நான்காம் தொழில்புரட்சியில் கல்வி, வேலைவாய்ப்பு!



டெக்னாலஜி

கணினி உலகில் தலைசிறந்தவர்கள் என்பதை இந்தியர்கள் தொடர்ந்து நிரூபித்து வருகிறோம். பொருளாதார ரீதியாக நாம் வளம் பெற இணையம், எலெக்ட்ரானிக் தொழில்நுட்பத்தில் மேலும் சிறந்து விளங்க வேண்டும். இளைஞர்கள் தங்கள் தனித்திறன்களை வளர்த்து 4-வது தொழில்புரட்சிக்கு தயாராக வேண்டும். அதற்கு மனிதவளம் மட்டும் போதாது. அறிவுசார்ந்த கல்வி, திறன் சார்ந்த நுட்பமும் வேண்டும். அதற்கு அடிப்படையான நுணுக்கமான தொழில்நுட்ப வளர்ச்சியைப் பற்றி பார்ப்போம். G என்பது தலைமுறை என்றழைக்கப்படும் GENERATION. முதன்முதலாக அறிமுகமான 0-G தொலைத்தொடர்பு சேவைக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட ஒவ்வொரு தலைமுறை தொலைத்தொடர்பு சேவைக்கும் தனித்தனி பெயரிடப்பட்டன.

1G, 2G, 3G, 4G, 5G என்ன வித்தியாசம்?

முதன்முதலில் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தப்பட்ட மொபைல்போன் சேவைதான் 1G சேவை. 1980களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சேவையானது அனலாக் சிக்னல்கள் மூலம் ஒருவருடன் ஒருவர் ஒயர் இல்லாமல் பேசும் வசதியை மட்டுமே உருவாக்கிக் கொடுத்தது. முதன்முதலில் அமெரிக்காவில் இந்த சேவை அறிமுகமானது. 1G சேவையைப் பயன்படுத்திய அலைபேசிகள் அளவு மிகப்பெரியது. குறைந்த பேட்டரி சேமிப்புத்திறன். 1991-ம் ஆண்டு பின்லாந்தில் 2G சேவை தொடங்கப்பட்டது. ஒயர் இல்லாமல் இணைய வசதியைப் பயன்படுத்தக்கூடிய இதில் போனில் தொடர்புகொண்டு பேசலாம்,

குறுஞ்செய்திகளை (SMS) அனுப்பலாம், படங்கள் மற்றும் வீடியோக்களை (MMS) அனுப்பலாம், சிம்கார்டு களைப் பயன்படுத்தலாம். 2001-ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் 3G சேவை அறிமுகமானது. வீடியோகான்ஃப்ரன்ஸ் வசதி, ஜி.பி.எஸ். வசதி, ஒயர் இல்லாத வேகமான இணைய சேவை போன்றவை 3G மூலமாகவே அறிமுகப்படுத்தப்பட்டன. 2009-ம்ஆண்டு தென்கொரியாவில் 4G சேவை அறிமுகமானது. அதிவேக இணைய வசதி, துல்லியமான வீடியோகால்கள், நொடிப்பொழுதில் இ-மெயில் அனுப்புவது, லைவ்ஸ்ட்ரீமிங், மொபைல் டி.வி என தொலைத்தொடர்பு உலகத்தையே மாற்றி அமைத்தது 4G சேவை.

5G சேவை அறிமுகமான பிறகு, இணையம் மூலம் நடக்கும் தகவல் பரிமாற்றத்தில் எழுபது விழுக்காட்டிற்குமேல் வீடியோவால்தான் நடைபெறும். அனைத்து தகவல்களும் கிளவுட் வசதியில் சேமிக்கப்படும். எனவே, மெமரிகார்டு, பென்டிரைவ் போன்ற சாதனங்கள் தேவையற்றுப்போகும். சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் கண்காணிப்பு என்பது சிலநொடிகளில் நடந்துமுடியும். சமீபத்தில் நடந்துமுடிந்த உலக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5G சேவை அறிமுகமாகியிருக்கிறது. இணையமும் மொபைலும் கம்ப்யூட்டரும் இணைந்த வளர்ச்சியே 4-வது தொழில்நுட்பப் புரட்சிக்கு அஸ்திவாரம் என்பதால்தான் 1G முதல் 5G வரை விரிவான விளக்கத்துக்குக் காரணம்.

