ஆட்டிஸம் அலர்ட்



கவுன்சிலிங்

கருவுற்ற பெண்கள் ஹார்மோன் சார்ந்த ஏராளமான மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். இதன் விளைவாக கர்ப்பப்பையில் வளரும் குழந்தையும் அந்த மாற்றங்களுக்கு ஆளாகிறது. அதனால், இந்த காலகட்டத்தில் மருத்துவருடன் தொடர்ச்சியான கவனிப்பில் இருப்பதும், ஆலோசனைகள் பெற்று எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொள்வது நலம் தரும்.

ஆட்டிஸம் என்கிற மன இறுக்கம் கருவில் இருக்கும்போதே குழந்தையை பாதிக்கிறது என்று நவீன ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே, இதனை மனதில் கொள்ள வேண்டியது அவசியம் என்கிறார்’’ மகப்பேறு மருத்துவர் நித்யா ராமமூர்த்தி. ஆட்டிஸம் வராமல் தடுக்க கர்ப்பிணிகள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றி கேட்டோம்....

‘‘ஆட்டிஸம் கருவுற்ற காலத்தின்போது உருவாகிறது என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். கருவுற்ற காலத்தின்போது உயர் ரத்த அழுத்தம் அல்லது அசாதாரண ரத்தக்கசிவு ஆகியவற்றோடு சிசேரியன் முறையிலான பிரசவம் அல்லது மிக முன்னதாகவே ஏற்படுகிற குறை பிரசவம் போன்ற சிக்கல்களும் ஆட்டிஸம் பாதிப்பிற்கான இடரை அதிகரிக்கின்றன.

ஆட்டிஸம் (மதியிறுக்கம்)

என்பது, ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் சீர்கேடு என அழைக்கப்படுகிற தொடர்புடைய நிலைகளின் ஒரு பெரிய குழுவின் ஓர் அங்கமாகும். ஆட்டிஸம் ஏற்படுவதற்கான துல்லியமான காரணங்கள் இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. ஆட்டிஸம் தோற்றத்தின் அடிப்படையில் பிரதானமாக மரபணு சார்ந்ததாகும். எனினும், தாய்க்கும், கருவில் வளரும் குழந்தைக்கும் பிரசவத்திற்கு முந்தைய நிலையில் ஏற்படுகிற பிற வெளிப்பாடுகளின் அதிகரித்து வரும் பட்டியல் இதனை பாதிக்கக்கூடும்.

கருவுற்ற காலத்தின்போது ஒவ்வொரு நிமிடமும் சுமார் 250,000 நியூரான்களை வளர்கருவில் மூளை உற்பத்தி செய்வதால் குழந்தை வளரும் ஆரம்பநிலை சூழலான கருவகம் மிக மிக முக்கியமானதாகும். இந்த செயல்முறையியல் குறுக்கீடு செய்கிற அனுபவங்கள் வளர்ச்சியடைந்து வருகின்ற மூளையில் நீண்ட காலம் நீடிக்கும் வகையில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.

கர்ப்ப காலத்தின்போது இடம்பெறுகிற பல்வேறு கூறுகளோடு ஆட்டிஸம் இணைந்திருப்பதாக ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. தாயின் உணவுமுறை, அவள் உட்கொள்ளும் மருந்துகள் மற்றும் அவளது மனநலம், நோய் எதிர்ப்பு திறன் மற்றும் உயர் ரத்த அழுத்தநிலை மற்றும் கருவுற்ற காலத்தில் ஏற்படுகின்ற நீரிழிவு ஆகியவை உட்பட, வளர்சிதை மாற்ற நிலைகள் இதில் உள்ளடங்கும்.

கர்ப்ப கால நீரிழிவு இருக்கிற பெண்கள் கருவுற்ற காலத்தின்போது மனநல சிகிச்சைக்கான மருந்துகளை உட்கொள்ளும்போது குழந்தைக்கான ஆட்டிஸ அபாயம் இரு மடங்காக அதிகரிக்கும். குருதி உறைதல் சீர்கேடு, கருப்பையக வளர்ச்சி மந்தம், தன் எதிர்ப்பு நோய்கள், தாய்மை சார்ந்த உடற்பருமன் மற்றும் பிரசவத்திற்கு முந்தைய வைரஸ் தொற்று பாதிப்பு ஆகியவை பிற இடர் காரணிகளாக இருக்கின்றன.  

தாய் சுவாசிக்கிற காற்றின் தரம் மற்றும் அவள் வெளிப்படுத்தப்படுகிற பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவையும் இந்நோய்க்கான இடரை விளைவிக்கக்கூடும் என்று பிற ஆரம்பகட்ட ஆய்வுகள் சுட்டிக்காட்டுகிறது. பிரசவ சிக்கல்கள் மற்றும் பிரசவ நேரம் ஆகியவையும் இதில் ஒரு பங்கை ஆற்றக்கூடும் என்று சில ஆய்வுகள் கருத்து தெரிவிக்கின்றன.  

