ரெடிமேட் உணவுகள் வேண்டாமே...



எச்சரிக்கை

இன்றைய நவீன அவசர வாழ்வுக்குத் தகுந்ததாக இருக்கிறது Ready to Eat என்கிற உடனே சாப்பிடத் தகுந்த உணவுகள். சூப்பர் மார்க்கெட்டுகளிலும், ஃபுட் கோர்ட்டுகளிலும் விதவிதமான இந்த ரெடிமேட் உணவுகள் நம்மை ஈர்க்கும் வகையில் கவர்ச்சிகரமான பாக்கெட்டுகளில் இருப்பதைப் பார்க்கிறோம்.

அவற்றை வாங்கி வந்து வீட்டிலும் அடுக்கிவிடுகிறோம். ஃப்ரிட்ஜில் ஸ்டோர் பண்ணி வைத்துக் கொண்டால், எப்போது வேண்டுமோ, உடனே எடுத்து வெந்நீர் அல்லது பால் கலந்து அப்படியே எடுத்து சாப்பிடலாம். சமைப்பதும் எளிது... சுவையும் அதிகம் என்பதால் இதனை பலரும் விரும்புகிறார்கள். ஆனால், இத்தகைய ரெடிமேட் உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

Ready to eat வகை உணவுகளை ஆரம்ப காலத்தில் பாதுகாப்பு பணியில் உள்ளவர்கள், பேரழிவு காலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மீட்புப்பணியில் ஈடுபடுபவர்கள், மலையேற்ற வீரர்கள், நடைப்பயணம் மேற்கொள்பவர்கள் மற்றும் வேட்டையாடுபவர்கள் பயன்படுத்தினர். ஆனால், எப்போதும்  ஓடிக்கொண்டிருக்கும் நகர மக்களிடையே இப்போது இந்த உணவுகள் இப்போது பிரபலமாகிவிட்டன.

பிஸி ஷெட்யூலுக்கு நடுவே உணவை தவிர்க்க வேண்டிய சூழலில் இருக்கும்போது, தங்களுடைய பசியை சமரசம் செய்து கொள்ளத் தயாராக இல்லாதவர்களுக்கு வேண்டுமானால் ரெடிமேட் உணவுகள் வசதியாக இருக்கலாம். ஆனால் சினிமா, பார்க், பீச் என எங்கு சென்றாலும் அங்கே கடைகளில் விற்பதை வாங்கி சாப்பிடுவதோ, வெளியூரில் தங்கியிருப்பவர்கள் சோம்பேறித்தனத்தால் இவற்றை சாப்பிடுவதோ தவறான
செயல்.

ஏனெனில், ஒன்று, முழுவதுமாக சமைக்காமல், பாதி சமைத்த உணவை அடைத்து விற்கிறார்கள் அல்லது நீண்டநாள் பாதுகாத்து வைக்கவும், ஃப்ரெஷ்ஷாக இருக்கவும், அந்த உணவுகளில் ரசாயனங்கள் கலந்த ப்ரசர்வேடிவ்ஸ்களை சேர்க்கிறார்கள். இதுதவிர, தேவைக்கு அதிகமான உப்பு, சர்க்கரை, காரம், மசாலா வகைகளையும் சேர்த்திருப்பார்கள். இதனால், இவற்றை அடிக்கடி உண்ணும் மக்களுக்கு உயர் ரத்த அழுத்தம், இதயநோய்கள், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன.  

- என்.ஹரிஹரன்