4-வது தொழில்நுட்பப் புரட்சி

4-வது தொழில்புரட்சியை வடிவமைப்பதில் இந்தியா முக்கியமான பங்குவகிப்பதாக உலக பொருளாதார மன்றத் தலைவர் போர்க்ப்ரெண்டே கருத்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் மக்கள்தொகையில் பாதிக்கும் அதிகமானோர் 27 வயதுக்கு உட்பட்ட இளம் உழைப்பாளிகள். உலகிலேயே ஆங்கிலம் அதிகம் பேசும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு இரண்டாவது இடம். இணையப் பயன்பாட்டின் மூலம் அறிவை வளர்த்துக்கொள்வதில் இந்தியர்கள் பேரார்வம் காட்டி வருவதாகவும், 4-வது தொழில் புரட்சியான செயற்கை நுண்ணறிவு மூலமான தொழில்நுட்பப் புரட்சியை வடிவமைப்பதில் இந்தியா முக்கியப் பங்குவகிக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

4-வது தொழில்புரட்சியின் அடிப்படை?

தகவல் பரிவர்த்தனை, இணையத் தொடர்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகள் மூலம், நான்காவது தொழில் புரட்சி உருவாகியுள்ளது. மொபைல், இணையம், மேகக் கணினி தொழில்நுட்பம் இவைதான் நான்காவது தொழில்புரட்சிக்கான அஸ்திவாரம். தகவல் பரிவர்த்தனைஇந்தியர்களிடம் தேவைக்கும் அதிகமாகவே உள்ளது. அது, ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவை வளமாக்கும்.‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தில், இந்தியா வேகமாக முன்னேறிவருகிறது. சர்வதேச அளவில், மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒவ்வொன்றும், இந்தியாவை உற்றுநோக்குகின்றன.

4-வது தொழில்புரட்சியில் உச்சம் என்னவாக இருக்கும்?

மூன்றாம் தொழில்புரட்சியின் நீட்சியே நான்காம் தொழில்புரட்சி. இதில் கீழ்க்காணும் தொழில்நுட்பங்கள் புதுவரவுகளாலும், இவற்றில் சில ஆய்விலும், இன்னும் சில முன்பே அறிமுகப்படுத்தப்பட்டும் உள்ளன.

* Internet of Things (IOT)
* Big Data
* Nano Technology
* Robatics
* Quantum computing
* Bio Technology
* 3D printing
* Artificial Intelligence

Internet of Things (IOT)

வீடுகளிலும், அலுவலகங்களிலும் உள்ள சாதனங்களில் பொருத்தப்பட்டுள்ள எலக்ட்ரானிக்ஸ், சென்சார், இணைய தொடர்பு மற்றும் சாஃப்ட்வேர்கள் மூலம் அவை ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு செயல்படவும், அவற்றை நாம் உலகில் எங்கோ ஒரு இடத்தில் அமர்ந்துகொண்டு இயக்கவும் பயன்பெறவும் முடியும். இதை Internet of Things (IOT) எனலாம். இந்தத் தொழில் நுட்பம் கணக்கற்ற தகவல்களைக் குவிக்கின்றது. இந்த நுட்பம் நான்காம் தொழில்புரட்சிக் காலத்தின் முக்கியமான வளர்ச்சியாகும்.

BIG Data

நம் பெயர், வயது, பாலினம், குடும்பம், இருப்பிடம் இவற்றுடன் நாம் விரும்பும் விளையாட்டு, சாப்பாடு, ஆடைவகை,நம் பொழுதுபோக்கு, நம் திறமை, நம் நண்பர்கள், விரோதிகள், நாம் ரசிக்கும் நடிகைகள்/நடிகர்கள், நமக்குப் பிடித்த பாடல் மற்றும் திரைப்படங்கள், நாம் அடிக்கடி செல்லும் உணவகம், தியேட்டர் என நம்மைப் பற்றி நுணுக்கமான விஷயங்களையும் சேகரித்து வைத்துக்கொண்டு இன்னென்ன குணாதிசயங்கள் கொண்ட நமக்கு என்ன பிசினஸ்/வேலை பொருத்தமாக இருக்கும், எப்படிப்பட்டவரை திருமணம் செய்தால் இல்வாழ்க்கை நன்றாக அமையும், என்ன கார் வாங்கலாம்,

