இயற்கையிடம் இருக்கிறது எல்லாவற்றுக்குமான தீர்வு!



கொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு...

இயற்கையோடு இரண்டறக் கலந்ததாக நம் வாழ்வு இருந்தவரை காமம் உற்சாக ஊற்றாகி நம்மை மகிழ்வித்தது. நம் வாழ்க்கைச் சூழல் இயற்கையில் இருந்து விலகி இயந்திரமயமானதன் விளைவாக இன்று காமமும் உலர்ந்து போயுள்ளது.

இயல்பான தாம்பத்ய உறவுக்கு ஏற்ற மனநிலையை உண்டாக்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டிய நிலைக்கு இன்றைய நவீன வாழ்க்கை நம்மைத் தள்ளியுள்ளது. Data-வின் பின்னால் நாம் சுழல ஆரம்பித்த பிறகு ஆணும் பெண்ணும் தனித்தனி உலகங்களாக விலகி நிற்கின்றனர்.

முன்பு இருவரும் ஒன்றாக இணைந்து உழைத்து, களைத்து, குளித்து பிறகு உற்சாகமாய் இணைந்து உணவுண்டு காதல் கொண்டு, சீண்டி ஊடலில் தொடங்கிக் காமத்தில் கலந்தனர். இன்று வெவ்வேறு இடங்களில் வேலை... அதனால் இருவருக்குமான ஓய்வு நேரங்களும் வேறு என மாற காமம் தேய்ந்து கட்டெறும்பாகி விட்டது.

இந்நிலை மாறி காமம் என்பது வளர்பிறையாகி பிரகாசிக்க இயற்கையோடு இணைந்ததாக நம் வாழ்வை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார் சித்த மருத்துவர் காசிப்பிச்சை. தாம்பத்ய வாழ்க்கை இனிமையாக மாறுவதற்குத் தேவையான பாரம்பரிய வழிமுறைகள் பற்றி இங்கே விளக்குகிறார்.

‘‘இலையில் பச்சையம் தயாரிக்க சூரிய ஒளி தேவை. அது போலக் காமம் கொள்ளும் உயிர்களின் உடலில் உயிர்த் தயாரிப்புக்கான தகுதி பெறச் சூரிய ஒளி அவசியமாகிறது. இன்றைய தலைமுறை வெயிலையே பார்க்காமல் வளர்கிறது. வியர்க்காமல் வேலை பார்ப்பதையே எல்லாரும் விரும்புகின்றனர். எளிய வாழ்வில் வெயிலில் வேலை பார்க்கும் எளிய மனிதர்களுக்குத் தாம்பத்ய உறவில் பெரிய பிரச்னைகள் எழுவதில்லை. வெயிலே பார்க்காமல் வளர்பவர்களின் தாம்பத்ய வாழ்வில் புதுப் பிரச்னைகள் உருவாகிறது.

வெயில் படும் படி வளரும் செடிகள் பூக்கும் தன்மையைப் பெறுகின்றன. மரத்தின் அடியில் வாழும் தாவரங்கள் பூக்கும் காய்க்கும் தன்மையை இழக்கின்றன. மனிதர்களின் இன விருத்திக்கு அவர்களது உடலுக்கு சூரிய ஒளி தேவைப்படுகிறது. ‘காலையில் கல்லில் நட... மாலையில் புல்லில் நட’ எனும் பழமொழி இதையே வலியுறுத்துகிறது. காலை நேரம் கற்களால் கட்டப்பட்ட கோயில் பிராகாரங்களைச் சுற்றி வந்தபோது அவர்கள் உடலுக்குத் தேவையான சூரிய ஒளி கிடைத்தது.

அதேபோல பாலுணர்வுத் தூண்டலுக்கு நிலவொளியும் அவசியமாகிறது. பாலியல் ஹார்மோன் சுரப்பினைத் தூண்டும் வேலையினை சூரிய ஒளியும், நிலவொளியும் செய்கிறது. இதனால் காலை சூரிய ஒளியில் நடைப்பயிற்சி செய்வது பலனளிக்கும். காமத்தைத் தூண்டுவதில் தண்ணீருக்கும் பிரதான பங்குண்டு. வெந்நீரில் குளிப்பது காமத்துக்கு எதிரானது. குளிர்ந்த தண்ணீரில் குளிப்பதன் மூலம் ரத்த ஓட்டம் சீராவதுடன் காமத்துக்கான நரம்புத் தூண்டலும் சிறப்பாகும்.

ஓர் ஆணுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை 80 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை இருக்க வேண்டும். கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரம் வரை குறைந்துவிட்டது. குறைந்தபட்சமான 80 ஆயிரத்துக்கும் கீழ் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது மலட்டுத்தன்மைக்கு முக்கியக் காரணம் ஆகிறது. இந்திய சுதந்திரத்துக்குப் பின் இந்தியர்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றமே இந்த
எண்ணிக்கைக் குறைவுக்குக் காரணம்.

ஓடும் ஆற்றுநீரில் எலக்ட்ரோ மேக்னடிக் பவர் உள்ளது. ஓடும் ஆற்றுத் தண்ணீரில் குளித்த காலத்தில் இந்த எலக்ட்ரோ மேக்னட்டிக் பவர் உடலில் உள்ள பாலுணர்வு ஹார்மோன்களைத் தூண்டியது.  வெயிலோடும், நிலவோடும், ஆற்றோடும் விளையாடி வாழ்ந்த காலங்களில் காமம் கொண்டாடுவதில் மனித இனத்துக்குப் பெரிய சிரமங்கள் இருந்ததில்லை. பக்கெட் தண்ணீரில் குளிக்கும் வாழ்க்கையில் இது போன்ற பலன்கள் கிடைப்பதில்லை. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ஆற்றுத் தண்ணீரில் குளிப்பதும் நல்லது.

