடாய் படுத்தும். கடுமையான இருமல் குணமாக, சுத்தம் செய்து, நன்கு நசுக்கிய 20 கிராம் சிறுகுறிஞ்சான் வேரை, ஒரு லிட்டர் நீரில் போட்டு, 100மி.லி.யாகச் சுண்டக் காய்ச்சி, வடிகட்டி வைத்துக்கொண்டு 30 மி.லி. அளவு, காலை, மதியம், மாலை வேளைகளில், ஒரு நாள் மட்டும் குடிக்க வேண்டும். இதை செய்வதால் விரைவில் கடுமையான இருமல் குறையும்.

 மன அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து இல்லாத உணவுகள் சாப்பிடுவதால் நரம்புகள் தளர்ந்து நரம்புத்தளர்ச்சி, வாதம் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாகின்றன. சிறுகுறிஞ்சான் இலைகளை பொடி செய்து, கலந்து சாப்பிடுபவர்களுக்கு நரம்புகள் வலிமை பெற்று நரம்புத் தளர்ச்சி
குறைபாடுகளை நீக்குகிறது.

 சிறுகுறிஞ்சான் இலைகளை கஷாயம் செய்து அருந்தி வருபவர்களுக்கு நல்ல பசி தூண்டப்பட்டு, உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. கடுமையான கோடை காலங்கள் மற்றும் இதர காரணங்களால் ஒரு சிலருக்கு உடல் வெப்பம் அதிகரித்து பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சிறுகுறிஞ்சான் இலைகளை  செய்து, கஷாயமாக காய்ச்சி, ஆற வைத்து அருந்துபவர்களுக்கு உடல் சூடு தணிந்து, உடல் குளுமை அடையும்.

 உடலில் வாதம், பித்தம், கபம் என்கிற முக்குணங்கள் சமமாக இருக்க வேண்டும். இதில் அதிக நேரம் கண் விழிப்பதாலும், பித்தத்தை அதிகரிக்கிற உணவுகளை அதிகம் சாப்பிடுவதாலும் உடலில் பித்தத்தன்மை அதிகரித்து பல பாதிப்புகளை உண்டாக்குகிறது. சிறுகுறிஞ்சான் இலைகளை காயவைத்து, பொடியாக்கி இளம் சூடான நீரில் கலந்து அருந்துபவர்களுக்கு பித்தம் உடனடியாக நீங்கும்.

 தற்போது அதிக கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுவதாலும் மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கும் Fatty Liver  என்று சொல்லப்படும் வீக்கம் வருகிறது. இதற்கு சிறுகுறிஞ்சான் வேர் நல்ல மருந்து.

தொகுப்பு: உஷா நாராயணன்