எங்கு வீடு வாங்கினால் நம் இருப்பிடத்தில் இருந்து டிராஃபிக்ஜாமில் மாட்டாமல் சென்றுவர வசதியாக இருக்கும் என்பது போன்ற தகவல்களை கணித்துச் சொல்கிறது ‘பிக் டேட்டா’.‘அப்போ பிக் டேட்டா ஜாதகம் கணிக்கிறதா?’ என நினைக்க வேண்டாம். ஜாதகம் கணிக்கவில்லை, தன்னிடம் உள்ளடக்கிய கணக்கில்லா தகவல்களை அலசி ஆராய்ந்து தீர்வளிக்கிறது. அவ்வளவுதான். உதாரணத்துக்கு, ஒரு சேல்ஸ் நிறுவனத்தின் வெப்சைட்டில் ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக தேடிப்பார்க்கிறோம் என வைத்துக்கொள்வோம். எந்த மாடல் வாங்குவது என நாம் சற்றே குழம்பி நிற்கும் வேளையில் நம் விருப்பம் அறிந்து,

‘இந்தவகை போன்கள் நிறைய விற்பனை செய்யப்பட்டுள்ளன…’ என நிறைய மாடல் போன்களைப் பட்டியலிடும். அடுத்து அந்த மாடல் போன்களை வாங்கிய அவர்கள் வாடிக்கையாளர்கள், வாங்கியுள்ள செல்போன் கவர், ஸ்கிரீன் புரொடக்ட்டர், பவர்பேங்க், இயர்போன், செல்போன் ஸ்பீக்கர்ஸ், மெமரிகார்டு, ஓடிஜி ஃப்ளாஷ் டிரைவ், புளூடூத் போன்றவற்றை பட்டியலிடும். அடுத்து ஸ்மார்ட்போன் சம்பந்தப்பட்ட அத்தனை துணை உபகரணங்களுக்கான பிற நிறுவனங்களின் விளம்பரங்கள் பட்டியலிடப்படும்.

இவற்றை எல்லாம் மீறி நாம் எதையுமே வாங்காமல் வெப்சைட்டை விட்டு வெளியேறிவிட்டால் இ-மெயிலில் அந்தப் பொருட்கள் பற்றிய விவரங்களை அனுப்பிவைக்கும். விரும்பிய சாக்லெட்டை வாங்கித் தந்தே ஆகவேண்டும் என அழிச்சாட்டியம் செய்யும் சின்னஞ்சிறு குழந்தைகளைப்போல, அவர்கள் பொருட்களை நாம் வாங்கும்வரை விடாமல் நம்மை நச்சரிக்கும். அப்படியே அந்தப் பொருளை வாங்கிவிட்டால் அந்த நிறுவனத்தின் அடுத்தகட்ட தயாரிப்பை நம் கண்முன் விரிக்கும். ஐபோன் வாங்கியிருந்தால், ஐபேடை காண்பித்து ஆசைகாட்டும்.

ஆண்ட்ராய்ட் போன் வாங்கியிருந்தால் டேப்லெட்டை காட்டி சுண்டி இழுக்கும். இப்படியே விற்பனைச் சங்கிலி போட்டு நம்மை அவர்கள் பிடிக்குள்ளேயே வைத்துக் கொள்வர். இப்படி ஒரு வாடிக்கையாளரின் ஆர்வத்தை பல கோணங்களில் அலசி ஆராய்ந்து விற்பனை செய்யும் சேல்ஸ் நிறுவனங்கள் பிக் டேட்டாவின் பின்னணியில்தான் இயங்குகின்றன. பிக் டேட்டா எனப்படும் இந்தத் தொழில்நுட்பம் நான்காம் தொழிற்புரட்சிக் காலத்தின் உன்னத வளர்ச்சியாக எப்படி அமையும் என்பதை அடுத்த இதழில் பார்ப்போம்...

- காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO காம்கேர் சாஃப்ட்வேர் பிரைவேட் லிமிடெட்