கருத்தரித்த பிறகு முதல் சில நாட்கள் உட்பட, கருவுற்ற காலம் முழுவதும் நிகழ்கின்ற நிகழ்வுகளோடு ஆட்டிஸம் தொடர்புடையதாக இருக்கிறது. கருவுற்ற காலத்தின் மூன்று பருவங்களில் கடைசி மூன்று மாதங்கள் என்ற காலமானது, குழந்தையின் உடல் எடை மற்றும் அளவில் கணிசமான வளர்ச்சி ஏற்படுகிற காலமாகும்.

எனினும், மிக முக்கியமான மூளை வளர்ச்சி என்பது, முதல் மற்றும் இரண்டாவது பருவ காலத்தின்போது நிகழ்கிறது. இந்த ஆரம்ப கருத்தரிப்பு காலத்தின்போது, முக்கியமான மூளைத்தண்டு இயக்கமுறைகள், அதன் பிறகு ஏற்படும் மூளை வளர்ச்சியின் அடித்தளமாக
அமைகின்றன.

இதுவரை செய்யப்பட்டுள்ள ஆராய்ச்சி, கருவுற்ற காலத்தில் முதல் மற்றும் இரண்டாவது பருவ காலத்தின்போது ஏற்படுகின்ற நிகழ்வுகளோடு ஆட்டிஸம் ஏற்படுவதற்கான அதிகரித்த இடர் இருப்பதாக மிக வலுவாக சுட்டிக்காட்டுகிறது. பேச்சு, மொழி அல்லது தசை இயக்க திறன்வளர்ச்சியில் ஏதாவது தாமதங்கள் காணப்படுமானால், அதற்கு உடனடியாக மருத்துவ சோதனையும் மற்றும் உரிய சிறப்பு மருத்துவ நிபுணரின் சிகிச்சை ஆலோசனையும் (பேச்சு, இயக்கமுறை, உடல்சார்ந்த, இன்னபிற) அவசியமாகும்.  

இரும்புச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு ஆட்டிஸம் ஏற்படுவதற்கான ஐந்து மடங்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக 2014-ம் ஆண்டில் American journal of epidemiology மேற்கொண்ட ஆய்வு கண்டறிந்தது. ஒரு தாய் 35 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுள்ளவராக அல்லது உடற்பருமன், உயர் ரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு போன்ற வளர்சிதை பாதிப்பு நிலையை கொண்டிருப்பாரானால், இந்த இடரானது அதிகரிக்கிறது.

ஆண் குழந்தைகளுக்கு ஆட்டிஸம் ஏற்படுவதற்கு நான்கு மடங்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. ASD இருக்கிற ஒரு குழந்தையைக் கொண்டிருக்கின்ற குடும்ப வரலாறு இருக்குமானால், அக்குடும்பத்தில் இதே சீர்கேட்டுடன் மற்றொரு குழந்தை பிறப்பதற்கான அதிக இடர் இருக்கிறது.

நோய் தடுப்பு மருந்துகளுக்கும், ஆட்டிஸத்திற்கும் இடையே இருக்கும் தொடர்பு குறித்து சமீபத்தில் சர்ச்சை எழுந்தது. எனினும், நோய்தடுப்பு மருந்தின் காலாவதி தேதி குறித்து உரிய கவனம் எடுக்கப்படுமானால், இந்த கருத்தாக்கம் தவறானது என்று சான்றுகள் வெளிப்படுத்தியுள்ளன.

ஒரு பெண்ணின் ஆரோக்கியமானது, அவளது குழந்தையின் நல்ல உடல்நலத்திற்கு அத்தியாவசியமானதாகும். பிரசவத்திற்கு முன்பு குறித்த காலஅளவுகளில் உரிய பரிசோதனைகளுடன் சேர்த்து நன்றாக உணவு உட்கொண்டு, தவறாது உடற்பயிற்சி செய்கிற பெண்களுக்கு கர்ப்பகாலத்தின் போது சிக்கல்கள் ஏற்படுவதற்கு குறைவான வாய்ப்புகளே இருக்கும். கர்ப்ப காலத்தின்போது ஊட்டச்சத்துள்ள உணவு உட்கொள்வதற்கும் கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சி, ஆரோக்கியமான பிறப்பு எடை ஆகியவற்றிற்கும் பிணைப்பு இருக்கிறது.

குழந்தை பிறக்கும்போது ஏற்படுகின்ற பல்வேறு இடர்பாடுகளை இது குறைக்கிறது. நல்ல ஊட்டச்சத்து, உணர்வுகளின் ஏற்ற இறக்கத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. அத்துடன் இயல்பான நல்ல பிரசவம் நடைபெறும் வாய்ப்பையும் இது அதிகரிக்கிறது.  ரத்தசோகைக்கான இடர்களையும்  களைப்பு மற்றும் காலை நேர அசௌகரியம் போன்ற கருவுற்ற கால பிற விரும்பத்தகாத அறிகுறிகளையும் சமச்சீரான உணவு உட்கொள்ளல் குறைக்கும்.’’

- ஜி.ஸ்ரீவித்யா