Sexual depression பிரச்னைக்கு முக்கியமாக இருப்பது வெண்மைப் புரட்சிக்குப் பின் நாம் குடிக்கும் பால். இது காமத்தை மெல்லக் கொல்லும் விஷமாகச் செயல்படுகிறது. பால் உற்பத்தியைப் பெருக்குவதற்காக பால் சுரப்பை அதிகரிப்பதற்காக கொடுக்கப்படும் Oxytocin நம் உடலிலும் வேலை செய்கிறது. சிறு வயதில் பெண்கள் பூப்பெய்துதல், மாதவிலக்குப் பிரச்னைகள், கரு கலைதல், சீக்கிரமே மாதவிலக்கு நிற்றல், கருப்பைப் பிரச்னைகள், கருப்பைக் கட்டிகள், புற்று நோய்க்கான  வாய்ப்புகள் அதிகரிப்பு போன்ற பிரச்னைகளைப் பெண்கள் சந்திக்கின்றனர்.

ஆண்களின் குழந்தையின்மைப் பிரச்னைக்கும் ரசாயனக் கலவையான பால் ஒரு முக்கிய காரணம் ஆகிறது. எலும்புத் தேய்மானம் மற்றும் மூட்டுவலிக்கும் ரசாயன பால் குடிப்பது ஒரு காரணம் ஆகிறது. நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைப்பதுடன் இதய நோய்க்கான வாய்ப்புக்களையும் அதிகரிக்கிறது. சிறுநீரகத்தில் அதிகப்படியான கால்சியம் சேர்ந்து கல் உருவாவதற்கும் இந்தப் பால் காரணம் ஆகிறது.

அந்தக் காலத்தில் 90 வயது வரையிலும் ஆண்கள் ஆரோக்கியமாக இருந்தனர். பால் மற்றும் இன்றைய உணவு முறைகளால் 30 வயதிலிருந்தே செக்‌ஸுவல் டிப்ரஷனுக்கு ஆளாகின்றனர். இதுவே குடும்பங்கள் உடைவதற்கும் காரணம் ஆகிறது. பிராய்லர் கோழி, மற்றும் முட்டையும் காதல் உணர்வைக் குறைத்து மலட்டுத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.

வீடுகளில் வளர்க்கப்பட்ட நாட்டுக் கோழி மற்றும் சேவலுக்கு இடையில் காதல் இனப்பெறுக்கம் எல்லாம் இருந்தது. இன்றைய பிராய்லர் கோழிக்கு கத்தவும் தெரியாது; காதல் கொள்ளவும் தெரியாது. இனப்பெருக்கமும் செய்யாது. இந்தக் கோழியை பலவகையான உணவுகளாக இன்றைய தலைமுறை அதிகளவில் சாப்பிடுகிறது. தொடர்ந்து இதனைச் சாப்பிடுவதால் காதல் உணர்வு குறைவதோடு காமமும் மந்த நிலையை எட்டும்.

மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்களும் தாம்பத்யத்துக்கும், குழந்தைப் பேற்றுக்கும் எதிரானது. தினை, வரகு, அவரை என நமது மண்ணில் மரபோடு வளர்ந்த தானியம் காய்களை உண்ட போது பாலுணர்வு தொடர்பான குறைபாடுகள் பெரும்பாலும் இருந்ததில்லை.
பசுவின் நெய்யை உணவில் பயன்படுத்துவதன் மூலம் பாலியல் வாழ்வின் ஆயுளை அதிகரிக்கச் செய்ய முடியும். நல்லெண்ணெய், உளுந்து ஆகியவையும் ஆரோக்கியமான பாலியல் வாழ்வுக்கு உதவுகிறது.

தாம்பத்யத்தின்போது காம உணர்வு விரைவில் குறைவதாகத் தெரிந்தால் அவர்கள் கருஞ்சீரகத்தை சிறிதளவு வாயில் போட்டு ஊற வைத்து அந்த எச்சிலை விழுங்கினால் விரைவில் இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியும்.

தாம்பத்ய உறவின்போது விரைவாகவே விந்து வெளியேற்றம் ஒரு சிலருக்கு ஆகலாம். இவர்கள் 4 வில்வம் இலையை வாயில் போட்டு மென்று தின்னலாம் அல்லது வில்வ இலையைப் பொடியாக்கி எடுத்துக் கொள்ளலாம். கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகளில் இருந்து வெளியில் வர பெண்கள் கருஞ்சீரகம் உட்கொள்ளலாம். பெண்களுக்கு காம உணர்வு குறைவாக இருந்தால் சங்குப் பூவை மருந்தாகப் பயன்படுத்தலாம்.

தம்பதியர் இயற்கையான உணவு முறையுடன் வாழ்க்கைச் சூழலையும் எளிமையாக மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். காதல் கொள்வதற்கான மன நிலையை இயற்கையே அளிக்கிறது. இதமான இயற்கைச் சூழலில் வாழ்வைக் கொண்டாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துங்கள்.

புதிய இடங்களும், புதிய அனுபவங்களும் காமத்தின் புதிய எல்லைகளுக்கு அழைத்துச் செல்லும். ஒன்றில் ஒன்றை ஒளித்துத் தொலைத்து, தேடிக் கண்டு பிடித்து பரிசளித்துப் பரவசப்படுத்தும் போதெல்லாம் ஆண்மையின், பெண்மையின் புதிய அர்த்தங்களை தரிசிக்கும் அந்தத் தருணம் எல்லா இணைகளுக்கும் வாய்க்கட்டும். மிச்சம் இன்றித் தேடிக் கொண்டாடுங்கள். காமம் தித்திக்கும்!

( Keep In touch...)

எழுத்துவடிவம்: கே.கீதா